ரத்த மகுடம்-150



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சுவாசிப்பதில் தடை ஏற்பட்டு கரிகாலனுக்கு மூச்சுத் திணறியது. கரங்களால் தன் நாசியையும் வாயையும் அழுத்தமாக மூடியிருந்த கச்சையை உதற முற்பட்டான்.‘‘ம்ஹும்... கூடாது...’’ பின்புறமிருந்து சிவகாமி கட்டளையிட்டாள். அக்குரலில் வழிந்த கொஞ்சல் கெஞ்சலாக இருக்கவே கரிகாலன் அதற்கு கட்டுப்பட்டு தன் கரங்களை உயர்த்தவில்லை. மாறாக முகத்தை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி, அழுத்திய கச்சையை நெகிழ்த்தினான்.
இப்படி அவன் செய்வான் என்று எதிர்பார்த்த சிவகாமி, தன் இரு கைகளாலும் கச்சையை இழுத்தாள்.

‘அப்படியா...’ மனதுக்குள் புன்னகைத்த கரிகாலன், தன் சுவாசத்தை நிறுத்தினான். பிராணாயாம பயிற்சி அதற்கு உதவியது.‘‘இதுதான் வீரருக்கு அழகு...’’ என்றபடியே பின்புறமாக கரிகாலனை நெருங்கிய சிவகாமி, அவன் நாசியையும் வாயையும் இறுகப் பற்றியிருந்த தன் கச்சையைத் தளர்த்தினாள்.

கரிகாலன் தன் கரங்களை உயர்த்தி அதைப் பற்றினான். கச்சையைப் பிடித்திருந்த தன் கரங்களை விடுவித்துவிட்டு அவன் முதுகில் ஒன்றினாள்.
அவன் பார்வை கச்சையின் மீது படிந்திருந்தது.

கரிகாலனின் கழுத்துக்கும் தோளுக்குமான இடைவெளியில் தன் முகத்தை வைத்த சிவகாமியின் நயனங்களும் அந்தக் கச்சையைப் பார்வையிட்டன. ‘‘நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போரில் சீனர்களின் பங்கும் இருக்கப் போகிறதல்லவா..? அதை உணர்த்தத்தான் இந்தக் கச்சையில் என்ன தீட்டப்பட்டிருக்கிறதோ அதேபோல் சீனப் பட்டில் தீட்டி சாளுக்கிய இளவரசனிடம் வழங்கினேன்!’’கரிகாலன் எதுவும் சொல்லவில்லை. அவன் உதட்டில் புன்னகை மட்டும் தவழ்ந்தது. ‘‘கச்சையில் இருக்கும் இப்புள்ளிகள் அனைத்தும் நம் பல்லவ மன்னர் ஆயுதங்களைத் தயாரித்த இடங்கள் அல்லவா..?’’ ‘‘ம்...’’ முகத்தைத் திருப்பி அவன் கன்னத்தில் தன் உதட்டைப் பதித்தாள்.

‘‘சற்றே இடைவெளி விட்டு இருக்கும் இவ்விரண்டு புள்ளிகளும் எந்த பிரதேசத்தை உணர்த்துகின்றன..?’’
சிவகாமியின் கருவிழிகள் இரண்டும் கண்களின் ஓரத்துக்குத் தாவின. அவன் சுட்டிக் காட்டிய இடங்களைக் கண்டதும் நாணின. ‘‘அவை புள்ளிகளல்ல...’’ ‘‘புள்ளிகள் போல் தெரிகிறதே...’’‘‘தெரியும்... தெரியும்...’’ அவன் சிரசில் குட்டினாள். ‘‘இவை...’’ நகைக்காமல் நகைத்தபடி கரிகாலன் இழுத்தான்.

தன் கொங்கைகளை அவன் முதுகில் நகர்த்தினாள்.
கரிகாலனின் உடல் சிலிர்த்தது. ‘‘புரிந்தது...’’
‘‘என்ன புரிந்தது..?’’
‘‘இவை புள்ளிகளல்ல...’’‘‘ம்...’’
‘‘பள்ளங்கள்..!’’
சொன்னவனின் உதடுகளைச் சுண்டினாள். ‘‘எவ்வளவு முக்கியமான விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்... உங்கள் கவனம் எங்கு குவிகிறது..?’’
‘‘குவிந்த இடத்தில்தான்!’’‘‘போதும்...’’ சிணுங்கினாள்.அந்த சிணுங்கலில், மேலும் மேலும் கேட்கும் ஆவல் இருப்பதை கரிகாலன் உணர்ந்தான். அவனும் மேற்கொண்டு உரையாடலை நகர்த்தவே விரும்பினான். ஆனாலும் கடமை அதைத் தடுத்தது.இமைகளை மூடியபடி திரும்பினான். கன்னங்கள் சிவக்க... நாசி அதிர... சிவகாமி தன் இடுப்பில் கைகளை வைத்து அவனை உற்றுப் பார்த்தாள். ‘‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் எவ்வளவு நல்ல பிள்ளையாக மாறிவிட்டீர்கள்!’’‘‘பால் குடிக்க ஆசைதான்...’’கண்களை விரித்தாள்.

