சொக்கவைக்கும் சோமேஸ்வரர் கோயில், கோலார்
சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: ஸ்ரீசோமேஸ்வரர் கோயில், கோலார் (பெங்களூரிலிருந்து 65 கி.மீ. தொலைவு), கர்நாடக மாநிலம்.
 காலம் : 11ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்ட இவ்வாலயம், பின்னர் 14-15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களால் பெருமளவில் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இன்று நாம் காணும் பிரம்மாண்ட வளாகத்துடன் காட்சியளிக்கிறது.

‘கோலார்’ என்றவுடனே தங்கச்சுரங்கம், கே.ஜி.எஃப், சுவையான மாம்பழம் போன்றவைதான் நினைவில் தோன்றும். ஆனால், கோலார் ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க பழமையான நகரம். மேலை கங்க மன்னர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நகரம், சில நூற்றாண்டுகள் சோழர்கள், பின்னர் ஹொய்சாளர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது.  அதன் பிறகு விஜயநகரப் பேரரசால் கைப்பற்றப்பட்டு அவர்கள் ஆளுகையில் வந்தது. இந்த வம்சங்கள் அனைத்தும் கோயிற்கட்டடக்கலையின் பெரும் பங்களிப்பிற்குப்பெயர் பெற்றவை, தங்கம் பிரித்தெடுக்கும் திறனும், தரமும் படிப்படியாகக்குறைந்ததால், தங்கச்சுரங்கம் 2001-ஆம் ஆண்டு முழுமையாக மூடப்பட்டது. இன்றும் கோலாரின் மதிப்பும் மகிமையும், அதன் தொன்மையான ஆலயங்களில் உள்ளன.  கோலாரின் புகழ்பெற்ற பழமையான ஆலயங்களுள் ஒன்று ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில். 11-ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்ட இவ்வாலயம், பின்னர் 14-15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களால் பெருமளவில் கட்டுமானங்கள் செய்யப்பட்டு இன்று நாம் காணும் பிரம்மாண்ட வளாகத்துடன் காட்சியளிக்கிறது.
பிரதான நுழைவாயிலில் எழிலார்ந்த சிற்பங்களுடன் கூடிய பெரிய கோபுரம் வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் பார்வையாளர்களின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பது யாளித்தூண்களுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய முகமண்டபம். அந்தராளத்துடன் கூடிய கருவறையின் மீது சுதைச்சிற்பங்கள் நிறைந்த விமானம் உள்ளது. சோமேஸ்வர சுவாமி 1.5 அடி உயரத்தில் லிங்க வடிவில் கர்ப்பகிரகத்தில் அருள்பாலிக்கிறார்.
தென்மேற்கில் உள்ள கல்யாண மண்டபமும், வடகிழக்கில் உள்ள வசந்த மண்டபமும் விஜயநகரக்கலை மற்றும் கட்டடக் கலைக்கு மிகச் சிறந்த மாதிரிகள். கல்யாண மண்டபத்தில் உள்ள 64 தூண்களில், யாளிகள், யாளி, குதிரை வீரர்கள், அப்சரஸ், புராண சிற்பங்கள் கவர்கின்றன.வடமேற்கு மூலையில் பார்வதிக்கு தனி சந்நதி உள்ளது. ‘கல்யாணி’ என்றழைக்கப் படும் புஷ்கரணி எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மது ஜெகதீஷ்
|