தீபாவளியையும், கந்தசஷ்டியையும் கொண்டாடுவோம் வாருங்கள்!
முத்துக்கள் முப்பது
தீபாவளி 31-10-2024, கந்தசஷ்டி சூரசம்ஹாரம் 7-11-2024
1. முன்னுரை
நரகாசுரனை அழித்து மக்களைக் காத்த நாள் தீபாவளி. (31.10.2024) சூரபத்மனை அழித்து மக்களைக் காத்த நாள் கந்த சஷ்டி. (7.11.2024) இரண்டும் இரண்டு அசுரர்களை அழித்த தினம். அசுரன் என்பது தீமையை, தீய எண்ணங்களை, அந்த எண்ணங்களால் உருவாகும் செயல்களையும், அந்த செயல்கள் செய்வதற்குரிய சக்தி, ஆயுதம், வரம், உருவம் ஆகியவற்றைக் குறிக்கும். கண்ணன் அசுரனை அழித்துக் காத்தது தீபாவளியாகியது.
 கந்தன் அசுரனை அழித்துக் காத்தது கந்த சஷ்டியாகியது. வியப்பு என்னவென்றால் இரண்டும் ஐப்பசியில் அடுத்தடுத்து அனுசரிக்கப்படுகிறது. ஐப்பசி துலாமாதம். சூரியன் சக்தி இழக்கும் மாதம். தெய்வ பலத்துடன் அந்த சக்தியை மனிதகுலம் பெறவே ஐப்பசியில் இந்த இரண்டு விரதங்களும் வருகின்றன. இந்த இதழ் தீபாவளியை ஓட்டி உங்கள் கையில் கிடைப்பதால் தீபாவளியில் ஆரம்பித்து கந்தசஷ்டி விழாக்களின் வழியாக நாம் நிறைவு செய்யும் வகையில் முத்துக்கள் முப்பது கட்டுரையை அனுபவிப்போம்.!
2. தீபாவளி
தீபாவளி என்பது திகட்டாத தித்திப்பு. அதைச் சிந்திக்கும் பொழுது மனதிலும் நாக்கிலும் இன்பம் பெருக்கெடுக்கும். உன்னைக்கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பல்லாண்டுகளுக்கு முன்னாலேயே தீபாவளி கொண்டாட்டத்தை ஒரு பாடலிலே பதிவு செய்திருக்கிறார் தீபாவளி என்றாலே தித்திப்புத்தான். அன்றைக்கு எல்லாமே தித்திக்கும்.
 மனசு தித்திக்கும். பட்சணங்கள் தித்திக்கும். ஒருவருக்கொருவர் காட்டுகின்ற அன்பும் வாழ்த்துகளும் தித்திக்கும். நம்மோடு கலந்து பரிமாறுகின்ற உறவுகள் தித்திக்கும். அன்றைக்குச் செய்கின்ற வழிபாடு தித்திக்கும். தீபாவளியை ஒட்டி கடைபிடிக்கக்கூடிய நோன்பு (கௌரி நோன்பு) தித்திக்கும் எனவே தீபாவளி என்றாலே தித்திப்புச்சுவை அதிகம் காட்டி திகட்டாமல் நம்மை வைத்திருக்கும்.
