விமர்சகர்கள் சொன்னதுக்கும் ஆடியன்ஸ் கருத்துக்கும் வித்தியாசம் இருந்தது!



‘‘‘இப்படி ஒரு டைட்டிலா?’னு ஆச்சரியமா கேட்டவங்க அத்தனை பேரும் இப்ப படத்தை பார்த்துட்டு ‘ரொம்ப பொருத்தமான தலைப்பு’னு  சொன்னாங்க!  இன்னொரு விஷயம், என் படத்தைப் பத்தி நம்ம விமர்சகர்கள் சொன்ன கருத்துக்களைக் கேட்டு உதறலாகிடுச்சு. ஆனா, தியேட்டர் விசிட் போனப்ப ஆடியன்ஸ்  ஹேப்பியா என்ஜாய் பண்ணினாங்க அவங்க கண்ணோட்டம் வேற யா இருந்துச்சு.  ‘கலகலன்னு இருக்கு’னு சொல்லி பாராட்டினாங்க. என் முதல் முயற்சிக்கு  இந்த ஊக்குவிப்பு பூஸ்ட்டா இருக்கு!’’மகிழ்ச்சியில் புன்னகைக்கிறார் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ படத்தின் அறிமுக இயக்குநரான விக்னேஷ்  கார்த்திக். சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தவர் இவர்.

‘‘ஸ்கூல் படிக்கும்போதே மிமிக்ரில ஆர்வம் வந்திடுச்சு. என்ஜினியரிங் காலேஜ்ல அது இன்னும் ஸ்டிராங் ஆச்சு. என் மிமிக்ரிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே  உருவாச்சு. ஆனாலும் டைரக்‌ஷன் கனவுதான் இருந்தது. படிப்பு முடிஞ்சதும் சேனல்ஸ் நடத்தின காமெடி ஷோக்கள்ல கலந்துக்க ஆரம்பிச்சேன். சன் டிவில  தொகுப்பாளரா வேலை பார்த்திருக்கேன். இடைல குறும்படங்கள் இயக்கினேன். இதுவரை நான் இயக்கின ஐந்து குறும்படங்கள்ல ரெண்டுதான் வெளிவந்திருக்கு.  அதுல ஒண்ணு ‘முதல் கனவே’. இதுக்கு  ‘சைமா’ல சிறந்த குறும்படத்துக்கான விருதும் கிடைச்சது. அந்த ஷார்ட் ஃபிலிமை பார்த்துட்டு ஏ.ஆர்.ரெஹானா  மேம் இந்த நல்ல வாய்ப்பை கொடுத்தாங்க...’’ விறுவிறுவென பேசுகிறார் விக்னேஷ்.

என்ன சொல்றாங்க உங்க தயாரிப்பாளர் ரெஹானா?
இதோட ஸ்கிரிப்ட்டை நாலு வருஷங்களுக்கு முன்னாடியே எந்த பக்குவமும் இல்லாம எழுதினேன். அதை இத்தனை வருஷங்களுக்கு பிறகும் மக்கள் ரசிக்கறது  சந்தோஷமா இருக்கு. டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகியிருக்கு. ரெஹானா மேம்கிட்ட கீ போர்டிஸ்டா இருக்கிற கவி சார் மூலமா இந்த படம் இயக்கற வாய்ப்பு  வந்தது. அசார், சஞ்சிதா ஷெட்டி, மன்சூர் அலிகான் சார், யோகிபாபுனு நல்ல டீம் கிடைச்சாங்க. மூணு, நாலு படங்கள்ல ஒர்க் பண்ணின அனுபவங்கள் இந்த ஒரு  படத்துல கிடைச்சிருக்கு.

எங்க தயாரிப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா மேம் இசையும் படத்துக்கு பலமா அமைஞ்சது. அவங்ககிட்ட பிடிச்ச விஷயமே பாராட்டோ... திட்டோ எதையுமே மனசுல  வச்சுக்காம உடனே சொல்லிடறதுதான். கதையை அவங்க கேட்ட அடுத்த செகண்ட்ல தயாரிப்பாளர் சுபா மேம்கிட்ட திரும்பவும் கதை சொல்லச் சொன்னாங்க.  நேர்ல கூட சந்திக்காம தயாரிப்பாளர்கிட்ட கதையைச் சொன்னேன். அவங்களும் என்னை நம்பினாங்க. அப்பா அம்மாவுக்கு சமமா ஒரு நண்பர்கள் வட்டம்  எனக்கிருக்கு. அவங்க கொடுத்த ஊக்குவிப்புதான் என்னை இயக்குநராக்கி இருக்கு. அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி. விரைவில் அறிவிப்பு வரும்!     

- மை.பாரதிராஜா