இராணுவ தளபதி... பாகிஸ்தான் அதிபர்... மரண தண்டனைக் குற்றவாளி! முஷாரஃப் கடந்து வந்த பாதைகள்!



இஸ்லாமாபாத் சிறப்பு நீதி மன்றம், பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அதிபருமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப்புக்கு ராஜத்துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்திருப்பது அரசியல் அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
2001 - 2008 கால கட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ம் ஆண்டு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் பாகிஸ்தான் அரசியலமைப்புக்கு ராஜத்துரோகம் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

முஷாரஃப் இப்போது துபாயில் தலைமறைவாக வசித்துவருகிறார். உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என்கிறார்கள். முஷாரஃப்பின் வாழ்க்கை பல அரசியல் தலைவர்களின் வாழ்வைப் போலவே ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. எளிய குடும்பத்தின் சராசரி குழந்தையாக வாழ்க்கையைத் தொடங்கிய முஷாரஃப் ஒரு போரையே நடத்தி தளபதி அந்தஸ்துக்கு உயர்ந்தார். அங்கிருந்து மேலும் உயர்ந்து பாகிஸ்தானின் அதிபராகவும், ஒரு சர்வாதிகாரியாகவும் உருவெடுத்தார்.

ஒரு கட்டத்தில் முஷாரஃப்தான் பாகிஸ்தான். பாகிஸ்தான் என்றால் முஷாரஃப் என்ற நிலை இருந்தது. அவ்வளவு அதிகாரமிக்க அதிபராக இருந்தவர், ஜனநாயக சக்திகளிடம் தோற்றுப் போய் நாட்டை விட்டே ஓடினார். இப்போது, உடல்நிலை குன்றி சிகிச்சை எடுத்துவரும் நிலையில் மரண தண்டனைக் குற்றவாளியாக, ராஜத்துரோகி யாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பிறந்ததிலிருந்து ஏற்றம் கண்டுவந்த அவர் வாழ்வு, கடந்த இரு தசாப்தங்களாக நிச்சயமற்றதாக, கடும் சரிவுகள் நிறைந்ததாக மாறியிருக்கிறது.
பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டில் அரசியலமைப்பை மீறியதாகவும், அதனால் ராஜத்துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரே நபர் முஷாரஃப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த் முஷாரஃப்? ஓர் இராணுவத் தளபதி அதிபரானது எப்படி?
1943ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி தில்லியில் உள்ள உருது மொழி பேசும் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் பர்வேஸ் முஷரஃப். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தது முஷாரஃப் குடும்பம்.இராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர் ஒரு கட்டத்தில் நவாஸ் ஷெரீஃப்புக்கு நெருக்கமானவராக மாறினார். இதனால், 1998ம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் ஆட்சியின்போது இராணுவத் தளபதியாக உயர்த்தப்பட்டார்.

பாகிஸ்தான் இராணுவத்தை சுயேச்சையாக இயக்க விரும்பினார் முஷாரஃப். இதனால் அதிபர் நவாஸ் ஷெரீஃப்புக்கும் முஷாரஃப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாட்டின் முன்னேற்றத்துக்கு சர்வாதிகாரப் பாதையே சிறந்தது என்று கருதிய முஷாரஃப்,
அரசின் மீது விமர்சனங்கள் வைக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் நவாஸின் புகழ் சரிவிலிருந்தது.

நாட்டில் கடுமையான பொருளாதாரப் பிரச்னைகள் தலைவிரித்தாடின. காஷ்மீர் குழப்பம் ஒரு பக்கம் பெரும் தலைவலியாக இருந்தது. தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்குமான கள்ளக் கூட்டு தேசத்தில் பல உள்நாட்டுக் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தது. காஷ்மீர் பகுதியில் ஊடுருவி அதனைத் தனதாக்கிக்கொள்ள பாகிஸ்தான் எடுத்த முயற்சியும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்த தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள இராணுவம் விரும்பவில்லை. இப்படி, பல்வேறு தளங்களில் நவாஸ் தோல்வியைச் சந்தித்திருந்தார்.
மறுபுறம் இராணுவத்துக்கும் அரசுக்குமான உறவு முறுகலடைந்தது. முஷாரஃப்பை இராணுவத் தளபதி பதவியிலிருந்து நீக்கி, வேறொருவரை நியமிக்க நவாஸ் முயன்றார். அந்தச் சமயத்தில்தான் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடியாக அரசைக் கைப்பற்றினார் ஜெனரல் முஷாரஃப்.
முஷாரஃப்புக்கு ஆட்சிக் கட்டில் அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை. உலக அரங்கில் இந்த நகர்வு ஜனநாயகத்துக்கு எதிரானதாகப் பார்க்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மறுபுறம் பாகிஸ்தானிலேயே இதற்குக் கடும் எதிர்ப்புகள் உருவாகின.
1999ம் ஆண்டே ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்துக்கு வந்த முஷாரஃப்பை படுகொலை செய்ய பல்வேறு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் இருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பிப் பிழைத்தார் முஷாரஃப்.

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலக அரசியல் சூழல் மாற்றமடைந்தது. அப்போதைய அதிபர் ஜூனியர் ஜார்ஜ் புஷ், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ ஒன்றை அறிவித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் முஷாரஃப்புக்கு ஏற்பட்டது. ஏனெனில், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று முஷாரஃப் அறிவித்தது தாலிபன் மற்றும் அல் கொய்தாவுக்கு எதிராகத்தான்.