 3. தீபாவளியில் எண்ணெய்க் குளியல்
சனி நீராடு என்பது பெரியவர்கள் வாக்கு. எண்ணெய்க்கும் பகவானிடம் செலுத்தும் பக்திக்கும் தொடர்பு உண்டு. எண்ணெய்யை தைலம் என்பார்கள். பக்தியை தைல தாரா என்பார்கள். இரண்டும் உடலையும் மனதையும் பாதுகாப்பது. எனவே தீபாவளியை வியாஜமாக (காரணமாக) வைத்து இணைந்தார்கள். எண்ணெய் நீராட்டத்தை சுப நீராட்டமாக, தோஷங்களை நீக்குகின்ற நீராட்டமாக வர்ணித்தார்கள்.  இதில் தோஷம் என்பது உடலில் ஏற்படுகின்ற பலவித தோஷத்தையும் குறிக்கும். சீதோஷ்ணம் என்று சொல்லுகின்றோம். உடலின் வெப்ப நிலையையும் குளிர் நிலையையும் சமநிலைப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, தோலில் உள்ள நுண்ணிய துளைகளின் அடைப்பை எடுத்து, உடம்பை கலகலப்பாக்குகின்ற அற்புதம் தான் தைல ஸ்நானம் என்கின்ற எண்ணெய் நீராடுதல். 4. மங்கள நீராட்டம்தான் கங்கா ஸ்நானம்
தீபாவளி நீராட்டம் மங்களத்தைத் குறிப்பது. அதனால்தான் எண்ணெய் நீராட்டத்தை உணர்வு ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் கடைப்பிடிக்கச் சொன்னார்கள். ஏழை எளியவர்கள் உட்பட எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட நாள் தான் தீபாவளி நாள். மற்ற மற்ற நேரங்களில் அவரவர்கள் விருப்பப்படி இந்த எண்ணெய் நீராட்டத்தை எடுத்துக் கொண்டாலும் கூட, ஒரே நாளில், எல்லோருமே ஒரு குறிப்பிட்ட வேளையிலே நீராடுகின்ற அற்புதமான பண்டிகை இந்த தீபாவளி பண்டிகை. அன்று எண்ணெய் நீராட்டம் கண்டு, இனிய பண்டங்கள் உண்டு, புத்தாடைகளை அணிந்து கொண்டு, ஒருவருக்கொருவர் மகிழ்வோடு ஆடிப் பாட வேண்டும்.
5. நல்ல நேரம் எது?
இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் எண்ணெய் நீராட்டம் கண்டு லட்சுமி பூஜை செய்ய வேண்டும். இந்த தினத்தில் சுவாமி படத்திற்கு முன் ஒரு கிண்ணத்தில் எண்ணெய், சீயக்காய் வைத்து, எங்கள் குடும்பத்தில் அனை வரும் உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு, வீட்டின் பெரியவர் மற்றவர்களின் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும். அனைவரும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து வருவது கங்கா ஸ்நானம் என்று பெயர். நம் வீட்டில் பூஜை அறையில், வாழைஇலை போட்டு, நாம் செய்துள்ள இனிப்பு பலகாரங்கள், உணவுப் பொருட்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
அதோடு நாம் புதிதாக வாங்கி இருக்கும் உடைகள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் கார்த்திகை தீபத்திற்குப் பயன்படுத்தும், தீப மண் அகல் விளக்கை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் அனைத்திலும் நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். அல்லது ஒரே ஒரு தீபத்திற்காவது நெய்யில் ஏற்றலாம்.
6. எமதீபம் மறக்க வேண்டாம்
தீப ஒளி திருநாளாம் தீபாவளி அன்று வரிசையாய் விளக்கேற்றி வைக்கும் போது, புற இருள் மட்டுமின்றி, அக இருளும் அழிந்து போகும். இதற்கு முதல் நாளுக்கு முதல் நாள் (29.10.2024 செவ்வாய்) மாலை பிரதோஷ வேலையில், வீட்டுக்கு வெளியே கோலமிட்டு, வீட்டில் உள்ள நபர் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் தெற்குநோக்கி ஏற்றுங்கள். இன்று ஒரு நாள் மட்டும் தான் தெற்கு நோக்கி வைக்கலாம். 7 பேர் இருந்தால் 7 தீபங்கள் வையுங்கள். 3 பேர் இருந்தால் 3 தீபங்கள் வைக்காதீர்கள். குறைந்தது 5 தீபங்கள் ஏற்றுங்கள்.
7. தன திரயோதசி
இன்று தந்தேஸ் எனப்படும் தன திரயோதசி நாளில் லட்சுமி குபேரபூஜை செய்ய வீட்டில் செல்வவளம் பெருகும். அட்சய திருதியை நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதேபோல ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் திரயோதசி தனத் திரயோதசியாக கடைபிடிக்கப் படுகிறது. தந்தேரஸ்’ என வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர்.
