விருச்சிக லக்னம் - செவ்வாய்-குரு சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 76

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்


குருவும் செவ்வாயும் இணைந்தால் அது குரு மங்கள யோகம் என்றழைக்கப்படுகிறது. லக்னாதிபதி செவ்வாயோடு தன, பூர்வ புண்ணியாதிபதியான குரு இணையும்போது பூர்வீகச் சொத்துக்கள் இயல்பாகவே அமைந்து விடும். அரசாங்கத்தின் பெரிய பொறுப்புகள் தானாகத் தேடிவரும். எதையுமே திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். மிகுந்த சமயோசித புத்தியோடு செயல்படுவார்கள்.

இருக்கும் சொத்துக்களை பெருக்கியபடி இருப்பார்கள். தன்மானத்தோடு இருப்பார்கள். நாடு, தன் இனம், குலம் என்றிருப்பார்கள். ‘அதெப்படி எங்க ஊரு பத்தி சொல்லலாம்’ என்பார்கள். உடன் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் தங்களின் சொத்தை விட்டுக் கொடுப்பார்கள். நான் ஏதாவது கோபத்துல சொல்லியிருப்பேன் மன்னிச்சுடுங்க என்பார்கள். வெட்டிப் பேச்சாக இல்லாமல் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். ஊர் உலகமே திட்டினாலும் சீண்டினாலும் கூட இவர்கள் நினைப்பதைத்தான் செய்வார்கள்.

விருச்சிகத்திலேயே- அதாவது லக்னத்திலேயே செவ்வாயும் குருவும் ஒன்றாக அமைந்தால் தோற்றமே கம்பீரமாக இருக்கும். கூரிய மூக்கும், தீர்க்கமான கண்களோடும் இருப்பார்கள். சொந்த பந்தங்களை அரவணைத்துச் செல்வார்கள். அரசாங்கத்தில் மிக உயர்ந்த பதவியில் அமர்வார்கள். இந்த அமைப்பு எதிலும் ஒரு நுணுக்கத்தை கொடுக்கும். புத்தி சாதுர்யமும், தைரியமும், சுறுசுறுப்பையும்  கொடுத்து வழிநடத்தும். மிகச் சிறந்த ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்வார்கள்.

தங்களைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். சொந்தத் தொழிலோ உத்யோகமோ எதுவாக இருந்தாலும் சிரமமின்றி கிடைத்துக் கொண்டிருக்கும். தனுசு ராசியில் செவ்வாயும் குருவும் சேர்கிறார்கள். தனாதிபதி குரு தனஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். வாக்கு வலிமையோடு திகழ்வார்கள். பெரும்பாலும் இனிமையாகவே பேசுவார்கள். படிப்பு சிறப்பாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் சீக்கிரமாகவே பேசத் தொடங்கி விடுவார்கள். இவர்களுக்கு கண்கள் பேசும். எதையுமே ஜாடை மொழியிலேயே பேசுவார்கள்.

சங்கீதம், வாய்ப்பாட்டு என்று கற்றுக்கொண்டு முன்னேறுவார்கள். மத்திய அரசுக்கே ஆலோசனை கூறும் அளவிற்கு உயர்ந்த பதவிகளில் அமர்வார்கள். இவர்களின் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள் எப்படியிருந்தாலும் இவர்கள் சிறப்பாக படித்து விடுவார்கள். தன் இனம், நாடு, மக்கள் என்றுதான் எப்போதும் பேசுவார்கள். மகர ராசியில் செவ்வாயும் குருவும் சேர்ந்திருப்பதும் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இங்கு குரு நீசம். செவ்வாய் உச்சம்.

நீங்கள் சொன்னால் யாரும் கேட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்கிற ஆதங்கம் இருக்கும்.உள்நாக்கு வளருதல், தொண்டைப்புண், காதில் சீழ் வடிதல் போன்ற தொந்தரவால் அவஸ்தைப்படுவார்கள். தான் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில் திருப்பணி மற்றும் விழாக்களில் முக்கிய பங்காற்றுவார்கள். திறமையிருக்கும், அதை வெளிப்படுத்த முடியாத சோம்பலால் சூழப்பட்டிருப்பார்கள்.
 
கும்ப ராராசியில் இவ்விரு கிரகங்கள் இணைந்திருந்தால் விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். ஆரம்பக் கல்வி மோசமாகவும் போகப்போக நன்றாகவும் படிப்பார்கள். வங்கியில் பண இருப்பு எப்போதுமே நன்றாக இருக்கும். குரு நான்கில் இருப்பதால் தாய்தான் அனைத்துமாக இருப்பார். பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறப்பார்கள். விலை உயர்ந்த வாகனங்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள். வாகன விற்பனையையும் தனியாகச் செய்வார்கள்.