‘‘அதற்கான நேரம் வரும்போது குடித்துக்கொண்டே இருப்பேன்...’’ என்றபடி கச்சையின் இரு முனைகளையும் தன்னிரு கைகளிலும் பிடித்தபடி அவள் முன்னால் வந்தான். சிவகாமியின் சுவாச அளவு அதிகரித்தது. எதுவும் சொல்லாமல், அவனையும் தடுக்காமல் கவனித்தபடியே இருந்தாள்.
அவள் தேகத்தைத் தீண்டியது அவளது சொந்த கச்சைதான்... அவள் அணிந்திருந்த கச்சைதான். மற்றபடி அவனது விரல் நகம் கூட அவளைத் தீண்டவில்லை. ஆனாலும் அவனது உடலே தன் அங்கங்களைத் தீண்டுவது போலவும் அதில் விளையாடுவது போலவும் உணர்ந்தாள்.

இத்தனைக்கும் அவன் இமைகள் மூடியிருந்தன. ஆனாலும் அவன் கண்கள் தன் மேனியை அலசுவது போலவே அவளுக்கு இருந்ததால் அடிவயிறு குழைந்தது... முகத்திலிருந்து கீழே இறங்கிய கச்சை, அவள் கழுத்து வழியாகப் பயணப்பட்டு தோளுக்கு வந்து, அப்படியே பள்ளத்தாக்கில் இறங்கி
குன்றுகளில் நிலைத்தது.‘‘நீ குறிப்பிடாத... ஆனால், என் பார்வைக்குத் தெரிந்த இரு புள்ளிகளும்... அதாவது பள்ளங்களும்... சரியான இடத்தில் புதைந்துவிட்டதா..?’’அவன் நாசியைத் திருகினாள்.

சிரித்தபடியே அவளைத் தன் மார்பில் சாய்த்தவன் இமைகளைத் திறந்து அவள் முதுகில் கச்சையை முடிச்சிட்டான்.
‘‘மூன்று முடிச்சுகளைப் போட்டுவிட்டீர்களா..?’’ அவன் மார்பில் ஒன்றிய படியே முகத்தை மட்டும் உயர்த்தி கரிகாலனின் கண்களை ஏறிட்டாள்.
‘‘அதுதானே தமிழர்களின் வழக்கம்!’’‘‘உங்கள் வழக்கம் என்று சொல்லுங்கள்... உங்கள் கைகளில் என் கச்சை கிடைக்கும்போதெல்லாம் இப்படித்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறீர்கள்...’’‘‘ஏன்... பெண்களாகிய நீங்கள் கச்சையை முடிச்சிட மாட்டீர்களா..?’’
‘‘செய்வோம்... ஆனால், சுவாசிக்க சிரமமாக இருக்கக் கூடாதே என்று ஒரு முடிச்சுதான் போடுவோம்...’’
‘‘அப்படி நீங்கள் செய்வது சுவாசிப்பதற்காக அல்ல...’’ கரிகாலனின் கண்கள் நகைத்தன.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது சிவகாமிக்கும் புரிந்தது. ஆனாலும் அவனது உச்சரிப்பில் அதைக் கேட்க நினைத்தாள். ‘‘வேறு எதற்காக..?’’
‘‘முடிச்சுகள் என்றால் அவற்றை அவிழ்க்க ஆண்களுக்கு நேரமாகும்...’’‘‘ம்...’’‘‘முடிச்சு என்றால் அவிழ்ப்பது சுலபம்!’’‘‘பிறகு ஏன் நீங்கள் எனக்கு எப்பொழுதும் மூன்று முடிச்சுகளைப் போடுகிறீர்கள்..?’’‘‘என்னை மீறி நானே அவிழ்க்க முற்படக் கூடாது என்பதற்காக!’’ சொன்னவனை காதல் பொங்கப் பார்த்தாள்.

