பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் பணி! 7,275 பேருக்கு வாய்ப்பு!



வாய்ப்பு

வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பாங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்.)‘ அமைப்பு செயல்படுகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்திவருகிறது. தற்போது கிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்துத் தேர்வை (சி.டபுள்யூ.இ.-7) ஐ.பீ.பி.எஸ். அறிவித்துள்ளது. இந்தத் தேர்வின் மூலம் மொத்தம் 7,275 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 792 இடங்கள் உள்ளன. மாநில வாரியான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்…


கல்வித் தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப்பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனும் அவசியம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 1.9.2018-ம் தேதியில் 20 முதல், 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2.9.1990 மற்றும் 1.9.1998 ஆகிய
தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பிப்பவர்களுக்குப் பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்தத் தேர்வை அனுமதிக்கும் 19 பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐ.பீ.பி.எஸ். அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் கலந்துகொண்டு பணி நியமனம் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்துகொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் கட்டணத்தை செலுத்தவேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களைப் பதிவிறக்கம் செய்து ஆஃப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

முக்கிய தேதிகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.10.2018. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள்: 8.12.2018, 9.12.2018, 15.12.2018,16.12.2018 முதன்மைத் தேர்வு நடைபெறும் காலம்: ஜனவரி 2019 மேலும் விரிவான விவரங்களை அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மத்திய கலாசார மையம் சார்பில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி!

மத்திய அரசின் கலாசாரம் மற்றும் பயிற்சி மையம் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் 20 நாட்கள் கொண்ட ஒருங்கிணைப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலை மற்றும் கலாசாரம் குறித்து மாணவர்களிடம் கொண்டு செல்லும் வகையில், பயிற்சி வழங்கப்படுகிறது. நடப்புக் கல்வியாண்டில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், தெலங்கானா, அசாம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை தேர்வு செய்து, பரிந்துரை செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

- முத்து