ஈகோ மோதலில் கலகலக்கும் டென்னிஸ் கபே!





லண்டன் ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை டேக்ஆஃப் ஆகுமா இல்லை ரன்வேயிலேயே ரன் அவுட் ஆகிவிடுமா தெரியவில்லை. நட்சத்திர வீரர்களிடையே ஏற்பட்டுள்ள ஈகோ மோதலால் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தடம் புரண்டு கிடக்கிறது.

‘‘லண்டன் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி இணைந்து களமிறங்குவார்கள்’’ என்று இந்திய டென்னிஸ் சங்கம் உற்சாகமாக அறிவித்தது. ஆனால், இந்த உற்சாகம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. ‘‘பயசுடன் ஜோடி சேர்ந்து விளையாடக் கட்டாயப்படுத்தினால், ஒலிம்பிக்கில் இருந்தே விலகிவிடுவேன்’’ என்று பூபதி பெரிய குண்டைத் தூக்கிப் போட, 9 புள்ளி ரிக்டராய் இந்திய டென்னிஸ் சங்கம் நடுங்கியது. ‘‘பூபதி இல்லாவிட்டால் பரவாயில்லை... பயசுடன் போபண்ணா சேர்ந்து விளையாடுவார்’’ என்று சங்கம் சமாளித்தது. இதற்கும் பதிலடியாக, பயஸ் எதிர்ப்பு தீர்மானத்தை போபண்ணாவும் வழிமொழிய... அடுத்தடுத்து அதிர்வலைகள்!

‘‘ரெண்டு டீமா அனுப்புங்கப்பா... பயசுடன் ஜூனியர் வீரர் யாராவது விளையாடட்டும்’’ என்று பஞ்சாயத்து செய்தார் விளையாட்டு அமைச்சர் அஜய் மேக்கன். ‘ஆகா... நம்மள வெச்சு காமெடி பண்றாங்களே’ என்று சிலிர்த்த பயஸ், ‘‘விளையாடினா பூபதி, இல்லை போபண்ணாவோடதான்... சின்னப் பசங்களோட எல்லாம் ஜோடி போட முடியாது’’ என்று தன் பங்குக்கு குட்டையைக் குழப்பினார்.
கலப்பு இரட்டையர் பிரிவிலும் சானியா மிர்சாவோடு ஜோடி சேர்வது யார் என்பதிலும் இடியாப்பச் சிக்கல். தரவரிசை அடிப்படையில் பயஸ் - சானியா ஜோடி நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாடலாம். பூபதி - சானியாவுக்கு அந்த அளவுக்குப் புள்ளிகள் இல்லை. ஆனால், இந்த ஜோடி இணைந்து இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறது.

‘‘எனக்கும் பயசுக்கும் ஒத்து வராது. அவரோட பேசியே மாமாங்கம் ஆயிடுச்சு. ஒலிம்பிக்கை மனதில் வைத்துத்தான் நானும் போபண்ணாவும் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறோம். கடைசி நேரத்தில் எங்களைப் பிரிக்க நினைப்பது சரியல்ல’’ என்கிறார் பூபதி.

‘‘தேசத்துக்காக ஒலிம்பிக் பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்பது என் கனவு. அந்தக் கனவு நனவாக வேண்டும் என்பதற்காக, பாகிஸ்தானின் அல் குரேஷியோடு எனக்கு இருந்த சூப்பர் பார்ட்னர்ஷிப்பை தியாகம் செய்துவிட்டு பூபதியோடு சேர்ந்து விளையாடி வருகிறேன். அப்படி இருக்க, பயசுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்பது போபண்ணாவின் வாதம்.

கடந்த 96ம் ஆண்டு காயங்களுடன் விளையாடி இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கித் தந்தவர் பயஸ். அவரது அர்ப்பணிப்பை யாரும் சந்தேகிக்க முடியாது. அதே சமயம் தான் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

பயஸ் - பூபதி சேர்ந்து களமிறங்கினால் ஒலிம்பிக் பதக்கம் கிடைத்து விடும் என்று டென்னிஸ் சங்கம் நம்புவது சரியான தமாஷ். அவர்கள் நம்பர் 1 ஜோடியாக இருந்த சமயத்திலேயே அது பகல் கனவு என்பது நிரூபணமாகிவிட்டது. ஏற்கனவே நான்கு வாய்ப்பை வீணடித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. தாம்பத்தியத்தையே தவிர்த்து வரும் தம்பதிக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்று நம்புவதை என்னவென்று சொல்வது?

உலக அளவில் பிரபலமான இந்த அனுபவ வீரர்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ப முதிர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் இந்தக் குழப்பத்தை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். இந்தியாவே கொந்தளித்த பிறகு இந்திய டென்னிஸ் சங்கம் இறுதி முடிவு எடுத்திருக்கிறது. பூபதி - போபண்ணா ஜோடியைப் பிரிக்கவில்லை. பயசுடன் விஷ்ணுவர்தனைச் சேர்த்து இரண்டாவது ஜோடியாக அனுப்புகிறார்கள். கலப்பு இரட்டையரில் சானியாவுடன் பூபதி ஜோடி போடவில்லை. பயஸ் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பா.சங்கர்