மறுபக்கம், பாகிஸ்தான் இராணுவத்துக்கும் இந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பும் இருந்து வந்தது. தாலிபன் மற்றும் அல்கொய்தா ஆதரவாளர்களை முஷாரஃப் அரசு ஒடுக்கத் தவறிவிட்டதாக நேட்டோ மற்றும் ஆஃப்கன் அரசு குற்றஞ்சாட்டின.

2011ம் ஆண்டு அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், மிலிட்டரி அகாடெமி அருகே சுட்டுக் கொல்லப்பட்டபோது, மீண்டும் முஷாரஃப்பை நோக்கிக் கேள்விகள் எழுந்தன. ஆனால், தீர்க்கமாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார் அவர். பின்லேடன் இங்கு இருந்தது தமக்குத் தெரியவே தெரியாது என்றார்.

முஷாரஃப் அதிகாரத்திலிருந்தபோது, நீதித்துறையுடன் பல்வேறுமுறை முரண்பட்டிருக்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் தலைவராக இருந்தபோது, இராணுவத்துக்கும் தளபதியாக இருக்க விரும்பினார். இதனால், நீதித்துறைக்கும் இவருக்கும் இடையே கடும் முரண்பாடு எழுந்தது.

2007ம் ஆண்டு பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் முகம்மது சவுதிரியைப் பதவியிலிருந்து நீக்கினார். இது, நாடெங்கும் போராட்டம் வெடிக்கக் காரணமாக அமைந்தது. தொடர்ந்து தேர்தலில் முஷாரஃப் தோற்கவும் வழிவகுத்தது.

முஷாரஃப்பின் தோல்விக்கு இது மட்டுமே காரணம் இல்லை. இஸ்லாமாபாத் லால் மஸ்ஜித் பள்ளிவாசல் மீது முஷாரஃப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதில் குறைந்தது 100 பேர் பலியானார்கள். அந்தப் பள்ளிவாசலின் மதகுருக்கள் ஷரியா சட்டத்தை பாகிஸ்தான் தலைநகரில் அமல் செய்ய முயன்றனர் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

இந்தத் தாக்குதல்தான் ‘பாகிஸ்தான் தாலிபன்’ உருவாகக் காரணமானது. இதன் பின்பு ஏராளமான குண்டுவெடிப்பு தாக்குதல்கள் பாகிஸ்தானில் நடந்தன. பாகிஸ்தான் வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாட்கள் அவை. இப்படியான சூழலில்தான் நாடு கடத்தப்பட்ட நவாஸ் 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார், முஷாரஃப்பின் வீழ்ச்சியானது இந்தப் புள்ளியில்தான் தொடங்கியது.

குறுக்கு வழியில் அதிகாரத்துக்கு வந்த முஷாரஃப், ஜனநாயக சக்திகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் நெருக்கடியால் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால், தேர்தல் நடத்தாமல் தனது பதவிக் காலத்தை நீட்டித்துக்கொள்ள. அவசர நிலையைப் பிரகடனப்படுத்த முயற்சித்தார்.

சர்வதேச அழுத்தங்கள் தொடரவே தேர்தல் நிகழ்ந்தது. பிப்ரவரி 2008ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி தோல்வியுற்றது. ஆறு மாதங்களுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். லண்டன், துபாய் ஆகிய நாடுகளில் வசித்த அவர், 2013ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவமானங்களைச் சந்தித்தார். கைது செய்யப்பட்டார். அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. அவரது கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கும் தேர்தலில் மோசமான தோல்வியையே சந்தித்தது.

அதன் பிறகு நீதிமன்றத்தில் அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் குவிந்தன. பெனாசிர் பூட்டோ 2007ம் ஆண்டு பாகிஸ்தானில் தாலிபன்களால் படுகொலை செய்யப்பட்டார். பெனாசிருக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்ற வழக்கும் அதில் ஒன்று. இதைத் தொடர்ந்துதான் முஷாரஃப் மீது ராஜத்துரோக வழக்கு போடப்பட்டது.நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2013ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது முஷாரஃப் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஆறு வருடங்கள் நடைபெற்றன.

நீதிபதி வாகர் சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.முஷாரஃப் இறந்தால்கூட அவரைத் தோண்டி எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று ஒருபுறம் சில குரல்கள் உயர்கின்றன. மறுபுறம் பாகிஸ்தான் இராணுவமோ முஷாரஃபுக்கு விதித்த மரண தண்டனை அதீதமானது என்று சொல்கிறது.

 நாற்பது வருடங்கள் நாட்டை நேசித்த ஓர் அதிகாரி எப்படி துரோகியாக முடியும் என்று இராணுவம் கேட்கிறது.ஜனநாயகத்தின் காலம் இதுதனி நபர்கள் அரசின் அதிகாரத்தை முற்றுரிமையாகத் தங்கள் கையில் எடுக்க முயன்றால் ஒரு கட்டத்தில் வெல்லும் மக்கள் சக்தி இப்படியான பரிசையே சர்வாதிகாரிகளுக்கு வழங்கும் என்பதற்கு முஷாரஃப் வாழ்வு ஒரு பாடம்.         

இளங்கோ கிருஷ்ணன்