இந்த ஆண்டு வரும் 29ஆம் தேதி தந்தேரஸ் எனப்படும் தனத் திரயோதசி கொண்டாடப்படுகிறது. தன திரயோதசி நாளில் கஸ்தூரி மஞ்சள் வைத்து பூஜை செய்து வழிபட்டு தீபாவளி நாளில் மகாலட்சுமி பூஜை செய்து அந்த மஞ்சளில் நமது பணம் வைத்து புழங்கும் பீரோவில் வைக்க ஏழு தலைமுறைக்கும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். 8. சகோதர பாசத்தை வளர்க்கும்
திரயோதசி தினத்தில்தான் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத்திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன.
தமிழகத்தில் இது வேறு விதமாகக் கொண்டாடப்படுகிறது. அதாவது 3.11.2024 ஞாயிறு எம துவிதியை நாள் ஆகும். அன்று சகோதரி அழைப்பின் பேரில் சகோதரன் சென்று அவள் வீட்டில் உணவு அருந்தி பரிசுகள் பரிமாறிக் கொள்வார்கள். இதனால் உறவு பலப்படுவதுடன், இரண்டு வீட்டாரும் செல்வ நலத்துடனும் தீர்க்க ஆயுளுடனும் இருப்பார்கள்.
9. தன்வந்திரி பகவானை மறக்க வேண்டாம்
29.10.2024 செவ்வாய்க் கிழமை தன்வந்தரி ஜெயந்தி நாள். வேதங்களில் உப வேதங்கள் உண்டு அதில் ஒன்று ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தின் பிரதிநிதி தன்வந்திரி பகவான் ஆரோக்கியத்தின் தெய்வமான, அவர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் திரயோதசி திதியில் கொண்டாடப்படுகிறது. புராணங் களின்படி அம்ருதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர்.
அப்போது அதிலிருந்து திவ்ய தேகத்துடன் ஆபரணங்களை அணிந்து, தேஜஸுடன், கையில் அம்ருத கலசம் ஏந்தியவாறு ஒரு திவ்யபுருஷன் தோன்றினார். அவர் தான் ஆயுர்வேதத்தின் பிரதிநிதி பகவான் தன்வந்திரி. பகவான் தன்வந்திரி தேவர்களின் வாழ்வுக்காகவும் மற்றும் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்காகவும் ஆயுர்வேத சாஸ்திரத்தின் உபதேசம் மகரிஷி விஷ்வாமித்திரரின் மகன் சுஸ்ருதனுக்கு அளித்தார்.
நோய்கள் குணமாக பகவான் தன்வந்திரி மூலம் இயற்றிய தன்வந்திரி சம்ஹிதா ஆயுர்வேதத்தின் ஆதார நூலாகும். விஷ்ணுவின் வடிவமான பகவான் தன்வந்திரியின் நாமத்தை ஜெபித்தாலே நோய் குணமாகும். 10. விழாமல் இருக்க விழா கொண்டாடுங்கள்
பொதுவாகவே விழா என்பது பண்டிகைகளைக் குறிக்கும். விழா என்கின்ற சொல்விழாமல் இருப்பதைக் குறிக்கும். நம்முடைய மனது புஞ்சைமனது. பல்வேறு சூழ்நிலை
களால் சற்று தளரும். சோர்ந்து விடும். கீழே விழும். விழுந்த மனதை எழ வைக்க, நாம் சில விழாக்களைக் கொண்டாடுகின்றோம். அது ஒரு உற்சாகக் குறியீடு.
உதாரணமாக, வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி வருகிறது என்று சொன்னால், அந்தத் தீபாவளியை எதிர்பார்த்து எதிர்பார்த்து நம்முடைய உழைப்பு, நம்முடைய ஊதியம், நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய வணிகம், நாம் புழங்கக்கூடிய பணம், நம்முடைய பொருளாதாரம். என எல்லாமே அதை நோக்கியே ஓடும். அப்படி ஓட வைத்து, நம்மைக் கீழே விழாமல் வைப்பதற்காகத்தான் தீபாவளியை விழாவாகக் கொண்டாடுகின்றோம். அது நம் சோர்வை போக்கி உற்சாகத்தைத் தருகின்றது. 11. வெளிச்சத்தை நோக்கி...
