டியர் டாக்டர்



* முதிர்ந்த அனுபவமிக்க காதல் ஒருபுறம், இளம் வயதினர்களின் இன்றைய காதல் ஒருபுறம். இரண்டையும் ‘வாலன்டைன்’ஸ் டே சமயம் எடுத்து கவர் ஸ்டோரி ஆக்கியது பிரமிப்பையும், வியப்பையும் தந்து அசத்தியது. குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் எப்படி, எந்தெந்த நேரங்களில் தர வேண்டும் என்ற அட்வைஸ் இன்றைய இளம் தாய்மார்களுக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்தது. பாலிலிருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் என வரும் பொருட்களின் சத்தும், எடை குறைக்கும் ரெசிபியும் டயட்  டைரியின் முக்கிய பக்கங்கள்.
- சுகந்தி நாராயணன், வியாசர் நகர்.

* கரோனா வைரஸ் மக்களை வெகுவாக மிரட்டி வரும் இன்றைய சூழ்நிலைக்கு, சற்று ஆறுதலளிப்பதாக இருந்தது, கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கட்டுரை. மொத்தத்தில் மக்களின் அச்சத்தினை விரட்டியடித்திருந்த பயனுள்ள கட்டுரை!
- இரா வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* ‘புற்றுநோய் இல்லா புதிய உலகம்’ என்ற தலைப்பில், டாக்டர் கு.கணேசன் ஒவ்வொரு இதழிலும் கேன்சர் பற்றி கூறி வரும் தகவல்கள் பயன் தருபவையாக உள்ளன. கடந்த (பிப்.1-15) இதழில், ஆணினத்தின் ஆறாவது விரலான சிகரெட், பாக்கு ஆகிய போதை உண்டாக்கும் பொருட்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு முதல் காரணங்கள் என கூறியிருந்தது சரியான எச்சரிக்கை!
- சி.கோபாலகிருஷ்ணன், கிழக்கு தாம்பரம்.

* ‘கேமரா 576 மெகாபிக்ஸல்’ என்னுடைய விருப்பமான தொடர்களில் ஒன்று. நாம் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமான விஷயங்களை கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி சிறப்பாக விளக்கி வருகிறார். கடந்த இதழில் வெளியான கண்கள் சிவப்பாகலாமா என்ற கட்டுரையும், கண்ணாடி அணிபவர்களின் கவனத்துக்கு கூறியிருந்த ஆலோசனைகளும் எல்லோருக்கும் பயனளிப்பவையாக இருந்தது.
- தமிழ்ச்செல்வம், செம்பாக்கம்.

* கரோனா வைரஸ் தாக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் நிமோனியா பற்றி கட்டுரை அவசியமானதாக இருந்தது. நிமோனியா என்பதும் காய்ச்சலில் ஒருவகை என்றுதான் நினைத்து இருந்தேன். தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியன் பேட்டியைப் படித்த பிறகுதான், அந்நோய் நுரையீரலைப் பாதிக்கும் தொற்றுநோய் என்று அறிந்தேன்.
- எல்ஜின் ஜோசப், செங்குன்றம்.       

* ‘வெள்ளைப்படுதல்’ பற்றிய பெண்களின் அச்சத்தை கடந்த இதழில் போக்கியிருந்தீர்கள். இதற்காகவே ஒரு நன்றியும், உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
- சாருமதி, அனகாபுத்தூர், கோவை.

* இயற்கையின் அதிசயம் வசம்பு பற்றி டாக்டர் தீபா சொன்ன தகவல்கள் அனைத்தும் அருமை. ஓமத்தின் மகிமையையும் உணர்த்தியிருந்தீர்கள்.
- வெங்கடாசலம், மதுரை.