5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம்... ஈரானில் என்ன நடக்கிறது..?



ஆம். உலகையே அதிர வைத்திருக்கிறது இந்த நிகழ்வு. அதுவும் சரியாக உலக மகளிர் தினத்தை பிரபஞ்சமே கொண்டாடி முடித்த மறுநாளே இந்தச் செய்தி கசிந்தது எப்படிப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு சோறு பதம்.மாணவிகள் கல்வி கற்பதை நிறுத்துவதற்காக, ஈரான் நாட்டுப் பள்ளியில் அவர்களின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலக்கப்பட்டு வந்தது என்பதுதான் அந்தச் செய்தி.

கடந்த பல மாதங்களாக இந்த விஷயம் நடந்து வந்தபோதிலும், ஈரானில் பத்திரிகைகளுக்கு உள்ள கட்டுப்பாடுகளால் மிகத் தாமதமாக இந்தச் செய்தி வெளியே கசிந்திருக்கிறது.

உடனே சட்டென்று பற்றிக் கொண்டது. ஈரானிய மற்றும் மேற்கத்திய செய்தி ஊடகங்கள் இதைப் பற்றி பரபரப்பாக விவாதிக்கத் தொடங்கிவிட்டன.
அந்த ஊடகங்கள் தரும் செய்திகளின்படி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது.

வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அவர்களில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவிகளின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

உடனே பாதிப்பு தெரியாத வகையில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் மெல்ல மெல்ல பள்ளி வளாகத்துக்குள் புகைவடிவில் பாய்ச்சப்பட்டிருப்பதாக மேற்கத்திய பத்திரிகைகள் சொல்கின்றன. அப்படியாக சுமார் 5000 மாணவிகளின் உடலில் இப்படி விஷம் கலக்கப்பட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் சொல்கின்றன.
இந்த இடத்தில் அடுத்தடுத்து கேள்விகள் முளைப்பதை தவிர்க்க முடியாது. பள்ளி செல்லும் வயதில் இருக்கும் மாணவிகளுக்கு யாராவது விஷம் கொடுப்பார்களா? அந்த அளவுக்கு அவர்கள் மீது கோபம் கொண்டிருப்பது யார்? அந்த கோபத்துக்கு என்ன காரணம்..?

இதைப்பற்றி தெரிந்துகொள்ளும் முன் ஈரானில் பெண்களின் நிலையைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. இப்போது ஆப்கானிஸ்தானில் எப்படி பெண்கள் பல்வேறு விதங்களில் அடக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதேபோல் ஈரானிலும் ஒரு காலத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருந்தது. ஆனால், காலம் காலமாக பெண்கள் அமைப்பினர் செய்த போராட்டங்களால் 2000ம் ஆண்டுமுதல் இந்த நிலை கொஞ்சம் மாறத் தொடங்கியது.

1976ம் ஆண்டில் 26 சதவீத பெண்கள் மட்டுமே படிப்பறிவுள்ளவர்களாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் இது 85 சதவீதமாக உயர்ந்தது. 2011ம் ஆண்டுமுதல் ஈரானிய பல்கலைக்கழகங்களில் ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் படித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.இப்படி படிப்பறிவு கிடைத்ததால் பெண்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக முகத்தை மறைத்துக்கொள்ளும் ஹிஜாப்பை ஏன் அணிய வேண்டும் என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்திருப்பதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் பட்டியலிடுகின்றன.

இப்படி பெண்கள் கேள்வி கேட்பது பழமைவாதிகளுக்கு பிடிக்கவில்லை என்றும், ஈரானில் மத அடிப்படைவாத ஆட்சி நடப்பதால் ஆட்சியாளர்களைவிட மத குருமார்களுக்கு அங்கே அதிகாரம் அதிகம் என்றும், அவர்களின் சொல்லைக் கேட்டு பெண்கள் ஹிஜாப்பை அணியவேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியது என்றும், ஆனால், கல்வி கற்ற சுதந்திரமான சிந்தனை கொண்ட ஈரானிய புதிய தலைமுறை பெண்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அதே ஊடகங்கள் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகின்றன.
இதற்கு உதாரணமாக மாஷா அமினி என்ற பெண்ணை சுட்டிக் காட்டுகிறார்கள். பெண் சுதந்திரத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஈரானில் நிலவும் சூழலுக்கு எதிராக தன் எதிர்ப்பை பகிரங்கமாக வெளிப்படுத்தியவர் மாஷா அமினி.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹிஜாப்பை கட்டாயப்படுத்துவதை எதிர்த்து பொது வெளியில் ஹிஜாப் அணியாமல் போராடிய மாஷாவை கைது செய்த ஈரானிய போலீசார், சிறையில் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாஷா, பின்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹிஜாபுக்கு எதிராக இருந்த பெண்கள் மத்தியில் கதாநாயகியாக மாறினார் மாஷா. போலீசார் தாக்கியதால்தான் மாஷா இறந்தார் என்று கூறி சாலைகளில் இறங்கி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தாக்கியதால்தான் மாஷா இறந்தார் என்று போராட்டக்காரர்கள் கூற, கைது செய்யப்பட்டபின்னர் அங்கிருந்த பெண்களுடன் இருந்தபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், இக்கருத்தை ஏற்காத மாணவிகளும், பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவிகள், அயத்துல்லா அலிகாமெனியின் படத்தை தீவைத்து எரித்துள்ளனர். கத்தாரில் கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில்கூட அந்த போராட்டம் எதிரொலித்தது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, உலகக் கோப்பையின்போது ஈரான் வீரர்கள் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். இதனால் சர்வதேச அளவில் ஈரான் மக்களின் போராட்டம் பேசப்பட்டது. மிகக் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த போராட்டத்தை அரசு கட்டுப்படுத்தியது.

என்றாலும் நீறுபூத்த நெருப்பாக பெண்களின் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதை சற்றும் விரும்பாத பழமைவாதிகள், இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தது மாணவிகள்தான் என்பதால் பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று வலியுறுத்தத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்துதான் கல்வி கற்கும் மாணவிகளின் உடலில் விஷம் செலுத்தப்பட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் சொல்கின்றன. பள்ளிகளுக்குள் விஷ வாயுவை கொஞ்சம் கொஞ்சமாகப் பாய்ச்சி, மாணவிகள் உடல்நிலையை பழமைவாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கச் செய்துள்ளதாக அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன.

5 ஆயிரம் மாணவிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த மக்கள் போராட்டம், ஈரானில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. “மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். வேண்டுமென்றே மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்...” என அழுத்தம்திருத்தமாக சொல்லியுள்ளார் அயத்துல்லா அலிகாமெனி.  

உண்மையிலேயே ஈரான் நாட்டில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு சிறிது சிறிதாக விஷம் கொடுக்கப்பட்டதா அல்லது மேற்கத்திய ஊடகங்கள் இதை ஊதி பெருக்கி ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிடுகிறதா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.ஏனெனில் கனிம வளங்களை சூறையாட சம்பந்தப்பட்ட நாட்டின் மீது போர் தொடுக்க
பொய்யான தகவல்களை உலக மக்கள் மத்தியில் பரப்புவது கடந்த சில ஆண்டுகளாக அரங்கேறி வரும் விஷயம்.

எனவே, உண்மை என்னவென்று தெரியாமல் எந்த முடிவுக்கும் வரக் கூடாது என சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேநேரம் அந்தக் குற்றச்சாட்டு உண்மையெனில் சம்பந்தப்பட்ட ஈரான் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

என்.ஆனந்தி