வேண்டுதல்
கலா! நம்ம பக்கத்து தெரு அனிதா இருக்காளே... அவ குழந்தை பாக்கியம் கிடைக்க, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏதோ கோயிலுக்குப் போய் வந்தாளாமே! எந்த கோயிலுக்குன்னு தெரியுமா?’’ - ராஜம் கேட்டாள்.
 ‘‘தெரியாதுக்கா! இப்பதான் குழந்தையைப் பார்க்கப் போறோமே... அவகிட்டயே எந்தக் கோயில் பிரார்த்தனை பலிச்சதுனு கேட்டுடுவோம்!’’ என்றாள் கலா. இருவரையும் வரவேற்று உபசரித்தாள் அனிதா. தாங்கள் கொண்டு வந்திருந்த டிரஸ், பூ, ஸ்வீட் பார்சலை அனிதாவிடம் கொடுத்து வாழ்த்தினார்கள். ராஜம் பக்குவமாகக் கேட்டாள்.
‘‘அனிதா! எட்டு வருஷமா குழந்தை இல்லாமல் இருந்த நீ, இப்ப தாய்மை அடைஞ்சது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்! ஆமா, ஞாயிற்றுக்கிழமைதோறும் நீயும் உன் கணவரும் ஏதோ கோயிலுக்குப் போய் வருவீங்களே... அது எந்தக் கோயில்?’’ ராஜம் கேட்டதும் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தாள் அனிதா.
‘‘நாங்க அப்படி குழந்தை வரம் வேண்டி போனது எந்தக் கோயிலுக்கும் இல்ல! பக்கத்து ஊர்ல இருக்கிற அநாதை ஆசிரமத்துக்கு! குழந்தையும் தெய்வமும் ஒண்ணுன்னு சொல்லுவாங்க. அந்த ஆசிரமத்துல இருக்கற குழந்தைகளுக்கு எங்களால் ஆன உதவியை வழக்கமா செய்து வருவோம். அதன் பலனாத்தான் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைச்சதா நம்புறோம்!’’ என்றாள் அனிதா.
-கு.அருணாசலம்
|