சில மூலிகைகளும் அதன் மருத்துவ குணங்களும்!
ஆவாரை
ஆவாரம் இலை, பூ,, விதை, பட்டை, வேர் இவைகளை தனித்தனியாக ஒன்றிரண்டாக அரைத்து சேர்த்து கசாயம் போட்டு குடித்து வர நீரிழிவு நோய் குறையும். ஆறாத புண்களுக்கும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் கொடுக்க நல்ல பலன் கிடைக்கின்றது. இலை மற்றும் பூவை பச்சையாக அரைத்து தேய்த்து குளிக்க வெப்பம் தணிகின்றது. சரும நோய்கள் அணுகாது. அம்மை நோய் உள்ளவர்களுக்கு ஆவாரம் இலையைக் கொண்டு வருட நமைச்சல் குறையும். பட்டையை கசாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் குணமாகின்றது. பற்கள் பலமாகின்றன. பட்டையில் அதிகளவு டானின் என்ற சத்துள்ளது. கண்டங்கத்திரி
முழுச் செடியை பச்சையாகவோ அல்லது காய வைத்தோ பொடித்து தேனுடன் ஒரு டம்ளர் தினசரி குடித்து வர இருமல், கோழை, ஆஸ்துமா போன்ற நோய்கள் படிப்படியாக கட்டுப்படும். பாத எரிச்சல் தணியும், கொப்புளங்கள் மறைகின்றன. சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் தீரும். உடல் வீக்கம் குறைகிறது. விதைப் பொடியைக் கொண்டு பல் தேய்க்க கிருமிகள் குறைகின்றது. அதனால் பல்வலி, சொத்தைப் பல் போக்கும். இலையை மிளகுடன் சேர்த்து அடித்த கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஊமத்தை
இதன் இலையை அரைத்துப்பிழிந்து சாறெடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து காய்ச்சி தைலம் செய்து ஆறாத புண், புரைகள், படுக்கைப் புண்கள், அழுகிய ரணங்கள் இவைகளுக்குப் போட விரைவில் குணமாகின்றது. இரண்டு சொட்டு காதில் விட சீழ் வடிதல் நிற்கின்றது. இலையை காய வைத்து அரைத்த பொடி மற்றும் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகிறது. வேப்பம் எண்ணெய்யில் இலை சாற்றை காய்ச்சி வடித்த தைலம் மூட்டு வலிகளுக்கு நல்ல மருந்து.
- விமலா சடையப்பன்
|