தீபாவளி என்றாலே வெளிச்சம்தான். வெளிச்சம் என்பது ஞானத்தைக் குறிக்கும். அதனால் பகவானுக்கு ஜோதி ஸ்வரூபன் என்று பெயர். அன்று தீபம் ஏற்றி பகவானை தீபத்தில் தரிசிக்கின்றோம். தீப மங்கள ஜோதி நமோ நம என்று முருகனை தீப மங்கள ஜோதியாக அருணகிரிநாதர் பாடுகின்றார். ‘‘அண்டமாம் எண்டிசைக்கும் ஆதியாய் நீதியான பண்டமாம் பரமஜோதி’’ என்று திருமாலை ஜோதியாகப் பாடினார் திருமங்கை ஆழ்வார்.
காஞ்சிபுரத்துக்கு வரதராஜர் கோயிலுக்கு அருகிலே இருக்கக்கூடிய திருத்தண்கா என்ற திருத்தல பெருமாளுக்கு தீபப் பிரகாசர் என்று பெயர். வள்ளலார் கூட இறைவனை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று ஜோதியாகவே கருதினார். 12. அன்னபூரணியும் தீபாவளியும்
காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது அன்னபூரணி ஆலயம். இதை துளசி மானச மந்திர் என்று அழைப்பார்கள். இங்கு பார்வதி தேவி அன்னபூரணியாக அருள்பாலிக்கிறாள். அன்னம் என்பது சோறு ஒருவனுடைய பசிப்பிணியைப் போக்குவது அன்னம். அன்னம் என்பது பசிப் பிணிக்கான மருந்து.
அந்த அருமருந்தால் உயிர்களைக் காப்பாற்றுகின்றார் அன்னபூரணி. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் தங்க அன்ன பூரணியின் தரிசனம் கோயிலின் முதல் தளத்தில் இருக்கும் தங்க அன்னபூரணி நரக சதுர்த்தி அன்று அதாவது தீபாவளிக்கு முதல் நாள் உப்பரிகையில் இருந்து இறங்கி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றாள் நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆறடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது. தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது சிறப்பு. இதே போல அன்னபூரணியை விரதமிருந்து வணங்க வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று அன்னபூரணி படத்தை வைத்து பூஜை செய்யுங்கள்.
13. அன்ன கூடம்
அன்னபூரணி அவதாரம் எப்படி நிகழ்ந்தது? அவர் காசிக்கு எப்படி வந்தார் என்பதே ஒரு புராணக் கதையாக சொல்லப்படுகிறது. பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். பிரம்மனின் ஒரு தலையை சிவனார் அறுத்துவிட்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. அதே நேரம் பார்வதி, அன்னபூரணியாக காசியில் தவம் செய்தாள்.
சிவபெருமான் அன்ன பூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலகப் பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கிவிட்டார்.
இந்த அன்னைக்கு தீபாவளியன்று அன்னக் கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுப்பார்கள். 14. தீபாவளி நோன்பு
கௌரி நோன்பு வீட்டில் உள்ள பெண்கள் 1.11.2024 அன்று வெள்ளிக்கிழமை அனுசரிக்க வேண்டும். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரி விரதம் எனவும், ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர்பெறுகிறது. விரதம் மேற்கொள்ளும் நாளில் சூரிய உதயத்துக்குப்பின் மாலைவரை உபவாசம் இருந்து பூஜை செய்யவேண்டும். முதலில் கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
பூஜைக்குத் தேவையான பூ, பழம், நிவேதனங்களை தயார்செய்து கொள்ள வேண்டும். பச்சரிசி மாவில் அதிரசம் செய்து நிவேதனம் செய்வது விசேஷம். ஒரு மஞ்சள் சரடில் 21 முடிச்சுகள் இட்டு அதைக் கலசத்தில் அலங்கரித்து வைக்க வேண்டும். அன்று பூஜையில் எல்லா பட்சணங்களையும் 21 என்று எண்ணிக்கையில் வைக்க வேண்டும். 21 பழங்கள், 21 அதிரசம், 21 செட் வெற்றிலை பாக்கு ,21 முடிச்சு உள்ள நோன்பு கயிறு என எல்லாமே 21 தான்.
