குங்குமம் டாக்கீஸ்



* ‘ரெமோ’ படத்தின் ப்ரமோஷனுக்காக ‘சிரிக்காதே’ என்ற பெயரில் மியூசிக் ஆல்பம் வெளியிட்டிருக்கிறது சிவகார்த்தி- அனிருத் கூட்டணி.  அதில் கீர்த்தி சுரேஷும் கலக்கியிருக்கிறார்.

* அடுத்து பொன்ராமின் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். அடுத்த வருட தீபாவளிக்கு அதுதான் சிவகார்த்தியின்  ஸ்பெஷல்!

* அக்‌ஷய்குமாருடன் ‘ரஸ்டம்’ படத்தில் நடித்து முடித்துள்ள இலியானாவை பாலிவுட் மீடியாக்கள் சில செம டென்ஷன்  ஆக்கிவிட்டிருக்கிறது போல. ‘‘அவர்கள் நினைத்ததை எல்லாம் எழுதிக்கொள்வார்கள் என்றால் என்னிடம் ஏன் அரை மணி நேரமாக பேட்டி  எடுக்கிறார்கள்?’’ என பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்திருக்கிறார்.

* ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தில் ஒவ்வொரு சிம்பு கெட்டப் படப்பிடிப்பும் முடிய முடிய அந்த கெட்டப்பில் ஒரு  டீஸரை வெளியிடத் திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

* ‘சபாஷ் நாயுடு’ படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனர் கௌதமி. ‘அவரது காஸ்ட்யூம்கள் ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காததால் படப்பிடிப்பில்  இருவருக்கும் மனக்கசப்பு’ என தகவல்கள் பரவியதை மறுத்திருக்கிறார்கள் இருவரும். ‘‘எங்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உறவும்  இருக்கிறது. அதெல்லாம் வதந்தி!’’ என்கிறார்கள்.

* இந்தியில் அமிதாப்புடன் டாப்ஸி நடித்த ‘பிங்க்’ அடுத்த மாதம் ரிலீஸ். இதில் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக  நடித்திருக்கிறார் டாப்ஸி.

* ‘சிங்கம் 3’ முடித்துவிட்டு விக்ரமை வைத்து ‘சாமி 2’ இயக்குகிறார் ஹரி. ‘‘ஐந்து வருடங்களா ‘சாமி 2’ பத்தி நாங்க பேசிட்டிருந்தோம்.  அதுக்கான நேரம் இப்போதான் கனிஞ்சிருக்கு. அதன் ஒன்லைன் பிரமாதம்!’’ என்கிறார் விக்ரம்.

* விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என டைட்டில் வைக்கப் போவதாக தகவல்கள் கிளம்ப, அதை  மறுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ‘‘அந்த டைட்டிலை சூட்டும் எண்ணமே எங்களுக்கு இல்லை. புதிய தலைப்பு விரைவில்  அறிவிப்போம்’’ என்கிறார்கள்.

* இந்திக்குப் போகிறார் இயக்குநர் பிரபு சாலமன். இதற்காக ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் ஷெராப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி  வருகிறார். அதில் ஒரு பாத்திரத்தில் தனுஷ், சாலமனின் அன்புக்காக நடிக்கிறார்.

* கொஞ்ச காலமாக உடற்பயிற்சிகளை நிறுத்தி வைத்திருந்த கமல் மறுபடியும் ஆரம்பித்துவிட்டார். அவருக்கு உடல்நிலை ஒத்துழைத்தால்  அடுத்த மாதமே ஷூட்டிங் செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் அடுத்த படத்தின் ஒன் லைனையும்  ரெடி செய்துவிட்டார்.

* தெலுங்கில் வெளியான ‘நாயகி’ படம் பெரிய ெவற்றி பெறாமல் போனதால் கொஞ்சம் மனமுடைந்துவிட்டார் த்ரிஷா. ஆனாலும்  தளராமல் தமிழ் டப்பிங்கிற்கு குரல் கொடுத்து வருகிறார். தெலுங்கில் பெரிய வெற்றி பெறாத படங்கள் தமிழில் சக்கை போடு போட்ட  வரலாற்றை சொல்லிக் காட்டுகிறார். படத்தை தயாரிப்பது அவரின் மேனேஜர்தான்.

* எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘டூரிங் டாக்கீஸ்’ ஹீரோயின் பாப்ரி கோஷ், இப்போது ‘விஜய் 60’ல் நடிக்கிறார். ‘‘படத்துல ஒய்.ஜி.மகேந்திரா மகளாக  நடிக்கறேன். விஜய் சாருக்கும் எனக்கும் நிறைய காம்பினேஷன் சீன்கள் உள்ளது’’ என்கிறது இந்த பெங்காலி ரசகுல்லா.

* ராதிகா ஆப்தேவின் இன்னொரு கசமுசா வீடியோ நெட்டில் கசிந்திருக்கிறது. ‘பார்ச்டு’ எனும் இந்திப் படத்தில் அவரும் நடிகர் அடில்  உசேனும் இடம்பெற்ற படுக்கையறைக் காட்சிதான் இப்போது பிட்டு படம் ரேஞ்சுக்கு உலவுகிறது. அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் மட்டும்  ரிலீஸ் ஆகியிருக்கும் படம் இது. ‘‘கதைப்படி ஆப்தே காலம் முழுக்க அடி, உதை பட்டு அன்புக்கு ஏங்கும் பெண்.

அத்தியாவசியமாக வைக்கப்பட்ட காட்சி இது. தப்பாக எதுவும் அதில் இல்லை. இந்தியாவில் சில உடல் பாகங்களை மறைத்து  வெளியிடலாம் என்று இருந்தோம். அதற்குள் திருடி கசிய விட்டுவிட்டார்கள். ராதிகா என் தங்கை போன்றவர். அவரை நான் தப்பாகக்  காட்டுவேனா?’’ என்றிருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அசீம் பஜாஜ். அதானே!

* ‘ராணி பத்மாவதி’ படத்துக்காக தீபிகா படுகோனேவுக்கு தரப்பட்ட சம்பளம், 12 கோடியே 65 லட்சம். பாலிவுட்டில் இதுவரை ஒரு  ஹீரோயின் வாங்கிய அதிக சம்பளம் இதுதான்!

* பி.வாசுவின் ‘சிவலிங்கா’ படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்துக்கொண்டே ‘இறுதிச்சுற்று’ தெலுங்குப் பதிப்பிலும் மாறி மாறி நடிக்கிறார்  ரித்திகா சிங். இதற்காக இரண்டு மாதம் ஐதராபாத்திலேயே தங்கிவிட்டார்.

* ‘கபாலி 2’ உடனே அறிவிப்பதாக இருந்தது. ஆனால் ‘2.0’ முடிந்தவுடன் அந்த அறிவிப்பை விடலாம் எனத் தற்காலிகமாகத்  தள்ளிவைத்திருக்கிறார்கள்.

* மிகவும் ஆச்சர்யமான ஒரு கூட்டணியை தமிழ் சினிமா சந்திக்கப் போகிறது. இன்னும் இரண்டு படங்களை முடித்த பிறகு, சசிகுமார் -  கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் படம் செய்யப் போகிறார்கள்.