கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்



குயவர் அளித்த குன்றாக்கொடை

சோழநாட்டுத் தேவார தலங்கள் வரிசையில் மூன்று திருக்கோயில்களில் மட்டும் அந்தந்த கோயில் வளாகங்களில் இரண்டிரண்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் என ஆறு தலங்கள் உள்ளன. ஆரூர் எனப்பெறும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் வளாகத்தினுள் பூங்கோயில் (கமலாயம்) எனப்பெறும் புற்றிடங்கொண்டார் கோயிலும், இரண்டாம் திருச்சுற்றில் மேற்கு நோக்கியவாறு ஆரூர் அரநெறி (அசலேசம்) எனும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற சிவாலயமும்  அமைந்துள்ளன.

இது போன்றே புனல் சூழ்ந்த (அகழி) திருப்புகலூர் திருக்கோயிலின் வளாகத்தினுள்ளே மூலவர் கோயிலாம் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் என்ற பாடல் பெற்ற தலமும், மூலட்டானத்தின் வலப்புறம் திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற பாடல்பெற்ற திருக்கோயிலும் உள்ளன. மூலவர் கோயிலில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடும்போது, ‘‘புள் எலாம் சென்று சேரும் பூம்புகலூரை பாடுமின் புலவீர்காள்’’, என்றும் ‘‘பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறாப் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்’’ என்றும் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் சோழநாட்டுத் திருப்புள்ளமங்கையில் ‘‘பொத்தின் அடை ஆந்தை பல பாடும் புளமங்கை அத்தன் நமை ஆள்வான் இடம் ஆலந்துறை அதுவே’’ என்பார். பாண்டியநாட்டு தேவாரத் தலமான திருப்புணவாயிலில் ‘‘பத்தர் தம் பலர் பாடி நின்று ஆடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅறாப் புணவாயிலே’’ என்று சுந்தரன் மீண்டும் கூறியுள்ளார்.

ஆந்தைகள் பாடுவதாகப் போற்றும் மரபு புனிதமானதாகும். வடபுலத்தார் திருமகளின் வாகனமாக ஆந்தையை மங்கலமுடையதாகப் போற்றுவர். கோயில் கோபுரங்களில் வாழும் ஆந்தைகள் சோழநாட்டு நெல் வளத்திற்கு (எலிகளை அழிப்பதற்கு) அடிப்படை காரணமானவை என்பதை நாம் உணர்தல் வேண்டும். திருப்புகலூர் வர்தமானீச்சரம் திருமுருகநாயனாரால் பூசிக்கப்பெற்ற சிறப்புடையது. அதனால்தான் திருஞானசம்பந்தர் ‘‘மூசுவண்டு அறை கொன்றை முருகன் முப்பேதும் செய் முடிமேல் வாசமாமலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே’’ என்று அங்கு பாடிய பதிகப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இரு பாடல் பெற்ற தலங்களுடைய மூன்றாம் திருக்கோயில் திருமீயச்சூர் என்பதாகும். இங்கு சம்பந்தரால் பாடல் பெற்ற மீயச்சூர் கோயிலும் அதன் அருகிலேயே அதற்கு இணையாக அப்பரால் பாடப்பெற்ற மீயச்சூர் இளங்கோயிலும் உள்ளன. திருஞானக் குழந்தையார் தம் பாடலில் அன்று மாயமாக வந்து நின்ற சூரபத்மன் தலையை அறுத்த முருகப் பெருமானின் தந்தையாகிய சிவபெருமான் உறையும் கோயிலைத் தொழுதால் நம் வினை அறுமே என்ற பொருள்பட,

‘‘மாயச்சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை தன்
மீயச்சூரைத் தொழுது வினை வீட்டுமே’’

என்று குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தில் பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார்,
‘‘தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில்கள் பல உள மீயச்சூர்’’
என்று முதற்பாடலிலேயே குறிப்பிட்டு முன்பே தோற்றுவிக்கப் பெற்று அங்கு திகழ்ந்த கோயிலையும் அவர் அங்கு சென்றபோது தோற்றம் பெற்றுக் கொண்டிருந்த கோயிலையும் குறிப்பிட்டுள்ளார். அந்த தோற்றும் கோயில்தான் மீயச்சூர் இளங்கோயில். இதனை பாலாலயம் என்று குறிப்பிடுவர்.