பூஜையைத் தொடங்கும் முன்பு சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பிறகு சிவபெருமானுக்குரிய அஷ்டோத்திரத்தைச் சொல்லி வில்வம் மற்றும் மலர்களால் பூஜை செய்ய வேண்டும். பிறகு கலசத்தில் சாத்தியிருக்கும் தோரணத்தை எடுத்து அதற்குப் பூஜை செய்ய வேண்டும். தோரணத்திலிருக்கும் 21 முடிச்சுகளுக்கும் சிவனின் 21 நாமங்களைச் சொல்லிப் பூஜைசெய்து பிறகு வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் கொடுத்துக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். பின் கலசத்துக்குத் தூப தீபங்கள் காட்டி நிவேதனங்கள் செய்து கற்பூர ஆரத்தி காட்டி நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு நிவேதனங்களை உட்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
15. துலா ஸ்நானமும் தீபாவளி ஸ்நானமும்
ஐப்பசி மாதம் என்றாலே புனித நீராடலைக் குறிக்கும். தீபாவளி நீராடல் மட்டுமல்ல ஐப்பசியில் துலா ஸ்நானம் என்பதும் சாலச் சிறந்தது அல்லவா. தீபாவளி கொண்டாடும் பொழுது துலா ஸ்நானமும் இணைந்து கொண்டாடுவது சிறப்பு மிகுந்தது. தீபாவளி நீராடலில் எல்லா தீர்த்தங்களிலும் கங்கை வந்து விடும். துலா நீராடலில் காவிரி வந்துவிடும். கங்கையையும் காவிரியையும் இணைப்பது தீபாவளி.
எனவேதான் இந்தப் பண்டிகையை நம் தேசம் முழுதும் வெவ்வேறு விதமாக உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள். இனி இந்த வாரம் 2.11.2024 முதல் நாடு முழுதும் அனுசரிக்கப்படும் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழாவைக் குறித்துக் காண்போம். ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்த வளர்பிறை பிரதமையில் முருகப் பெருமானின் கந்தசஷ்டி பெருவிழாவும், சஷ்டி விரதமும் தொடங்குகிறது. 16. கந்த சஷ்டி
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் முருக பக்தர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விரதம் 2.11.2024 அன்று தொடங்கி 8.11.2024 அன்று நிறைவு பெறும்.
ஆறுபடை வீடுகளில் மட்டும் அல்லாது சிறு கிராமத்தில் உள்ள முருகன் ஆலயங்களிலும், முருகன் சந்நதி உள்ள சிவாலயங்களிலும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பெறும். இந்த ஆறு நாட்களும் முருக பக்தர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர். 17. எப்படி விரதம் இருப்பது? என்ன சாப்பிடலாம்?
விரதம் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் முழுவதும் இலகுவான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். விரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். உணவு உண்ணாமல் இருக்கும்போது, கோபம், பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். முழுமையாக தண்ணீர் கூடப் பருகாமல் தீவிர விரதம் இருப்பவர்கள் உண்டு.
அப்படி முடியாதவர்கள், கந்த சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சி வேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
18. யார் இந்த அசுரர்கள்? ஏன் சூரசம்ஹாரம்?
ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்த புராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.கந்த புராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது.
ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹாரமாகும்.நமக்குள் இருக்கும் காம குரோதங்கள், ராக துவேஷங்கள் மறைய இறைவன் உதவுவான், அடுத்து நம்மை நாமே உணருவோம் என்று நமக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்டவே இத்தினங்கள்.
