கிச்சன் டிப்ஸ்
* மிளகாய் பொடியுடன் தயிரை குழைத்து, இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட்டால் புதிய சுவை கிடைக்கும். - எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
* சமைத்த கீரை மிச்சமாகிவிட்டால், உளுந்து மாவை அரைத்து கீரை வடை செய்து சாப்பிடலாம். * ரசப்பொடி கைவசம் இல்லாதபோது, மிளகு, சீரகத்துடன் ஒரு கரண்டி துவரம்பருப்பை சேர்த்து அரைத்துப் போட்டால் ரசம் சுவையாக இருக்கும். - ஆர்.கீதா, சென்னை-41
* சேனைக்கிழங்கை புளிநீரில் வேக வைத்துவிட்டால் சாப்பிடும்போது வாய் நமச்சல் இல்லாமல் இருக்கும். - எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
* கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசிமாவை கரைத்து விடுவதற்கு பதில் பொட்டுக்கடலை மாவை சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப் போகாது, சுவையாகவும் இருக்கும். * பக்கோடா மாவுடன் சிறிது ரவையை கலந்து செய்தால் பக்கோடா ஆறிய பிறகும் மொறு மொறுப்பாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும். - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர்.
* ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி, உப்பு, மிளகாய்ப்பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி கலந்து தாளித்துக்கொட்டிட, சுவையான ஊறுகாய் ரெடி. * கறிவேப்பிலை பொடி, புதினாப்பொடி கொண்டு சாதம் கலக்கும்போது சிறிதளவு எலுமிச்சைச் சாறு பிழிந்தால், புதிய கீரையில் செய்தது போல வாசனையாக இருக்கும். - மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
* தேங்காய் எண்ணெய் கார வாசனை வராது இருக்க வெயிலில் வைத்து கல் உப்பை துணியில் கட்டி போட நன்றாக இருக்கும். - என்.உமாமகேஸ்வரி, நங்கநல்லூர்.
* கோதுமை தோசை சுடும்போது கோதுமை மாவுடன் ஒரு கைப்பிடி ரவை சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வார்த்தால் தோசை கிளறிக் கொள்ளாமல் பட்டு பட்டாக எடுக்க வரும். - ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* கோதுமை மாவுடன் பீட்ரூட், கேரட், பாலக் கீரை, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் சுவையான, வண்ணமயமான சப்பாத்தி தயார். - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
|