நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்?



அம்பாளை வழிபட மிக விசேஷ நாட்களாக நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில் அம்மனை வெவ்வேறு அவதாரங்களாக அலங்கரித்து, கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். நவராத்திரி பண்டிகை மைசூருவில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அதே போல தமிழகத்தின் தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகரப்பட்டியில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவனை வழிபடக்கூடியது சிவராத்திரி என்றும், அம்பாளை வழிபடுவதற்கு நவராத்திரி என்றும் நம் இந்து மதத்தில் ஒரு விழாவாக கடைபிடித்து வருகின்றோம்.

நவராத்திரி என்றால் என்ன?

சர்வம் சக்தி மயம் என கூறுவது வழக்கம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவு என்று பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்றும் அர்த்தமுண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக் கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா.

நவராத்திரியின் நோக்கம் என்ன?

அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் தவம் இருந்தார். அந்த காலம் தான் நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் மூவரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா. இதன் மூலம் சொல்லப்படும் தாத்பரிகம் என்னவென்றால், நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்று சேர்த்து, கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காக நம்மை பக்குவப்படுத்தக் கூடிய தவக்காலம் தான் இந்த நவராத்திரி.

நவராத்திரி எப்படி கொண்டாடுவது?

நவராத்திரி தினத்தில் நாம் கொலு வைப்பது வழக்கமாக வைத்துள்ளோம். அதோடு இந்த நவராத்திரி தினங்களில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது விசேஷம். தினமும் ஒரு அம்பிகையின் அவதாரத்தை வழிபடுவது வழக்கமாக உள்ளது. நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் நைவேத்யம் செய்து அம்பாளுக்குப் படைத்து, அதை அருகில் உள்ளவர்களுக்கு கொடுப்பது நன்மை உண்டாக்கும்.

ஆரோக்கியத்தைக் காக்கும் நவராத்திரி விழாபுரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழா மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவானின் மாதமாக இந்த புரட்டாசி மாதம் விளங்குவதாலும், இவர் சைவக் கடவுளாகப் பார்க்கப்படுகின்றார். இந்த புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் கூற காரணம் உண்டு. வெயில் காலம், காற்று காலம், மழைக் காலம் என இருக்கும் நிலையில், இந்த புரட்டாசி மாதத்தில் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால், பூமி இத்தனை நாட்களாக உட்கிரகித்திருந்த வெப்பத்தை வெளியிடும்.

இதனால் நம் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டால் மேலும் உஷ்ணம் அதிகரித்து வியாதிகளை ஏற்படுத்தும். நாம் இந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது, பிரசாதமாக வழங்கப்படும் தானியங்கள் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கொடுத்து, உடலை வலுப்படுத்தும். நவராத்திரி விழாவை ஆன்மிக ரீதியாகப் பார்க்காமல், அறிவியல் ரீதியாகவும் பார்த்து அதன் பாரம்பரியத்தைக் காப்பது நம் கடமை.

சீனு