19. அல்லவை போக்கி நல்லவை அருளல்
அசுரர்கள் என்பது வெளியிடத்தில் இல்லை. நம் உள்ளேயே இருக்கிறார்கள். பிறரைத் துன்பப்படுத்தும் சொற்களும் செயல்களும் அசுரத் தன்மையின் அடையாளங்கள்தான். முருகப் பெருமானை விரதமிருந்து வழிபடுவதன் மூலம் இந்த அசுரத்தன்மைகள் சம்ஹாரம் செய்யப்படும். (அழிக்கப்படும்). இதுவே சூரசம்ஹாரம். சூரனை முருகன் சம்ஹாரம் செய்யவில்லை. அவன் ஆணவத்தை அழித்து, நெறி தவறியவனையும் ஆட்கொண்டு, வேலாகவும் மயிலாகவும் மாற்றி, முருகப் பெருமான் தன்னுடனேயே வைத்துக் கொண்டான்!
20. சஷ்டி விரதத்தில் என்ன படிக்கலாம்?
கந்த சஷ்டியின்போது தொடர்ந்து “ஓம் சரவணபவ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை பாராயணம் செய்துகொண்டே இருக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா, அருணகிரிநாதரின் திருப்புகழ், மற்றும் உள்ள முருகனின் பாராயண நூல்களை இயன்ற அளவு பாராயணம் செய்வது நல்லது இதில் கந்த சஷ்டி கவசத்தை பலரும் தொடர்ந்து பாராயணம் செய்வார்கள்.
கவசம் என்றால் பாதுகாப்பது, காப்பாற்றுவது என்று பொருள் கந்த சஷ்டி கவசம் நம்மை பல விதமான கஷ்டங்களில் இருந்தும் நோயிலிருந்தும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கிறது இதைப் பாராயணம் செய்பவர்கள் இதன் சிறப்பை உணர்ந்து இருக்கின்றார்கள். முருகனின் அறுபடை வீட்டுக்கும் தனித்தனி கந்த சஷ்டி கவசம் இருக்கிறது. 21. சஷ்டி விரதத்தில் பிறந்தது கந்த சஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசத்தை அருளிச் செய்தவர் தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் சிறந்த முருக பக்தர். ஒரு சமயம் கடுமையான வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டார். பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டாலும் அவர் நோய் தீரவில்லை. இனி கடலில் விழுந்து மாள்வோம் என்று நினைத்து திருச்செந்தூர் சென்றார். அங்கே கந்த சஷ்டி விழா நடந்துகொண்டிருந்தது. முருக பக்தரான தேவராய சுவாமிகள் கந்த சஷ்டி விரதம் இருந்து, சூரசம்ஹாரம் முடிந்தவுடன், முருகனின் திருவடியை அடையலாம் என்று முடிவு எடுத்தார்.
22. தினம் ஒரு படைவீடு கவசம்
ஆறு நாட்களும் தினத்துக்கு ஒன்றாக ஆறுபடை வீடுகளுக்கும் தனித் தனியாக ஆறு கவசங்களைப் பாடி முடிப்பது என்று முடிவு செய்தார் அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்கும் கவசங்களைப் பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்று வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.
ஆறாவது நாள் பாடி முடித்தவுடன் வயிற்று வலி முழுமையாக நின்றுவிட்டது. இப்படிப் பிறந்தது தான் கந்த சஷ்டி கவசம். இதில் ஆறு கவசங்கள் உண்டு. இவை அனைத்துமே கந்த சஷ்டி கவசம் என்கிற பெயரோடு தான் இருக்கின்றன. அதில் முதல் கவசம்தான் திருச்செந்தூர் கவசம். அதில்தான், சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! - என்று தொடங்குகின்றார். ஒவ்வொரு படை வீட்டுக்கு ஒவ்வொரு கவசம் இருந்தாலும் திருச்செந்தூர் கவசம் பிரபலமாகியது.
23. வேறு விதமாகவும் குறிப்பு உள்ளது
ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றார், தேவராய சுவாமிகள். மலையைச் சுற்றி உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற்றோர், பிச்சைக்காரர்கள் எனப் பலரும் அழுது அரற்று வது கண்டு மனம் வருந்தினார். ‘முருகா, நீ இருக்கும் இடத்தில் இத்தனை துன்பங்கள் இருக்கலாமா! இது உனக்கு அழகா! என் இறைவனே இவர்களின் துயர்களை உடனே ஓடிவந்து மாற்று’ என்று வேண்டினார்.
