அக்கா கடை-என் அப்பாவின் கனவை நிறைவேற்றுவேன்! பக்கோடா குயின் செல்வி
என்னோட சொந்த ஊர் திருச்சி அருகே பிரம்பலூர் என்ற கிராமம். என் கணவரும் அதே ஊர் தான். ஆனால் பக்கத்தில் இருக்கும் யசனை என்ற கிராமம். நான் பிறந்தது படிச்சது எல்லாம் பிரம்பலூரில் தான். அங்கு ஆறாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அதற்கு மேல் படிக்கல. அப்பா விவசாயம் தான் பார்த்து வந்தார். அம்மாவும் அப்பாக்கு உதவியா விவசாயம் செய்ய போயிடுவாங்க. அதனால் வீட்டில் நான் தான் சமையல் செய்வேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் சமையல் செய்ய ஆரம்பிச்சுட்டேன்னு தான் சொல்லணும். அது தான் இப்போது என் குடும்பத்தின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது’’ என்று கூறும் செல்வி அக்கா கடந்த பதினைந்து வருடமாக சமையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
 ‘‘கல்யாணமாகி நானும் என் கணவரும் சென்னைக்கு வந்துட்டோம். இரண்டு மகன்கள். என் பெரிய மகன் எட்டாம் வகுப்பு படிக்கும் போது நான் சமையல் செய்ய ஆரம்பித்தேன். அப்ப கடை எல்லாம் போட ஆரம்பிக்கல. வீட்டிற்கு சென்று சமையல் செய்து கொடுத்து வந்தேன். காலை மற்றும் மதிய உணவுன்னு செய்து தருவேன். நான் வேலைப் பார்த்த இடத்தில் எல்லாரும் என் சமையல் நல்லா இருக்குன்னு சொல்லி நீங்க ஏன் ஒரு உணவு கடையை ஆரம்பிக்க கூடாதுன்னு கேட்டாங்க. எனக்கும் சிறியக் அளவில் ஒரு ஓட்டல் ஆரம்பிக்கணும்ன்னு தான் ஆசை. ஆனால் ஆரம்பத்திலேயே பெரிய அளவில் போட வேண்டாம்ன்னு சிறிய அளவில் ஒரு வண்டிக் கடை ஆரம்பிக்கலாம்ன்னு நினைச்சேன்.
 காரணம் முதலில் அகல கால் வைத்து சரியாக போகலைன்னா நஷ்டமாயிடும். அதனால சின்னதா ஆரம்பிச்சு, எனக்கு என்று ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொண்டு அதன் பிறகு பெரிய அளவில் ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு செய்தேன். முதலில் கடையை ஆரம்பிக்க தேவையான பொருட்கள் வேணும். அதற்காக நான் வேலைப் பார்த்த போது கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து சீட்டு போட்டு இருந்தேன். அந்த பணத்தை கொண்டு தான் சமையலுக்கு தேவையான பாத்திரம், அடுப்பு, சமையல் செய்ய சின்னதா ஒரு ஸ்டாண்ட் எல்லாம் வாங்கி கடையை ஆரம்பிச்சேன். ஆனால் எங்க வைத்து சமைப்பதுன்னு தெரியல.
எங்க ஏரியாவில் ஒரு அம்மா மீன் கடை வச்சிருந்தாங்க. அவங்க பக்கத்தில் சின்னதா ஒரு இடம் இருந்தது. அவங்களிடம் கேட்ட போது, அவங்களும் சரின்னு சொல்ல முதலில் அங்கதான் ஆரம்பிச்சேன். நான் ஏற்கனவே சமையல் செய்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் பேச்சிலர் பசங்க எல்லாரும் சாப்பிட வந்தாங்க. ஒருவர் சாப்பிட்டு மற்றவருக்கு சொல்ல இரண்டே மாசத்தில் கூட்டம் அதிகமா வர ஆரம்பிச்சது. அதனால் வேறு இடத்திற்கு கடையை மாத்திடலாம்ன்னு நினைச்சேன். அப்பத்தான் நான் சமையல் வேலைப் பார்த்து வந்தவரின் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு எதிரில் காலி இடம் இருந்தது.
அவரிடம் கேட்ட போது, தாராளமா கடை போட்டுக்கோங்கன்னு சொன்னார். ஆரம்பத்தில் அவர் வீட்டில் காலை நேர சமையலை முடித்துவிட்டு அதன் பிறகு மாலை கடைக்கு தேவையான பொருட்களை தயார் செய்துவிடுவேன். நாலு வருஷமா அங்க தான் கடையை நடத்தி வருகிறேன். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக வந்து சாப்பிட்டு போறாங்க’’ என்றவர் தன் கடையில் உள்ள உணவுகள் குறித்து விளக்கினார்.
