உள்ள(த்)தைச் சொல்கிறோம்
டி.எம்.ரத்தினவேல் எழுதிய ஆருத்ரா தரிசனம் கட்டுரை அருமை. லால்குடியில் ஆருத்ரா பற்றி படித்து மகிழ்ந்தேன். என் குல தெய்வம் சிவன் என்பதால் அவரைப் பற்றி படிக்க மிகவும் விரும்புவேன். வரும் இதழ்களில் மேலும் பல சிறப்பு சிவன் கோவில்கள் பற்றி படிக்க ஆவலாக உள்ளேன். - ஆர்.சுப்ரமணியன், சென்னை.
வீடா? திருமண மண்டபமா? ஆலயமா? எதில் வைத்து திருமணம் நிகழ்த்துவது நல்லது என்பதற்கு K.B.ஹரிபிரசாத் சர்மா விவரித்த விதம் ஆத்மார்த்தம். ஒரு நாளோ, ஒரு சில நாட்களோ ஆடம்பரக் கல்யாணம் பெருமிதம் இல்லை. வாழ்க்கைக்கு தேவையான எனர்ஜி என்சைடர்க்குகள் அவசியம் என்பதை அழகாகக் கூறிவிட்டார். உண்மையான மங்களம் சுடர் வீசியது.
‘சிற்பமும் சிறப்பும்' பகுதியில் மனம் சிலையாகி லயித்து ரசிக்கிறது. நகரத்தார் மலை என்பது நார்த்தாமலையான விண்ணகரம் இயற்கை வடிவளவு படைப்பு சிற்பங்கள் நெஞ்சத்தில் கல்வெட்டுகளாகி கண்களோடு சுடர் வீசுகின்றன.- ஆர்.ஆர்.உமா,நெல்லை.
திருப்பூர் கிருஷ்ணனின் ‘குறளின் குரல்’ பகுதி மெய்யை இயக்குகிறது. வேறு இதழ்களில் கிடைக்காத அபூர்வபலன் அருளும் நவக்கிரக கவசங்கள் கிடைத்தது, வாசகர் உலக பாக்கியம்! வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள் படிக்க படிக்க மனதின் வெற்றிடங்கள் பூரணத்துவம் பெறுகின்றன. - என்.ஜே.ராமன், திருநெல்வேலி.
‘குருவருள்’ குறித்த தலையங்கம் தாயன்பையும் விஞ்சியது. குரு உன்கருணை என்பதை விவரித்ததில் அருள் பொழிகிறது. சுவாமிஜியின், சகோதர சகோதரிகளே என்ற உச்சரிப்பின் உன்னதமே மனிதகுல ஒற்றுமை தான் என்பது அருமை. இந்த கருத்து 780 கோடி உள்ளங்களிலும் ஒளி வீச வேண்டிய சுடர்! “முத்துக்கள் முப்பது” சீசனுக்கேற்ற ரீசனாக, “தை பிறந்தால் வழிபிறக்கும்” என்ற தொகுப்பாக அமைந்தது ஈசன் அருள் பெற வைக்கும் தனிச்சிறப்பாக பொங்கியது! பதின்மூன்று பக்கங்களின் தொகுப்பு பரவசம் பொங்கச் செய்தது! - ஆர்.விநாயகராமன், நெல்லை.
ஆண்டாள் திருப்பாவை பக்தி ஸ்பெஷல் ஆத்மாவின் அருட்காட்சியாக, ஆன்மிகம் பலன் பொருட் காட்சியாக ஒளிர்கிறது! பாதகங்கள் நீக்கிடவும் பரமனடிகாட்டிடவும் கோதை தமிழில், முத்துக்கள் முப்பது முந்தியே இருக்கிறது. 2022 புத்தாண்டு ராசி பலன்கள் இணைப்பு துல்லியமாக பலன்களை அள்ளித் தந்ததால் வெறும் இணைப்பாக மட்டுமல்ல இனிப்பானதும் கூட! என் கடகராசிக்கு யதார்த்த நிலையோடு அலசித்தந்த பலன்கள் பலமாகவே தெரிந்தது! - ஆர்.ஜி.பாலன், நெல்லை.
“தெளிவு பெறுவோம்” பகுதியில் ஒரு பக்கத்தில் இருகேள்விக்குப் பதில் அடங்கியிருந்தாலும், நாலாப்பக்கங்களிலும் சென்றடையும் நல்ல விசயங்களை தெளிவாக்கி விட்டார் சர்மா! பக்கம் சுருங்கியதே தவிர பக்குவம் குறையவில்லை! “ராம..ராம” என்ற தலையங்கம், தர்மம் + தியாகம் + தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது + அன்னை மனம் காப்பது + கானகத்திலும் கூட நல்லதையே செய்வது + என்றெல்லாம் ராமரின் அவதாரம் உணர்த்திய சுவடுகளைப் பதிவிட்ட விதம் பிரமாதம்! - மருதூர் மணிமாறன், இடையன்குடி.
சிகாகோவில் ‘சகோதர, சகோதரிகளே! என்று சுவாமி விவேகானந்தர் அழைத்ததை சிலாகித்திருக்கிறார் பொறுப்பாசிரியர். ஆம், பொது இடங் களில் அறிமுகமில்லாதவர்களைக் கூட அம்மா, அண்ணா, தம்பி என்று அழைப்பதுதானே நம் பண்பாடு. நம் காலத்தில் வாழ்ந்து, நாம் வாழும் காலத்திற்கேற்ப உபதேசித்த விவேகானந்தரை குருவாகக் கொண்டு, நல்லிணக்கம் கொள்வோம் என்று குருவருள் தலையங்கம் வலியுறுத்தியதை 2022 புத்தாண்டு சபதமாக்குவோம். - அ.யாழினி பர்வதம், சென்னை.
முத்துக்கள் முப்பது, ஆன்மிகம் வாசகர்களுக்கு ஆண்டவனருளால் கிடைக்கப் பெற்ற அருட் சொத்து! பாதகங்கள் நீக்கும் பரமனை காட்டும் கோதை தமிழ் என்ற வகையில் திருப்பாவை மலர்ந்து, மணந்து, எழுந்து, ஏற்றம் தந்த விதம் இதயமெல்லாம் ரதம்! பொங்கல் பக்தி ஸ்பெஷல் அட்டையில் கூட சூர்ய பிரகாசம்! கூடவே காலண்டர் + ராசி பலன்கள் இணைப்ப + ஆன்மிகம் முகப்பில் அருள் மாரி பொழிந்தது! -ஆர்.ஜே.கல்யாணி ஜானகிராமன், நெல்லை.
|