சினிமாவும் ஒரு வேலைதான்!



உத்ரபாண்டி என்கிற அதிரடி வில்லனாக ‘பரிசல்’ படத்தில் நடிக்கிறார் கே.ஜி.ஆர். உண்மையான பெயர் கோவிந்தன். தந்தை மற்றும் மகன் பெயரின் இனிஷியல்களை முன்னும் பின்னுமாக இணைத்து கே.ஜி.ஆர் ஆகியிருக்கிறார். இப்போதுதான் அறிமுகமே ஆகிறார். ஆனால் அதற்குள்ளாகவே ‘வீரத்திருவிழா’, ‘அடையாளம்’ என்று அடுத்தடுத்து புக் ஆகிவிட்டார்.



“குவாரி வேலை, கிணறு தோண்டுறது, லாரி டிரைவர்னு நிறைய வேலைகள் பார்த்திருக்கேன். இயக்குனர் சுந்தர், ‘பரிசல்’ படத்துக்காக லொகேஷன் பார்க்கவந்தப்போ என்னையும் பார்த்தாரு. நடிக்க விருப்பமான்னு கேட்டாரு. ஆரம்பத்துலே தமாஷ் பண்ணுறாரோன்னு நெனைச்சேன். அவரு சீரியஸாதான் கேட்குறாருன்னு தெரிஞ்சதும், எவ்வளவோ வேலை பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமுன்னு சினிமாவுக்கு வந்துட்டேன்” என்கிறார் கே.ஜி.ஆர்.

‘தலைவாசல்’ விஜய், ‘நிழல்கள்’ ரவி என்று மூத்த நடிகர்கள் படப்பிடிப்பில் இவரது நடிப்பை வெகுவாகப் பாராட்டினார்களாம். படத்தில் ‘புதுசா தினுசா’ என்கிற குத்துப்பாடலுக்கு ரிக்‌ஷாவுடன் சேர்ந்து கெட்ட ஆட்டமும் போட்டிருக்கிறாராம்.