இங்கு குறிப்பிடப்பெறும் மூன்று இரட்டை இரட்டைப் பதிகக் கோயில்களில் புகலூரும், மீயச்சூரும் வேளாக்குறிச்சி ஆதினத்தாலும், ஆரூர் தருமை ஆதினம் மற்றும் வேளாக்குறிச்சி ஆதினத்தாலும் அருளாட்சி செய்யப் பெறுகின்ற கோயில்கள் என்பதால் அங்கெல்லாம் தூய்மையும் தெய்வீக மணமும் கமழ்வதோடு நம்மை ஈர்க்கும் அருளணுபூதியையும் நாம் பெறமுடிகின்றது.

அது மனத்திற்கு நிறைவை அளிக்கும்.திருமீயச்சூர் - மீயச்சூர் இளங்கோயில் எனும் இப்பெருங்கோயில் உள்ள திருவூர் திருவாரூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையிலுள்ள பேரளம் கடைவீதியிலிருந்து மேற்காகப் பிரியும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. குடந்தை, காரைக்கால் நெடுஞ்சாலையில் செல்வோர் கொல்லுமாங்குடி எனும் ஊரில் சந்திக்கும் ஆரூர் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று பேரளத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் தடத்தில் பேரளம் ரயில் நிலையம் உள்ளது. தற்காலத்தில் லலிதாம்பிகை கோயில் என்று கூறினால்தான் மீயச்சூர் செல்ல பலரும் வழிகாட்டுவர்.

திருமீயச்சூர் எனும் ஊரின் நடுவண் திகழும் இச்சிவாலயம் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் திகழ்கின்றது. திருக்கோபுரம் கடந்து இரண்டாம் கோபுரத்திற்கு முன்பு துவஜஸ்தம்பம், பலிபீடம், ரிஷபக்கொட்டில் ஆகியவை அமைந்துள்ளன. வலப்புறம் திருக்காமகோட்டமாகிய தேவியின் திருக்கோயிலும் இடப்புறம் விஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளன. இரண்டாம் கோபுரம் கடந்து உள்ளே சென்றால் திருச்சுற்று மாளிகையுடன் திருமீயச்சூருடையார் கோயில் அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகியவற்றுடன் காணப்பெறுகின்றது. மூலவரின் ஸ்ரீவிமானம் தூங்கானை மாடம் எனப்பெறும் கஜபிரிஷ்ட விமானமாகத் திகழ்கின்றது. மூலவரான லிங்கப் பெருமானின் திருநாமங்களாக மேகநாத சுவாமி என்றும் மிகிரா அருணேஸ்வரர் என்றும் அழைக்கப்பெறுகின்றனர். இம்மூலவரின் அம்பாள் சந்நதி நாம் நுழையும்போது வலப்புறம் கண்ட ஸ்ரீலலிதாம்பிகை எனப்பெறும் சாந்தநாயகி அம்மை திருக்கோயிலாகும்.

மேகநாதப்பெருமானின் கஜபிரிஷ்ட விமானத்தின் வடபுறம் இணையாக இளங்கோயிலின் ஸ்ரீவிமானமும் முகமண்டபமும் உள்ளன. அப்பர் பெருமானின் பாடல் பெற்ற ஸ்ரீகோயில் இதுதான். இக்கோயிலின் முன்புறம் வடபால் அம்பிகையின் கோயில் உள்ளது. இங்கு இறைவனின் திருநாமம் சகல புவனேஸ்வரர் என்றும் தேவியின் திருநாமம் மேகலாம்பிகை என்றும் குறிக்கப்பெறுகின்றனர். அருகே சண்டீஸ்வரர் திருக்கோயிலும் திருமாளிகைப் பத்தியில் சிவலிங்கங்கள், அடியார்கள், கணபதி, முருகன், சூரியன், பைரவர் போன்ற பரிவாராலயங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன. ஈசானத்திக்கில் அருணாசலேஸ்வரர்க்கென்று தனித்த ஆலயம் உள்ளது.

