நியூஸ் வே



*விஷால்தான் அடுக்கடுக்காக படங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறார். இப்போது செய்கிற சுசீந்திரனின் படத்தை அடுத்து, ‘சண்டக்கோழி 2’ நடிக்கிறார். உடனே பாண்டிராஜ் டைரக்ட் செய்யும் படத்தையும் தானே தயாரித்து நடிக்கிறார்.

கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் விஷ்ணு கோயில் மிகப் பிரபலம். அங்கே ‘புலி’யின் 2 பாடல்களை ஷூட் செய்யப் போகிறார்கள். இதற்காக விஜய்யுடன் ஸ்ருதி, ஹன்சிகாவும் செல்கின்றனர். சில காட்சிகளை சீனாவிலும் எடுக்க உள்ளனர். சீனா ஷெட்யூலோடு ‘புலி’ நிறைவடைகிறது.

*தமிழில் சரியான படங்கள் அமையாததால், கன்னடம் பக்கம் போயிருந்தார் `சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி. இப்போது பரத் நடிக்கும் `என்னோடு விளையாடு’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

*கமல் ஒரு படத்தை மொரீஷியஸ் தீவில் எடுப்பதாக இருந்தது. அதை இப்போது சென்னையிலேயே எடுக்க முடிவெடுத்து விட்டார்.

‘‘பருவநிலை மாறுவதைவிட இந்த உலகத்திற்கு ஆபத்தான விஷயம் எதுவுமில்லை. நான் அமெரிக்க அதிபராக இருப்பதைவிட உலகத்துக்கு மிக ஆபத்தானது அது!’’
- பாரக் ஒபாமா

‘‘என் ஆட்டத்தைப் பார்க்க வருபவர்கள் மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கின்றனர். அவர்கள் ஸ்டேடியத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே நான் அவுட்டாகி டிரஸ்ஸிங் ரூம் போய்விடுகிறேன்.’’
- விரேந்தர் ஷேவக்

‘‘ ‘நான் உங்கள் வெறித்தனமான ரசிகர்’ எனச் சொல்லும் யாரிடமும் என்னால் இயல்பாகப் பேச முடிவதில்லை. என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல், வெறுமனே திரையில் பார்த்துவிட்டு எனக்கு ரசிகராவது எப்படி சாத்தியம்?’’
- கங்கனா ரணாவத்

*‘சிறுத்தை’ சிவா டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும் படம் இந்த 7ம் தேதி ஆரம்பமாகிவிட்டது. ஏனென்றால் அது வியாழக்கிழமை. சாயிபாபாவிற்கு உகந்த தினம். எனவே ஆரம்பித்துவிட்டார்கள். முதல் நாளிலேயே ‘பாசமலர் தங்கை’ லட்சுமி மேனன் செட்டிற்கு வந்துவிட்டார்.

*கௌதம் மேனன் சிம்புவை வைத்து எடுக்கிற ‘அச்சம் என்பது மடமையடா’ ஷூட்டிங் கனவேகத்தில் நடக்கிறது. ஆனால், இவ்வளவு நாளாக சும்மா இருந்த ஹீரோயின் பல்லவி சுபாஷ், ஒரு இந்தி சீரியலில் ஒரு வருஷத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால் சிம்பு படத்திற்கு ‘நோ’ சொல்லி விட்டார்.

*அமெரிக்காவிலேயே இருந்ததால் தமிழில் பேசுவதை மறந்துவிட்ட பூஜா குமார், இப்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறார். `` `உத்தமவில்லன்’ல அந்த இரணியன் நாடகத்துக்கு 20 நாட்கள் ப்ராக்டீஸ் எடுத்துக்கிட்டோம். மேக்கப், காஸ்ட்யூமோடு ஷாட்டுக்கு ரெடியாகவே 6 மணி நேரம் ஆச்சு’’ என்கிறார் பூஜா.

*லிங்குசாமி எடுத்த ‘பையா’ பெரும் வெற்றி பெற்றது. இப்போது அதே கார்த்தியை வைத்து ‘பையா 2’ எடுக்கும் உத்தேசத்தில் இருக்கிறார் லிங்கு. கொள்கை ரீதியாக இதற்கு ‘ஓகே’ சொல்லிவிட்டார் கார்த்தி.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் `அகிரா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்ற ராய் லட்சுமி, அங்கே ஒரு அதிகாலைப் பொழுதில் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று, மனமுருக வேண்டி வந்திருக்கிறார். அப்படி என்ன வேண்டுதலோ?

*பிரதமர் மோடிக்கு நெருக்கமானாலும், சாமியார் ராம்தேவ் சர்ச்சைகளில் சிக்குவது குறையவில்லை. லேட்டஸ்ட் சர்ச்சை... அவரது தயாரிப்பான ‘புத்ரஜீவக் பீஜ்’ மருந்து. ‘பெயர் ஒன்றே போதாதா? இதை சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும்’ என்கிற ரீதியில் வதந்திகள் கிளம்பிவிட, எதிர்க்கட்சிகள் காய்ச்சி எடுத்துவிட்டன. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களிலேயே இந்த மருந்துக்குத் தடை வர, ‘‘இது குழந்தையின்மையைத் தீர்க்கும் மருந்துதான். மருந்தால் ஆண் குழந்தை பிறக்க வைக்க முடியாது’’ என இப்போது கதறிக் கொண்டிருக்கிறார் ராம்தேவ். 