நேசம் பொங்க அப்பார்வையை எதிர்கொண்டவன், தன்னிரு உள்ளங்கைகளாலும் அவள் வதனத்தை ஏந்தி குனிந்தான்.
தன்னையும் அறியாமல் உதடுகளைப் பிரித்தாள்.அதை தன் உதட்டால் ஒற்றினான். கவ்வினான். உமிழ்நீர்கள் சங்கமித்தன. கால் கட்டைவிரலால் தரையை ஊன்றியபடி சிவகாமி நிமிர்ந்தாள். உயர்ந்தாள். கொங்கைகள் அவன் மேல்வயிற்றை அழுத்தியபடியே மேல் நோக்கி நகர்ந்தது. இமைக்கும் பொழுதில் அவளது பின்னெழுச்சிகளைப் பற்றியவன், அப்படியே அவளைத் தூக்கினான்.

சிறைப்பட்ட தன் உதடுகளை விடுவிக்காமல் அவனது இடுப்பை தன் கால்களால் சுற்றி வளைத்தாள். ஏந்திய வண்ணமே ஒரு சுற்று சுற்றினான்.சர்ப்பங்கள் மூர்க்கத்துடன் பின்னிப் பிணைந்தன.ஈறுகளை அவன் சுவைத்த கணத்தில் அவன் குழலைப் பிடித்து இழுத்தாள்.
கரிகாலன் தடுமாறினான். சுதாரிக்க அவன் விரும்பவுமில்லை. சுதாரிக்க அவள் இடம் தரவுமில்லை.

பிணைந்த நிலையிலேயே இருவரும் உருண்டார்கள். உருண்டபடியே பிடியைத் தளர்த்தினார்கள்.சிரித்தான். சிரித்தாள். சிரித்தார்கள்.குப்புறக் கவிழ்ந்தபடி சிவகாமி மூச்சு வாங்கினாள்.அவள் பாதங்களை முத்தமிட்டபடியே கணுக்காலுக்கு வந்தவன், வான் நோக்கி உயர்ந்திருந்த அவளது பின்னெழுச்சியில் தன் பற்களைப் பதித்தான்.கழுத்தை அவள் உயர்த்த... இரு பாதங்களும் உயர... அவளது பின்னெழுச்சி முடிந்து முதுகு தொடங்கும் இடத்தில் தன் தலையை வைத்து கரிகாலன் படுத்தான். நாசி வழியாக மட்டுமல்லாமல் உதடுகளைப் பிரித்தும் இருவரும் சுவாசித்தார்கள்.
‘‘இது போருக்கான நேரம்...’’ சிவகாமி முணுமுணுத்தாள்.

‘‘ஆம்; இது யுத்த காலம்தான்...’’ முகத்தைத் திருப்பி அவள் பின் இடையில் கரிகாலன் உதடுகளைப் பதித்தான். ‘‘படைகள் முன்னோக்கி வருகின்றன...’’ சொன்னபடியே தன் கையை முன்னோக்கிச் செலுத்தி, தரையில் அழுத்திக் கொண்டிருந்த கொங்கையின் பக்கவாட்டை கச்சையுடன் சேர்த்து பற்றினான். ‘‘ஈட்டிகள் குத்திட்டு பாயக் காத்திருக்கின்றன... ஆனால்..?’’
‘‘அச்சமாக இருக்கிறதா..?’’

‘‘பயமா... எனக்கா..?’’
‘‘ஆம்... போரில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம்...’’
‘‘இம்மியளவும் இல்லை...’’
‘‘பிறகேன் தாமதம்...’’ உயர்த்திய தலையை தரையில் பதித்தாள். ‘‘பாய வேண்டியதுதானே..?’’
‘‘பாயட்டுமா..?’’கீழிருந்த புற்களின் நுனியைக் கடித்துத் துப்பினாள். ‘‘எதிரியைக் குறைத்து எடை போடுகிறீர்கள்...’’
‘‘ஏன்... இந்த எதிரி என்னை வீழ்த்திவிடுவாளா..?’’ கேட்டவன் அவள் பின் இடையில் தன் நாக்கினால் கோடு கிழித்தான்.
அந்த இடத்திலிருந்த சிவகாமியின் கண்களுக்குப் புலனாகா சிறு ரோமங்கள் பிளந்தன. ‘‘அப்படித்தான் சபதம் செய்திருக்கிறாள்...’’
‘‘அந்த சபதத்தை உடைக்க விரும்பவில்லை சிவகாமி...’’

கேட்டவளின் வதனத்தில் இனம்புரியாத மொட்டுகள் மலர்ந்தன. ‘‘உன்னை ஜெயிக்க என்றுமே நான் நினைத்ததில்லை... உன்னை வென்று கிடைக்கும் இன்பத்தை விட தோற்று கிடைக்கும் நிம்மதி பெரிது... இதுவே என் ஆயுளையும் நீட்டிக்கும்...’’
புரிந்தது. ஆனாலும் ‘‘புரியவில்லையே...’’ என்றாள்.

