டெங்கு - வரும் முன் காப்போம்!



எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சலை பற்றி தான் பேச்சு.  சாதாரண காய்ச்சல் வந்தாலே டெங்குவாக இருக்குமான்னு பயம்.  ‘‘டெங்கு ‘ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த பெண் கொசுவால் பரவுகிறது’’ என்கிறார் சித்தா நிபுணர் டாக்டர் கவுதம் குமார். ‘‘டெங்குவால் பாதிக்கப் பட்ட ஒருவரை கடித்த கொசு, மற்றொருவரைக் கடிக்கும்போது, டெங்கு பரவும். தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் பரவாது.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

* தொடர்ந்து 3-7 நாட்கள் காய்ச்சல் இருக்கும்.
* உடல் சோர்வு, தீவிர தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் சிவப்பு தழும்பு, எலும்பு உடைவது போன்று கடுமையான வலி இருக்கும்.
* டெங்கு கொசு கடித்து 5ல் இருந்து

7 நாட்கள் வரை எந்த அறிகுறிகளும் இருக்காது. அதன் பிறகே தென்படும்.

என்ன செய்யலாம்

* உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்யவும்.
* டெங்கு பாதிப்பை கண்டறிய ஐ.ஜி.எம். எலிசா, பி.சி.ஆர்.பரிசோதனைகள் உள்ளன.
* டெங்கு காய்ச்சல்  உறுதி செய்யப்பட்டால், பதறாமல் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
* உடலில் நீர்ச் சத்து குறையும், நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
* கடும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
* சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஏழு நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும்.  

டெங்குவை தடுக்க செய்ய வேண்டியவை

* டெங்கு பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் முட்டையிடும். குட்டைகளில், தேங்காய் மூடியில் மற்றும் டேங்குகளில் தேங்கும் தண்ணீரில் தான் இந்த  கொசுக்கள் முட்டையிடும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
* வீட்டு ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். கொசு விரட்டி போன்றவற்றை பயன்படுத்தலாம். வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தை உபயோகப்படுத்தினால் கொசு பிரச்னை இருக்காது.
* வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ என்ற மருந்தைத் தெளிக்கலாம்.
* இந்த கொசு பகல் நேரத்தில் தான் கடிக்கும். இரவில் கடிக்காது. எனவே உஷாராக இருங்கள்.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கான தீர்வு  

* நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சவேர், சுக்கு, மிளகு, பற்படாகம், கோரைகிழங்கு, சந்தனம், பேய்ப்புடல் என 9 வகை தொகுப்பே நிலவேம்பு குடிநீர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சலை நீக்கும். காய்ச்சல் வருவதற்கு முன்பு தடுப்பு மருந்தாகவும், காய்ச்சல் இருந்தால் அதை போக்குவதற்கும் பயன்படுத்தலாம்.  
* பப்பாளி இலை சாறு  ரத்த தட்டணுக்களை அதிகரிக்கும் தன்மை உடையது.
* டெங்கு காய்ச்சலில் ரத்தத் தட்டணுக் களின் எண்ணிக்கை குறைவை சரி செய்ய இம்மருந்துகள் நல்ல பயன் தரும். Clevira tab and syrup பப்பாளி இலை சாறு, மலைவேம்பு இலை சாறு மற்றும் நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தினை ஏபெக்ஸ் ஆய்வகத்தில் (Apex Laboratories pvt ltd) பெற்றுக் கொள்ளலாம்.  
* இம்மருந்தில் சிறந்த anti viral செய்கை உள்ளதால் டெங்கு, சிக்குன்குனியா மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும். அருகில் உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம்’’ என்றார் சித்தா நிபுணர் டாக்டர் கவுதம் குமார்.