அளவு குறித்த அனாவசிய குழப்பம் வேண்டாம்!



‘‘பருவ வயதுப் பெண்களின் தூக்கம் கெடுக்கும் விஷயங்களில் முக்கியமானது அவர்களது மார்பக வளர்ச்சி. அளவில் சிறுத்தாலும் பிரச்னை... அதிகரித்தாலும் பிரச்னை. ஆரோக்கியமான மார்பகம் என்பது அளவால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதை அறியாதவர்கள் அவர்கள்’’ என்கிறார் மருத்துவர் நிவேதிதா. அளவின் பின்னணியில் ஒளிந்திருக்கும் காரணங்களையும் விளக்குகிறார் அவர்.

‘‘வயதுக்கு வந்த சில நாட்களில், பெண்களின் மார்பக வளர்ச்சியானது முழுமையடைந்து விடும். அரிதாக இருபதின் தொடக்கத்தில் இருக்கும் சில பெண்களுக்கு மார்பக வளர்ச்சி என்பது இன்னும் சற்று மேம்பட்டு, அந்த வயதுக்கே உரித்தான வளைவு, நெளிவுகளுடன் மாறும்.

மார்பக வளர்ச்சியை வைத்தே ஒரு மருத்துவர் பூப்பெய்தும் பருவத்தை கண்டுபிடித்து விடுவார்.பெண்களின் மார்பக அளவு என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். பல பெண்களுக்கு பூப்பெய்திய 2 - 3 ஆண்டுகளுக்குப் பிறகே மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு 20-25 வயதில்கூட மார்பக வளர்ச்சி இருப்பதாகச் சொல்வதுண்டு. சீக்கிரமே பூப்பெய்திய பெண்களுக்கு, பதின்ம வயதில் மார்பகங்களின் வளர்ச்சி முழுமையடைவதை உணரலாம்.

மார்பக அளவுகளில் காணப்படுகிற வித்தியாசத்துக்கு முக்கிய காரணம், அந்தப் பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களே. கர்ப்ப காலத்தில் மார்பகங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.  பால் சுரப்பிகள் மற்றும் சுரப்புக் குழாய்களின் வளர்ச்சியே இதற்குக் காரணம். பருவ வயதில் உள்ள பெண்களின் மார்பகங்கள் பெரும்பாலும் கொழுப்பு நிறைந்தது. கருவுற்றிருக்கும் போதோ, அந்த கொழுப்பு மறைந்து பால் சுரப்புக்கு இடம் அளிக்கும்... காம்புப் பகுதிகள் அடர் நிறத்துக்கு மாறும்.

குழந்தைக்கு அதன் உணவு உள்ள இடம் அதுதான் என்பதை சுட்டிக் காட்டுவதற்கான ஓர் அறிகுறி அது. கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் மார்பகங்கள் பால் சுரக்க ஏதுவாக முழு வளர்ச்சியுடன் தயாராக இருக்கும்.சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் செயல்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ரொம்பவும் ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்கள், எடை கூடினால் அதன் விளைவாக மார்பக அளவிலும் மாற்றத்தை உணர்வார்கள்.

சிறிய மார்பகங்கள் எப்படிக் கவலை தருகின்றனவோ அதுபோல பெருத்த மார்பகங்கள் குறித்தும் கவலைப்படுகிற பெண்கள் உண்டு. பெரிய மார்பகங்கள் சீக்கிரமே தொய்வடையும் என்கிற பயமும் சேர்ந்து கொள்ளும். அதுவும் அனாவசியமானது. மார்பகங்களின் தளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது.மார்பகங்களின் அளவு என்பது ஜீன்களையும் உடல்வாகையும் பொறுத்தது.

 ஏற்கனவே சொன்னது போல, ஒல்லியான உடல்வாகுள்ளவர்களுக்கு, மார்பகங்களில் கொழுப்புத் திசுக்களின் அளவு குறைவாக இருப்பதால், அவற்றின் அளவும் சிறியதாக இருக்கும். பருமனானவர்களுக்கு கொழுப்புத் திசுக்களின் காரணமாகவே மார்பகங்களும் பெரிதாகக் காணப்படுகின்றன.

எடையைக் குறைப்பவர்களுக்கு, உடலின் பல பகுதிகளிலும் உள்ள கொழுப்பு கரைவதைப் போல, மார்பகக் கொழுப்பும் குறையும். விளையாட்டு வீராங்கனைகளின் உடலில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதாலேயே அவர்களுக்கு மார்பகங்கள் சிறுத்துக் காணப்படுகின்றன. மார்பகங்களைப் பெரிதாக்கவென எந்த உடற்பயிற்சியும் கிடையாது. ஏனென்றால், அந்தப் பகுதிகளில் தசைகள் கிடையாது.

தூங்குகிற நிலையோ, உள்ளாடை அணிவதாலோ, அணியாமலிருப்பதாலோ, பால், வேர்க்கடலை போன்றவற்றை உண்பதாலோ மார்பகங்களின் அளவை அதிகரிக்கச் செய்ய முடியாது. ஆனால், சத்தான உணவு என்பது உடல் ஆரோக்கியத்தைப் போலவே மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கும் அவசியம்.

மெனோபாஸ் காலத்திலும் மார்பகங்களின் அளவுகளில் மாற்றம் உண்டாகும். பால்சுரப்பு இயக்கமும் பால் சுரப்பிகளும் சுருங்கத் தொடங்கும். அதன் விளைவாக மார்பகங்களின் அளவும் சிறியதாக மாறும். சில பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு மார்பகங்கள் பெருத்துப் போவதும் உண்டு. பால் சுரப்பிகளுக்குப் பதிலாக நிறைய கொழுப்புத் திசுக்கள் இருந்தால், மார்பகங்கள் மென்மையாக இருக்கும்.

 மேலும் இணைப்புத் திசுக்கள் பலவீனமடைவதால், மார்பகங்கள் உறுதித் தன்மையை இழந்து, தளர்ந்து போகும்...’’மார்பகங்களைப் பெரிதாக்க எந்த உடற்பயிற்சியும் கிடையாது... எந்த மருந்தும் கிடையாது!

- வி.லஷ்மி