சொந்த பந்தங்கள் இவர்களை விட்டு விலகினாலும் இவர்கள் இழுத்து வைத்துக் கொண்டிருப்பார்கள். சிலர் குடும்பத்தோடு சேர்ந்து ஏதேனும் நிறுவனத்தை தொடங்கியெல்லாம் நடத்துவார்கள். மீனம் ராசியில் குரு ஆட்சியாகிறார். இங்கு செவ்வாயும் அமர்ந்திருந்தால் மிகச் சிறந்த மனநல மருத்துவராக வரும் வாய்ப்புகள் உண்டு.  இவர்களின் வாரிசுகள் பார்போற்றும் பிள்ளைகளாக இருப்பார்கள். ஆனால், புத்திரனுக்குரிய குருவே புத்திர ஸ்தானத்தில் அமர்வதால் தாமதமாக வாரிசுகள் உருவாகும் வாய்ப்பும் உண்டு.

தன்னால் இந்த சமூகத்தை மாற்ற முடியும் என்று சவால் விடுவார்கள். எல்லோரும் பார்க்கும் கோணத்தை இவர்கள் இன்னும் நுணுக்கமாக பார்ப்பார்கள். என்னதான் எல்லோரிடமும் பழகினாலும் தராதரம் அறிந்துதான் செயல்படுவீர்கள். இந்த அமைப்பை ராஜகுரு என்று சொல்லலாம். குல தெய்வம், சொந்த ஊர் கோயில்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்வார்கள். விருச்சிக லக்னத்திற்கு ஆறாம் இடமான மேஷத்தில் செவ்வாயும் குருவும் சேர்க்கை பெற்றால் வீண்பழி வந்து நீங்கும்.

மேலும், இங்கு செவ்வாய் ஆட்சி பெறுவதால் தானே தனக்கு எதிரியாவார்கள். இவர்களின் வார்த்தையே எதிரிகளைக் கொண்டு வந்து சேர்க்கும். குடும்ப ரகசியத்தை காக்க முடியாத நிலைமை இருக்கும்.  அரசாங்க விஷயங்களை அவ்வப்போது முடித்துக் கொள்ள வேண்டும். சைனஸ் தொந்தரவு எப்போதும் இருக்கும். கழுத்து வலி, எலும்புத்தேய்வு என்றெல்லாம் சிரமப்படுவார்கள். இவர்கள் இடம், பொருள், ஏவலறிந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ரிஷப ராசியான ஏழாம் இடத்தில் செவ்வாயும் குருவும் அமைவதால் வீட்டோடு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். எந்தச் சூழலிலும் பிரச்னைகளை பிரித்தறியும் திறனோடு இருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கும் இவர்களுக்கும் கருத்து வேற்றுமை வந்தாலும் இவர்கள் விட்டுக் கொடுத்துப் போய் விடுவார்கள். இவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் சென்று செட்டில் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

நாமே தவறு செய்தால் சமூகம் என்ன நினைக்கும் என்று சிந்திப்பார்கள். அதனாலேயே தனியாக கேளிக்கைகளை அனுபவிப்பார்கள். சிலருக்கு சகோதரர் எங்கு திருமணம் செய்து கொண்டாரோ அங்கேயே, அதே குடும்பத்திலேயே இவருக்கும் திருமணமாகும். மிதுன ராசியான எட்டாம் இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தால் சுமாரான பலன்களையே அளிக்கும். இவர்கள் எல்லோரிடமும் கடன் வாங்கிக் கொண்டிருப்பார்கள்.

இதனால் சிலசமயம் இவர்களைக் கண்டாலே பயந்து ஓடுவார்கள். சிலர் பூர்வ ஜென்ம நினைவுகள், மாந்த்ரீகம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பார்கள். என்னதான் செவ்வாய் புதனின் இடத்தில் அமர்ந்து பலவீனமாக இருந்தாலும், குருவால் தொலைநோக்குச் சிந்தனையோடு விளங்குவார்கள். இவர்கள் மிகுந்த பிடிவாதக்காரராக இருப்பார்கள். இந்த அமைப்பில் காதால் கேட்டதை வைத்துக் கொண்டே தேர்வு எழுதி வெற்றிபெறும் மாணவர்கள் உண்டு. இதுவொரு அபூர்வமான அமைப்பாகும்.

எட்டாமிடம் சூட்சும ஸ்தானமாகும். எனவேதான், மாறுபட்ட கோணத்தில் மக்களைப்பற்றி சிந்திப்பார்கள். கடக ராசியான ஒன்பதாம் வீட்டில் குரு உச்சமாகின்றார். ஆனால், செவ்வாய் இங்கு நீசமாகிறார். இவர் வளர வளர தந்தை தன் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் இவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வார். தந்தையின் சொத்துக்களை பாதுகாத்து பலமடங்காக்கி பெருக்கும் சாமர்த்தியத்தோடு திகழ்வார்கள். எதிர்பாராத விதத்தில் சட்டென்று வாழ்க்கை முன்னேறத் தொடங்கும்.