மேகநாத சுவாமியின் கஜபிரிஷ்ட விமான கோஷ்டங்களிலும் இளங்கோயில் கோஷ்டங்களிலும் கணபதி, ஆலமர்ச்செல்வர், பிரம்மன் திருமாலுடன் அண்ணாமலையார், பிரம்மா, சந்திரசேகரர், திருமால், ரி­பாந்திகர், கங்காவிசர்ஜனர் போன்ற தெய்வத் திருமேனிகளின் கற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கோஷ்டங்களின் மேற்புறம் உள்ள மகர தோரண சிற்பக்காட்சிகள் சோழர் கலையின் உன்னதத்தை எடுத்துக்காட்டுபவையாகும். கோஷ்டமூர்த்தியான கங்கா விசர்ஜன மூர்த்தி ஒருபுறம் தவக்கோலத்தில் நிற்கும் பகீரதனுடனும், ஒருபுறம் பெருமான் தாடையை வருட நாணத்துடன் நிற்கும் உமையவளுடனும் காணப்பெறுகின்றார்.

அம்மையைத் தழுவி நிற்பவர் தன் விரிசடையில் முடிந்திருந்த கங்கை எனும் நங்கையை தன் இருவிரல்களால் எடுத்து பகீரதனுக்காக பூமியில் விட எத்தனிக்கின்றார். சடையில் காணப்பெறும் கங்காதேவியின் சிற்ப அழகோ பேரழகாகும். பெருமானின் கருணை முகமும் தேவியின் நாணத்தோற்றமும் ஏட்டில் வடிக்க இயலா சிறப்புடையவையாகும். பிரம்மா நின்றருளும் கோஷ்டத்திற்கு மேலே காணப்பெறும் மகர தோரணத்தில் திகழும் நரசிம்மரின் ஹிரண்யவத காட்சி சோழர் சிற்பக்கலையின் உச்சத்தைத் தொட்ட படைப்பாகும். நரசிம்மர் பத்துக் கரங்களுடன் திகழ்கின்றார்.

வலக்காலால் நின்றுகொண்டு இடக்காலைத் தூக்கி தன்னுடன் போரிட முயன்ற இரண்யகசிபின் கேடயம் பிடித்த இடக்கரத்தையும் வலக்காலையும் கிடுக்கிப்பிடியாக அழுத்தியுள்ளார். இரண்யனின் நீட்டியுள்ள இடக்காலை பெருமான் தன் வலக்கரம் ஒன்றால் இழுத்து அழுத்திப் பிடித்துள்ளார். அதேசமயம் அவர்தம் இடக்கரம் ஒன்று அவன் முண்டி எழாதவாறு அவன் சிகையைப் பற்றி இழுத்து நிற்கின்றது. இடப்பின்கரம் ஒன்று விஸ்மயம் (பேரதிசய முத்திரை) காட்ட மற்ற கரங்களில் சங்கு சக்கரம் உட்பட்ட திருமாலின் ஆயுதங்கள் உள்ளன.

நரசிம்மர் தன் முன்னிரு கரங்கள் கொண்டு இரணியனின் மார்பினைப் பிளக்கின்றார். அப்போது கோபாவேசத்துடன் வாய்பிளந்து கர்ஜிக்கும் அந்த சிம்ம முகத்தினை இனி எந்த ஒரு சிற்பியாலும் இத்தனை தத்ரூபமாகக் காட்ட இயலாது. பெருமானின் காலருகே இரணியனின் தேவி அமர்ந்தவாறு செம்மாந்த பெருமானின் திருக்கோலத்தை கண்டு தலைக்குமேல் இருகரம்கூப்பி தொழுகின்றார். எதிர்புறம் வாளும் கேடயமும் தாங்கிய அரக்கன் ஒருவன் பயந்து ஒதுங்கி ஓட முயல்கின்றான். அவனுக்கு மேலாக பிரகலாதன் உருவம் உள்ளது.

இந்த மகர தோரணத்தை போன்றே அங்கு கோஷ்டங்களில் திகழும் மகாலட்சுமி, சிம்மத்துடன் நிற்கும் கொற்றவை, தேவியுடன் அமர்ந்துள்ள சிவபெருமான், சண்டீசருக்கு தலையில் மாலை சூட்டும் காட்சி போன்ற பல உள்ளங்கவர் சிற்பக்காட்சிகள் இவ்வாலயத்தின் பொக்கிஷங்களாக விளங்குகின்றன. இங்குள்ள ஆதி சண்டீஸ்வரர் நான்கு தலைகளுடன் திரிசூலம், மழு, அக்கமாலை, ஜலகெண்டி ஏந்தி அமர்ந்தாராக காணப்பெறுகின்றார்.