‘‘தோற்கும்போதுதானே ஜெயிக்க
வேண்டும் என்று தோன்றும்...’’
‘‘ம்...’’‘‘அதனால்தான் உன்னிடம் தோற்க விரும்புகிறேன்... அப்பொழுதுதானே மீண்டும் மீண்டும் போர் தொடுக்க முடியும்... நீயும் திரும்பத் திரும்ப என் மேல் பாய முடியும்..?’’‘‘அதுசரி...’’ கலகலவென நகைத்தபடியே, உயர்த்திய தன்னிரு கணுக்கால்களையும் ஒன்றின் மீது மற்றொன்று மோதும்படி செய்தாள். சலங்கைகள் ஆனந்தக் கூத்தாடின.

‘‘ஆமாம்... எல்லாம் சரிதான்... ஆனால், எல்லாம் சரியான பிறகுதான்...’’ பதிலுக்கு நகைத்தபடியே தன் முகத்தைத் திருப்பினான்.சிவகாமியின் இரு பாதங்களும் தென்பட்டன.அதுவரை தன்னைப் பிணைத்திருந்த இன்பச் சங்கிலியில் இருந்து கணத்தில் கரிகாலன் விடுபட்டான்.

அவன் கண் முன் தெரிந்தது சிவகாமியின் பாதங்கள் மட்டுமல்ல. சாளுக்கிய தேசத்துக்குள் நுழைந்து எந்தெந்த இடங்களில் இருந்து, தான் பொக்கிஷங்களைக் கைப்பற்றி பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரிடம் கொடுக்கப் போகிறோம் என்ற அறிவிப்புப் பலகைகளும்தான்.
ஆம்... அவளது இரு பாதங்கள்தான் அறிவிப்புப் பலகை. தொண்டை மண்டலத்தில் இருந்து புறப்பட்டவள் தன் பாதத்தைக் காண்பித்துவிட்டுத் தான் சென்றாள். பாதங்களில் இயற்கையாக இருந்த ரேகைகளுடன் செயற்கையாக அவள் வரைந்திருந்த ரேகைகளும் அப்பொழுது தென்பட்டன.

இருவிதமான ரேகைகளும் இரண்டறக் கலந்ததில் விரிந்தது தக்காண நிலப்பரப்பின் வரைபடம்தான்...
இதோ இப்பொழுது செயற்கையான ரேகைகள் பாதத்தில்... பாதங்களில்... அவள் வரைந்திருக்கவில்லை. இயற்கையான ரேகைகள் மட்டுமே காட்சி தருகின்றன... கூடவே...சட்டென அவள் பின்னெழுச்சியில் உருண்டு அவள் பாதங்களைப் பற்றினான். எழுந்து அவள் கால் கட்டை விரலைக் கடித்தான்.
‘‘என்ன இது... நீங்கள் போய்...’’ கால்களை உருவ முயன்றாள்.

கணுக்காலை இறுகப் பற்றி தடுத்தான்.‘‘பொறு...’’ சொன்ன கரிகாலனின் குரலில் காதல் இல்லை.சிவகாமியின் புருவம் உயர்ந்தது. அவனது உச்சரிப்பில் அவளும் இயல்புக்குத் திரும்பியிருந்தாள். அதை வினா வழியாக அவனுக்குத் தெரியப்
படுத்தவும் செய்தாள். ‘‘கட்டை விரல் எதை உணர்த்துகிறது..?’’புன்னகைத்தான். ராட்சஷி! நம் அகத்தை அப்படியே பிரதிபலிக்கும் அரக்கி! ‘‘சாளுக்கியர்களின் முக்கியமான சிற்றரசை...’’‘‘கங்கர்களைத்தானே குறிப்பிடுகிறீர்கள்! அங்குதான் அடுத்து செல்கிறேன்...’’
‘‘அதற்கு அவசியமில்லை... எனவேதான் கட்டை விரலைக் கடித்தேன்...’’
‘‘ஏன்..?’’

‘‘இக்கணத்தில் கங்கர்கள் நம்மவர்கள்...’’‘‘அப்படியானால் பல்லவர்கள் சார்பாக நின்று சாளுக்கியர்களை இப்போரில் அவர்கள் எதிர்க்கப் போகிறார்களா..?’’‘‘இல்லை... எப்பக்கமும் சாராமல் அமைதி காக்கப் போகிறார்கள்...’’
‘‘ஏன்..?’’நிதானமாகச் சொன்னான் கரிகாலன். ‘‘கங்க இளவரசி ரங்கபதாகையை நம் பல்லவ இளவரசர் இராஜசிம்மர் மணக்கப் போகிறார்! புலவர் தண்டி மணம் பேசி முடித்துவிட்டார்...’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்