அன்று இரவு பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் உறங்கினார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பன் பிரசன்னமானார். ‘‘உன் எண்ணம் ஈடேற, உலகிலுள்ளோர் அனைவரும் ஓதி இன்புற்று வாழ ஒரு மந்திரத்தை செந்தமிழில் பாடு!’’ என்று ஆசி கூறி பழநியப்பன் மறைந்தார். உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். மடை திறந்த வெள்ளமாய் சஷ்டி கவசம் பிறந்தது. 238 அடிகளைக் கொண்ட இந்த கந்தர் சஷ்டி கவசம் பாடுவோருக்கு கவசமாக இருந்து எல்லா தொல்லைகளில் இருந்தும் காக்கும்.
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.
24. சண்முகக் கவசம்
பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்தார் அப்படி ஒரு முறை பாராயணம் செய்யும்பொழுது அவரும் கவிஞர் என்பதால் தானும் முருகன் மீது இப்படி ஒரு கவசத்தை இயற்ற வேண்டும் என்று விரும்பினார். அப்படியே முருகன் மீது ஒரு கவசமும் பாடினார். அந்த கவசம் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது.
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க.
என்பது இதில் உள்ள முதல் பாடல். இந்தப் பாடலைப்பிழை இல்லாமல், நம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து வந்தால் தீராத நோயையும் தீர்க்கக்கூடிய சக்தி படைத்தது. இது மெய், உயிர் இரண்டையும் கவசம் போல் இருந்து காப்பது. கந்த சஷ்டியில் சண்முக கவசமும் பாராயணம் செய்யலாம்.
25. முருகனுக்கு மூன்று மயில்கள்
மயிலாக நான் மாற வேண்டும். வள்ளி மணவாளன் என் தோளில் இளைப்பாற வேண்டும் என்று ஒரு பாடல் உண்டு. சீர்காழி கோவிந்தராஜன் உருக்கமாகப் பாடிய முருகன் பாடல். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.
1. மந்திர மயில். 2. தேவ மயில் 3. அசுர மயில்.
அம்மையப்பனிடம் இருந்து மாங்கனி பெறுவதற்காக உலகைச் சுற்றி வந்தது மந்திரமயில். சூரசம்ஹாரம் செய்யும் பொழுது இந்திரனே மயிலாக வந்தான். அதற்கு தேவமயில் என்று பெயர். சூரபத்மன் மாமரமாக வந்து எதிரிட்டபோது அவனைத் தொலைத்துப் பின் இரண்டாகப் பிளந்து, அதில் ஒரு பகுதியை மயிலாக ஏற்றுக் கொண்டான். அது அசுர மயில்.
26. காலாவதியாகாமல் காப்பாற்றும்
கந்த சஷ்டியின்போது தினம் அதிகாலை நீராடி திருநீறு அணிந்து பின் பூஜை செய்ய வேண்டும். பாழ் நெற்றியோடு பூஜை செய்யக்கூடாது. திருநீறு பூசும்போது சடாக்ஷர மந்திரம் ஓதி பூச வேண்டும். பழனியில் விபூதி அபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.
யாத்திரிகர் ஒருவர் பழனியில் திருநீறு பொட்டலம் வாங்கினார் அந்தப் பொட்டலத்தைத் திரும்பத் திரும்ப பார்த்துவிட்டு, ‘‘இது எத்தனை நாள் பயன்படுத்தலாம்? இதற்கு காலாவதி தேதி இருக்கிறதா (Expiry Date)?’’ என்று கேட்டார். அப்பொழுது கடைக்காரர் சொன்னார். ‘‘ஐயா, நமக்குத்தான் காலாவதி தேதி இருக்கிறது. நாம் பூசும் திருநீறுக்கு காலாவதி தேதி கிடையாது. அது நாம் காலாவதியாகாமல் காப்பாற்றும், என்றார். 27. திருமுருகாற்றுப்படை
அறுபடை வீடு கொண்ட திருமுருகனுக்கு முதலில் ஆற்றுப்படை பாடியவர் நக்கீரர். பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. ‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். ‘‘முருகாற்றுப்படை’’ எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று.