தாய் நாட்டைத் தாண்டி வெற்றி பெறுவார்கள். பண்ணை வீடு, தென்னந் தோப்பு என்று வசதியாகவும், இயற்கையான சூழலிலும் வாழவே ஆசைப்படுவார்கள். எதிரிகளை வீழ்த்துவதை விட்டுவிட்டு முன்னேற்றம் மட்டுமே முக்கியம் என்றிருப்பார்கள். சிம்ம ராசியான பத்தாம் இடத்தில் குருவும் செவ்வாயும் அமர்ந்தால் நிச்சயம் அரசாங்கத்தில் உயர்பதவிகளை சர்வ நிச்சயமாக வகிப்பார்கள். வங்கி அதிகாரி, ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ்., மந்திரிகள் என்றெல்லாம் முன்னேறிக் கொண்டேயிருப்பார்கள்.

காவல் துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்து மாற்றத்தை கொண்டு வருவார்கள். இவர்கள் நேர்மையாக இருப்பார்கள். பழைய பைல்களை நோண்டிக் கொண்டே இருப்பார்கள். செவ்வாயானது முதல் 16 டிகிரிக்குள் இந்த ராசிக் கட்டத்திற்குள் அமர்ந்திருந்தால் மாபெரும் தொழிற்சாலையை அமைப்பார்கள். போலி பத்திரங்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பார். பொதுச் சொத்துக்களை யாரும் கொள்ளையடிக்க விடமாட்டார். கூட்டுத் தொழில் செய்வோர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

திடீரென்று செல்வந்தராகும் நபர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யக் கூடாது. இந்த அமைப்பானது ஏதேனும் ஒரு முயற்சியை அளித்துக் கொண்டேயிருக்கும். ஏதேனும் சாதித்தே தீர வேண்டுமென்கிற வைராக்கியத்தோடு வலம் வரச் செய்யும். கன்னி ராசியான பதினோராம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்தால் கூடாப் பழக்க வழக்கங்கள் வந்து அலைக்கழிக்கும். மூத்த சகோதரர்களோடு சரியாக வராது. நிலத்தகராறு, பாகப்பிரிவினையெல்லாம் இதனால் நடந்தேறும்.

திடீரென்று எல்லா விஷயத்திற்கும் கணக்கு பார்க்க ஆரம்பிப்பார்கள். குருவி சேர்க்கிற மாதிரி பணத்தை சேர்த்து வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறும் வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை தேவை. உறவினர்களோ அல்லது அவர்களின் ஆதரவோ இவர்களுக்கு எப்போதும் குறைவாகவே இருக்கும்.  இவர்களால் செயற்கையாக நடந்து கொள்ளத் தெரியாது. எல்லாவற்றையுமே பிராக்டிக்கலா யோசிச்சு பாருங்க என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

துலாம் ராசியான பன்னிரண்டாம் இடத்தில் குருவும் செவ்வாயும் இணைந்தால் ஏற்றுமதி, இறக்குமதி மிகச் சிறப்பாக இருக்கும். நாடு தாண்டி வியாபாரத்தை விஸ்தரிப்பார். மத்திம வயதுக்கு மேல் சித்தர் பீடங்களுக்குச் சென்று கொண்டிருப்பார். இது அயன சயன ஸ்தானமாக இருப்பதால் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். தனக்கு எதிராக யாரோ சதி செய்வது போன்ற பிரமையில் இருப்பார்கள். இவர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

குருவும் செவ்வாயும் சேர்க்கை பெற்றுள்ள இந்த அமைப்பானது வலிமை மிக்கது. பெரும்பாலும், இவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களோடு நெருக்கமாக இருப்பார்கள். தலைமையை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பார்கல். சவால்கள் இல்லையெனில் இவர்கள் சோர்வடைவார்கள். எனவே, இவர்கள் முருகனின் ஆலயங்களுக்கு சென்று வருதல் நன்மையைத் தரும். அதிலும் உத்திரமேரூர் தலத்தில் அருளும் பாலசுப்ரமணியரை தரிசித்து வாருங்கள். முருகனின் இரு துணைவியரும் இணைந்து இங்கு கஜவல்லி அம்மனாக காட்சி கொடுப்பது அபூர்வமாகும். கோயிலின் வடமேற்கு மூலையில் முருகப் பெருமான் ஊன்றிய வேலை தரிசிக்கலாம். இத்தலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற ஊர்களுக்கு அருகேயுள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்