கப் குற்றங்கள்!



அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில கிராமங்களில் நடைபெறும் கப் பஞ்சாயத்து குற்றங்களை முதல்முறையாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் (NCRB) பதிவு செய்து விரைவில் வெளியிடவுள்ளது. வட இந்தியாவின் கிராமப்புறங்களில் நடைபெறும் சாதி மேலாதிக்க கப் பஞ்சாயத்துக்களால் வல்லுறவு, ஆணவக்கொலை ஆகியவற்றுக்கு அபராதம், விருந்து, கசையடி, சமூக புறக்கணிப்பு போன்ற தண்டனைகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு விதிக்கப்பட்டு வருகின்றன.

2014 - 2016 காலகட்டத்தில் 14 - 251 என ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்ட உள்துறை அமைச்சகம், என்சிஆர்பி மூலம் இதனை 2017ம் ஆண்டு அறிக்கையில் ஆவணப்படுத்தத் தொடங்கியது. “கப் பஞ்சாயத்துகளை குற்றவாளிகளாக்க அரசு முயற்சிக்கிறது. நாட்டின் கலாசாரம், மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது கப் பஞ்சாயத்துகள்தான்!” என அரசுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார் அரியானா சர்வ் கப் ஜாட் பஞ்சாயத்தைச் சேர்ந்த சுபேசிங் சமைன்.

- ரோனி