28. சஷ்டியின்போது பாராயணம் செய்யலாம்
கந்த சஷ்டியின் போது மாலையில் இந்த நூலை பாராயணம் செய்யலாம். அதன் மூலம் ஆறுபடை வீட்டிற்கும் சென்று முருகனை தரிசித்த பேறு நமக்குக் கிடைக்கும். இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர். பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன.
29. சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்
சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதீஸ்வரர் சந்நதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நதியும், மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சந்நதியும் அமைந்துள்ளது. மிகப்பழமை வாய்ந்த இந்தத் தலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முருகனின் ஏழாவது படைவீடாகும்.
சூரசம்ஹார விழா 2.11.2024 அன்று தொடங்குகிறது. 6.11.2024 பஞ்சமி திதி அன்று மாலை 7.30 மணியளவில் தேரிலிருந்து இறங்கும் முருகப்பெருமான் நேராக அன்னை வேல் நெடுங்கண்ணி அம்மையிடம் சக்திவேல் பெறுகிறார். அப்போது முருகப்பெருமானுக்கு வியர்ப்பதை இப்போதும் காணலாம். அடுத்த நாள் (7.11.2024) தாயாரிடம் பெற்ற வேல் கொண்டு சூரபத்மனை வதைத்த நாளை சூரசம்ஹாரமாகக் கொண்டாடுகின்றனர். தொடர்ந்து 8.11.2024 அன்று தேவசேனை திருக்கல்யாணமும் 9.11.2024 அன்று வள்ளி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
30. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்
அறுபடை வீடுகளிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றாலும் சூரசம்ஹாரம் எனும் நிறைவுப்பகுதி திருச்செந்தூரில்தான் விசேஷமாக நடைபெறுகிறது. அறுபடை வீட்டில் சூரசம்ஹாரம் நடக்காத இடம் திருத்தணிகை. முருகப்பெருமான் சினம் தணிந்து அருளும் இடம் என்பதால் மற்ற தலங்களில் நடப்பது போல கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் இங்கே நடைபெறுவது இல்லை. கந்த சஷ்டி ஐதீக விழாவாகவே இங்கே கொண்டாடப்படுகிறது. ஆனால் திருச்செந்தூரில் கடற்கரையில் இந்த விழாதான் அதிமுக்கியம்.
இந்த ஆண்டு 7.11.2024 அன்று மாலை 4.15 மணி முதல் 6.00 மணிக்குள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மஹா சூரன், சிங்கமுகன், பானு கோபன், சூரபத்மன் ஆகிய அரக்கர்களின் பெரிய உருவங்கள் கடற்கரையில் நிற்கும். வீரபாகு மற்றும் பாலசுப்பிரமணியர் மற்றும் கல்யாண சுப்ரமணியர் ஆகியோரின் திருவுருவங்கள் தனித்தனி தேர்களில் கொண்டு செல்லப்படும்.
சூரபத்மன் என்ற அரக்கனின் முழுப் போரும் இறுதி வீழ்ச்சியும் இயற்றப்படும். இந்த சடங்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடிக்கும். பக்தர்கள் அமைதியுடனும், வசதியுடனும் இத்திருவிழாவைக் கண்டு தரிசிப்பார்கள். அன்று கடலே சற்று உள்வாங்குவதோடு சிவப்பு நிறத்தோடு காட்சி தருவதும் உண்டு.இந்த சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்தில் ஆண்டவர் எதிரே கண்ணாடி வைத்து கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும் இதற்கு சாயா அபிஷேகம் என்று பெயர். கந்த சஷ்டி விரதமிருந்து இந்த சூரசம்ஹார விழாவை நினைத்தாலும் தரிசித்தாலும் நம் அசுர எண்ணங்கள் மாயும். அகம் சிறக்கும். நல்வாழ்வு பிறக்கும்.
எஸ். கோகுலாச்சாரி
|