முத்தாரம் நேர்காணல்
“இனவெறுப்பு ரத்தநாளங்களில் விஷம்போல ஏற்றப்படுகிறது”
நேர்காணல்: ஹர்ஷ் மந்தர், கர்வான்- இ -மொகபத் இயக்கத் தலைவர்
முன்னாள் அரசு அதிகாரியும், சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஷ் மந்தர், வெறுப்பு அரசியல் குற்றங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினரைப் பாதுகாக்க கர்வான் -இ- மொகபத் அமைப்பைத் தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார்.
கர்வான் இ மொகபத்தின் நோக்கமென்ன?
முஸ்லீம் தாய்கள் தங்கள் மகனிடம் ‘சலாம் அலைக்கும்’ என்று பொது இடங்களில் கூறாதே என்று எச்சரிக்கும் அளவுக்கு இன்று முஸ்லீம்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். தலித்துகள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் தனியாக இல்லை. அவர்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம் என்று கூறும் ஒற்றுமையான முயற்சி மற்றும் செயல்பாடுதான் இந்த இயக்கம். அநீதிக்கு எதிரான மக்களின் மௌனம் பற்றி...?
நான் தலித்துமல்ல, முஸ்லீமுமல்ல எனும்போது எதற்கு கவலைப்படவேண்டும் என்ற எண்ணமும், பயமும், கூடுதலாக பிற இனத்தவருக்கு எதிரான இனவெறுப்பும் இதற்கு முக்கியக்காரணம். கத்துவா நிகழ்விற்கான நீதி முயற்சி சிறிது நம்பிக்கை தருகிறது. ஆனால் இந்நிகழ்வை விசாரிக்கும் விஷயத்தில் பொதுமக்களின் மௌனம் கேள்விக்குரிய ஒன்று. சமூகம் நோய்த்தன்மையுள்ளதாக மாறிவிட்டதா?
ஆம். மக்களின் ரத்தநாளங்களில் ஹெராயின்போல சிறுபான்மையினர் மீதான வெறுப்பு செலுத்தப்பட்டு வருகிறது. வெறுப்பைத் தடுத்து அன்பை விதைப்பது பெரும்போராட்டமாக மாறிவருகிறது. மதவெறுப்பு சூழலில் அன்பு என்பது புரட்சிகரமான சிந்தனையாகிவிட்டது. வெறுப்பை பரப்புவதற்கு யார் பொறுப்பு?
2010 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் 86 சதவிகிதம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான். மோடி, ட்ரம்ப் ஆகியோரின் அரசியலே பிரித்தாளுவதுதான். மேலும் அந்த எண்ணத்தை ஏற்று மக்களும் மௌனம் காப்பதுதான் அச்சுறுத்தலாக உள்ளது. ஸ்வயம்சேவக் மற்றும் அதன் துணை அமைப்புகள் இதனை நம் தலைமுறையின் வேர்களுக்கும் பரப்பி வருவதை தடுக்க நாம் ஒன்றிணைந்து போராடியே ஆகவேண்டும். இச்சம்பவங்கள், விளைவு களில் நீதித்துறையின் பங்கென்ன?
கீழ்மட்டங்களில் காவல்துறை, நீதித்துறையின் பணி பரவாயில்லை ரகத்தில் உள்ளது. பசு வன்முறையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேலான குடும்பங்களை சந்தித்து வருகிறோம். பேலுகான் குடும்பத்தினர் வாழ்வே பிணை வாங்குவதில்தான் ஓடுகிறது.
அவர்களை பசு கடத்தல் காரர்கள் எனமாவட்ட எஸ்பி முன்முடிவோடு பேசுகிறார். பசு கடத்தல் என்ற பெயரில் கொல்லப்பட்டவர்களை என்கவுன்டர் வழக்கு களைப் போலவே காவல்துறை கையாளுகிறது. எதிர்த்துப் போராடுவது அவசியமாவது ஏன்?
‘‘எலியைத் தாக்கும் பூனையை எலி மன்னிப்பது என்பது அதற்கான தீர்வல்ல; வேறுவழியில்லை’’ என்பார் காந்தி. தலித்துகள் தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுகிறார்கள்.
ஆனால் போலீசில் புகார் கொடுக்கவே முஸ்லீம்கள் தயங்குகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் வெறுப்பு அரசியலுக்கு சாட்சியாக மௌனம் சாதிக்கும் நிலையில் போராடாவிட்டால் எப்படி? நம் கல்விமுறை கேள்விக்கு பதில் அளிக்க தயார்படுத்துகிறதே தவிர சக மனிதர்களின் துன்பங்களுக்கு கவலைப்பட்டு உதவி புரியும்படி மாற்றவில்லை. வெறுப்பின் அலை முன் எப்போதையும் விட அதிகரித்திருக்கிறதா?
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வான ஒரு வாரத்திற்குள்ளாகவே முஸ்லீம் மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஓரம்கட்டப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக நடிகர்கள், தொழிலாளர்கள், வழக்குரைஞர்கள் என அனைவரும் திரண்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து பேசிய நிகழ்வு நடைபெற்றது. ஆனால் அது இந்தியாவில் நடைபெறவில்லையே ஏன்? என்பதுதான் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நன்றி: பிரக்யாசிங், அவுட்லுக்.
தமிழில்: ச.அன்பரசு
|