சிறுமிகளை பாலியல் பண்டமாக மாற்றும் CHINA APPS



பதினைந்து நொடி வீடியோதான். அதிர வைக்கின்றன ஆபாசக் காட்சிகள். பனிரெண்டு வயது சிறுமி, நீலநிற லெஹங்கா, வெல்வெட்  ஜாக்கெட் அணிந்து ஆபாசமான குத்துப்பாடலுக்கு சிறுவனோடு பாட்டுப் பாடியபடி அந்நியோன்யமாக இழைந்து ஆடுகிறாள். கீழே  கமெண்ட்டுகளில் சிறுமி இன்னும் உடையைக் குறைத்து ஆட ஊக்கப்படுத்துகிறது வக்கிரமான இணையவாசிக்கூட்டம். 
இது  அமெரிக்காவில் நடக்கவில்லை. இந்தியாவில் ஸ்மார்ட்போன்களில் வைரலாக பெருகிவரும் சீன ஆப்ஸ்களில் ஒன்றான குவாய் (Kwai)  கைவண்ணம் இது. பதினைந்து நொடிகளில் ஸ்மார்ட்போனில் அரங்கேறும் ஆபாச வீடியோக்கள் இந்தியாவில் சீன ஆப்ஸ் வழியாக  கிடுகிடுவென தரவிறக்கமாகி வருகின்றன. வீடியோக்களை ஜொள்ளு வழிய பார்த்துவிட்டு ஆடைக்குறைப்புக்கு ஆஃபர் கேட்டு  கமெண்டுகளை எழுதுபவர்களில் ஆண்களே அதிகம்.

சரி; எப்படி குழந்தைகள் இதுபோல நடனமாட ஒப்புக்கொள்கிறார்கள்? ஆப்ஸ்கள் இதுபோல நடனமாட பல்வேறு போட்டிகளை நடத்தி ரூ.30  ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பரிசுகளை வழங்குகிறார்கள். “வைரலாகப் பரவும் 15  நொடி வீடியோக்கள் நூதன குழந்தை விபச்சார  விளம்பரங்களாகி வருகின்றன...” என குண்டைத் தூக்கிப் போடுகிறார் Cyber Peace ஃபவுண்டேஷன் அமைப்பின் திட்ட இயக்குனரான நிதிஷ்  சந்தன். குவாய், டிக்டொக், கிளிப் ஆகிய ஆப்ஸ்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் கீழுள்ள மக்களைக் குறிவைத்து லாபத்தில் கொழிக்கின்றன.  சீனாவுக்கு அடுத்த சந்தையாக இந்தியாவை நம்பியுள்ள குவாய்க்கு, இந்தியாவில் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் உண்டு. நிறுவனங்கள்  அமோகமாக வளரட்டும்; ஆனால், எந்த வழியைத் தேர்ந்தெடுத்து காசு பார்க்கிறார்கள் என்பது முக்கியமல்லவா?

குவாய் உள்ளிட்ட வீடியோ சமூகதளங்கள், பெண்களையும் சிறுமிகளையும் இந்தி, பஞ்சாபி மொழி குத்தாட்டப் பாடல்களுக்கு ஆடவைத்து,  பார்ப்பவர்களை வக்கிர மயக்கத்திற்கு ஆட்படுத்தி பணம் சம்பாதிக்கின்றன.“இந்த வீடியோக்களில் சிறுமியரை உடையைக்  களையச்சொல்லிக் கூறுபவர்கள், பாலுறவுக்கும் அழைத் தாலும் ஆச்சரியமில்லை...” என எச்சரிக்கிறார் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சமூக  ஆர்வலர் ஜல்ஜித் தொட்டொலி. வீடியோக்களுக்கு ஆயிரம், லட்சம் லைக்ஸ்கள் என அதிகரிப்பது குறிப்பிட்ட சிறுமிக்கு மாதம்  தோராயமாக ரூ.28 ஆயிரம் கிடைப்பதற்கு உதவுகிறது. உடலும் மனதும் வளர்ச்சிபெறாத காலகட்டத்தில் சிறுமிகள், வக்கிரக்கூட்டத்தின்  ஆபாச போதைக்காக ஊறுகாயாக தங்களை பணயம் வைப்பது அவர்களின் எதிர்காலத்தைக் குலைத்துவிடும். இதை மனதில் வைத்து  கரன்சி தேற்றும் சீன ஆப்ஸ் நிறுவனங்களை இந்திய அரசு கண்காணித்து கறாராக விதிமுறைகளை வகுத்து ஒழுங்குபடுத்துவது நல்லது.  இதுவே இந்தியக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கும்.                                

-ச.அன்பரசு