*சன்னி லியோன் தீவிர கிரிக்கெட் ரசிகை. அவரது பூர்வீகம் பஞ்சாப். அதனால் அவரை தனது பஞ்சாப் அணி ஆடும் ஆட்டத்துக்கு வரவழைத்திருந்தார் ப்ரீத்தி ஜிந்தா. மைதானத்தில் நின்று அவர் உற்சாகப்படுத்தியும்
பஞ்சாப் அணி தோற்றது பரிதாபம்!

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. பெண் குழந்தை என்பதால் மறைந்த டயானாவின் பெயரை ஞாபகார்த்தமாக வைப்பார்கள் என பலரும் ஆரூடம் சொன்னார்கள். பேத்திக்கு தாத்தா - பாட்டி பெயரை சேர்த்தே வைத்திருக்கிறார்கள்... சார்லட் எலிஸபெத் டயானா. புதிய இளவரசியின் பெயர் என்னவாக இருக்கும் என நடந்த சூதாட்டத்தில், எதிர்பார்த்த பெயரையே வைத்துவிட்டதால் தரகர்கள் பலருக்கும் பெரும் நஷ்டமாம்!

*தனுஷ், வெற்றிமாறன் இருவரும் சேர்ந்து ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த இரண்டு சிறுவர்களின் படிப்புச் செலவையும் கடைசி வரை ஏற்றுக்கொள்ள முடிவு எடுத்துவிட்டார்கள்.

*‘புலி’ படத்துக்காக தலக்கோணத்தில் ஷூட்டிங் போயிருந்த தேவி, அங்கு ஷெட்யூல் முடிந்ததும் மூத்த மகள் ஜானவியை அழைத்துக்கொண்டு காளஹஸ்தி கோயிலுக்குப் போனார். சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் இருந்தவர், மகளுக்கு சர்ப்ப தோஷ பரிகார பூஜை செய்தாராம்.

*அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிய ஹிலாரி கிளின்டனின் பயணத்துக்கு பிரேக் போட்டிருக்கிறது, கிளின்டன் அறக்கட்டளைக்கு நிதி பெற்ற விவகாரம். நிதி தந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது ஆச்சரியம். சுமார் 900 பேர். லட்சுமி மிட்டல், கோத்ரெஜ், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், இந்துஜா என தொழிலதிபர்களோடு அரசியல்வாதி அமர்சிங் பெயரும் இந்த லிஸ்ட்டில் இருப்பதுதான் ஆச்சரியம். சுமார் 32 கோடி ரூபாய் தந்திருக்கிறாராம். இந்தியா்-அமெரிக்காஅணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்காக தரப்பட்ட பணம் இது என சுற்றி வளைக்கிறது சர்ச்சை!

*டெல்லி பேருந்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு எதிராக மக்கள் கொதித்தபோது, 2000 கோடி ரூபாயை நிர்பயா நிதியாக ஒதுக்கியது மத்திய அரசு. பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக என ஒதுக்கப்பட்ட அந்த நிதி, இதுவரை பயன்படுத்தப்படவில்லை. இப்போது பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவ என்ன மாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என மக்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. அதன்பிறகே இந்த நிதியை செலவிடுவதாக உத்தேசம்!

*`‘உங்க பழைய மேனேஜர் உங்களை பண விஷயத்தில் ஏமாத்திட்டார்னு கோடம்பாக்கத்தில் ஒரு டாக் இருக்கே?’’ என நந்திதா ஸ்வேதாவிடம் (`அட்டகத்தி’ நந்திதாவை இனிமே ஃபுல் நேம் சொல்லித்தான் கூப்பிடணுமாம்!) கேட்டால், ``இட்ஸ் ட்ரூ! இதுபத்தி விரைவில் ஆதாரங்களுடன் பேசப் போறேன்’’ என்கிறார் செம ஹாட்டாக!

*சொந்த சோகத்தை ஓரமாக வைத்துவிட்டு வழக்கம் போல் பரபரப்பாகிவிட்டார் த்ரிஷா. சுந்தர் சி.யின் ‘அரண்மனை2’வில் கமிட் ஆகியிருக்கிறார். சித்தார்த் - சந்தானம் காம்போ என்பதால், த்ரிஷாவும் காமெடியில் கலக்க இருக்கிறார்.

*கார்த்தி நடிக்கும் `காஷ்மோரா’ படத்தின் ஷூட்டிங் திருவொற்றியூரில் தொடங்கியது. இதில் நயன்தாரா, திவ்யா ஹீரோயின்கள். கார்த்தியின் அப்பாவாக விவேக் நடிக்கிறார்.