இவ்வாலயத்தில் முற்கால சோழர் காலம் முதல் பாண்டியர் ஆட்சிக்காலம் வரை பொறிக்கப்பெற்ற பல கல்வெட்டுக்கள் காணப்பெறுகின்றன. சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டில் ‘‘உய்யக்கொண்டார் வளநாட்டு திருமீகைச்சூர் உடையார் திருமீகைச்சூருடைய நாயனார் திருக்காமகோட்டமுடைய சிவகாம சுந்தரி நாச்சியார்’’ என்ற வாசகம் காணப்பெறுகின்றது. லலிதாம்பிகை என்றும் சாந்த நாயகி என்றும் அழைக்கப்பெறும் இத்தேவியின் பண்டைய  திருநாமம் ‘‘திருக்காம கோட்டமுடைய சிவகாம சுந்தரி நாச்சியார்’’ என்பதாகும்.

சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழும் இக்காமகோட்டத்து லலிதாம்பிகை ஒரு காலை மடக்கி ஒருகாலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் இரு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றாள். அத்தேவியின் கால்களில் கொலுசுகள் பூட்டுவது இங்கு மேற்கொள்ளப்பெறும் வழிபாட்டு நெறியாகும்.
மிகிராருணேஸ்வரர் என அழைக்கப்பெறும் மேகநாதரின் தேவியான சாந்தநாயகி (லலிதாம்பிகை) அம்மையின் கோயில் தூண்களிலிருந்தும், சுவாமி சந்நதி மண்டபச் சுவர்களிலிருந்து பல கல்வெட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். கல்வெட்டுக்கள் இறைவனை மூலஸ்தானமுடைய மகாதேவர், திருமீயச்சூருடைய மகாதேவர், திருமீயச்சூருடையார் எனப் பல பெயர்களில் குறிப்பிடுகின்றன.

வீரராஜேந்திர பேராறு, பாண்டி குலபதி பேராறு, செம்பியன்மாதேவி மயக்கல், இறைவான்சேரி (எரவாஞ்சேரி) என பல இடங்கள் பற்றிய குறிப்புகள் உள.
மண்பாண்டம் செய்யும் குயவர்களை (குலாலர்) சோழர்கல்வெட்டுக்கள் வேட்கோவர் எனக் குறிப்பிடுகின்றன. அவர்கள் கோயில் இசைக்கருவிகளை இசைப்பவர்களாகவும், கோயில் அறங்கூர் அவயத்து  தலைவர்களாகவும் (நீதிபதிகளாகவும்) நிலவுடைமைபெற்று பல அறக்கொடைகளைச் செய்தவர்களாகவும் விளங்கியுள்ளனர்.

பராந்தக சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி 916இல்) திருமீயச்சூர் இறைவன் முன்பு இரண்டு நந்தா விளக்குகள் எரிப்பதற்காக சந்திரன் சூரியன் உள்ளளவும் செல்லுபடியாகுமாறு செம்பியன் மாதேவி மயக்கல் என்ற பெயரில் இருந்த ஒன்பது மா அரைக்காணி நிலத்தை வேட்கோவன் புகழன் முன்னூற்றுவன் என்பார் ஊர்ச் சபையிலிருந்து விலைக்கு வாங்கி கோயிலுக்கு அளித்துள்ளார்.

அந்த குயவரின் அறக்கொடையை சோழப் பேரரசன் கல்லில் பதித்து பெருமை சேர்த்துள்ள மான்பு பெருமைக்குரியதாகும். திருவாரூரில் உள்ள  திருநீலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குயவர்கள் ஒன்று சேர்ந்து ஐந்து வேலி நிலம் அளித்த அரிய செப்பேடு ஒன்று ஆரூர் கோயிலில் உள்ளது. குலாலர் மரபில் உதித்த திருநீலகண்ட குயவனாரின் பெருமையை அந்தணரான சுந்தரர் ‘‘திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன்’’ என்று திருத்தொண்டத்தொகையில் குறிப்பிட்டுள்ளார். குலாலர் தம் பெருமையை திருமீயச்சூர் கல்வெட்டில் கண்டு நம் மரபின் பெருமையை தெளிவுற அறியலாம்.