‘‘இது மாலை நேர ஸ்னாக்ஸ் கடை தான். எல்லாமே ஃபிரை ஐட்டம்கள் தான். சிக்கன் 65, சிக்கன் லெக் பீஸ், மீன் வறுவல், முட்டை போண்டா, சிக்கன் வடை, இறால் 65... என அனைத்தும் இங்கு கிடைக்கும். இதைத் தவிர சிக்கன் சூப்பும் உண்டு. மீன் மட்டும் வஞ்சரம், கிழங்கா, சங்கரா, கொடுவா, நெத்திலி.. ன்னு அன்று என்ன வகை கிடைக்கிறதோ அதற்கு ஏற்ப மாறுபடும். மற்ற உணவுகள் எல்லாம் எப்போதும் இருக்கும். கடையை ஆரம்பிச்சு முதல் இரண்டு வருஷம் சமையல் வேலையும் பார்த்துவந்தேன். அதன் பிறகு என்னால் இரண்டையும் பார்த்துக்க முடியல. காரணம் கடையை நானும் என் கணவர் மட்டும் தான் பார்த்துக்கிறோம்.
கடைக்கு நான் ஆட்கள் எல்லாம் போடல. காலைல கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி சுத்தம் செய்து, அதை மசாலா தடவி ஃபிரிட்ஜில் வைத்திடுவேன். இதற்கே நேரம் சரியாக இருந்ததால், வீட்டிற்கு சென்று சமையல் செய்யும் வேலையை விட்டுட்டேன். ஆனா ஒரு சிலர் எனக்கு இந்த உணவு சமைச்சு கொடுங்கன்னு கேட்பாங்க, அவங்களுக்கு மட்டும் என்னுடைய வீட்லயே சமைச்சு கொடுத்து வருகிறேன். பெரும்பாலான பேச்சலர் பசங்க இங்க வேலைக்காக தங்கி இருக்காங்க. இப்ப எல்லாரும் வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பதால், அவங்க கேட்கும் போது சமைத்து தருகிறேன். எனக்கு பிரியாணி கூட இதனுடன் சேர்த்து கொடுக்கணும்ன்னு ஆசை, நேரமில்லை என்பதால் செய்ய முடியல’’ என்றவர் கொரோனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
‘‘கடை ஆரம்பிச்சு ஓரளவுக்கு வருமானம் இருந்தது. அந்த சமயத்தில் தான் கொரோனான்னு கடை எல்லாம் மூட சொல்லிட்டாங்க. கடையும் போட முடியல, வருமானமும் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டமா போச்சு. இதில் வீட்டு வாடகை பசங்க படிப்புன்னு ரொம்பவே நொடிஞ்சி போயிட்டேன். என்ன செய்றதுன்னு தெரியாம ஊருக்கு கிளம்பி போயிட்டேன். அங்க எங்களுக்கு நிலம் இருக்கு. அதில் விவசாயம் செய்தேன். கீரை, சாம்பார் வெங்காயம், காய்கறின்னு பயிர் செய்தேன். அன்று என்ன விளைச்சலோ அதை சந்தையில் விற்றிடுவேன். அதில் வந்த வருமானத்தைக் கொண்டு தான் நாங்க சாப்பிட்டு வந்தோம். கிட்டத்தட்ட ஆறு மாசத்திற்கு மேல் விவசாயம் தான் செய்திட்டு இருந்தோம். கொரோனா அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிச்சு தளர்வு அறிவிச்ச பிறகு தான் சென்னைக்கு வந்து மறுபடியும் கடையை ஆரம்பிச்சோம்.
சமையல் வேலை தான் செய்தேன் என்றாலும், ஒருவர் வீட்டுக்கு சென்று சமைப்பேன். இப்படி சாலையில் நின்று நான் சமைச்சது இல்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சமாகவும், தயக்கமாகவும் இருந்தது. சிலர் கிண்டல் கேலி எல்லாம் கூட செய்திருக்காங்க. அதை எல்லாம் பார்த்தா என் குடும்பத்தை யார் காப்பாற்றுவது. அதனால் நான் ரொம்பவே உறுதியா இருந்தேன். என்ன மழை நேரத்தில் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
எல்லாமே எண்ணெய் சட்டி என்பதால் சின்ன மழை துளி எண்ணெயில் விழுந்தாலும், வெடிக்க ஆரம்பிக்கும். இந்த மழையின் போது கூட கடை போட முடியல. லாபம் நஷ்டம் என்பது என்னைப் போல் சின்ன வியாபாரிகளுக்கு மட்டுமில்ல... பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களுக்கும் ஏற்படும். அதை எல்லாம் தாண்டி எதிர்த்து நிக்கணும். என்னுடைய அப்பாவிற்கு நான் சின்னதா ஒரு ஓட்டல் வச்சு நடத்தணும் அதை பார்க்கணும்ன்னு ரொம்பவே ஆசைப்பட்டார். ஆனா நான் கடையை திறந்த சில மாதங்களிலேயே அவர் இறந்துட்டார். இப்ப என்னால் ஒரு கடையை ஆரம்பிக்க முடியவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அவரின் கனவை கண்டிப்பா நிறைவேற்றுவேன்’’ என்று கூறும் செல்வியின் வாடிக்கையாளர்கள் அவர்களை பக்கோடா குயின் என்று அழைக்கிறார்கள்.
செய்தி: ப்ரியா
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி
|