மனச்சோர்வைக் குறைத்து டிமென்ஷியாவை வெல்வோம்!
முதியோர் நலம் ஒரு பார்வை!
இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனுடன், மூத்தோர்களின் மனநலம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பிரச்னையாக மாறியுள்ளது. பெரும்பாலானோர் மனச்சோர்வை (Depression) ஓர் உணர்ச்சி சம்பந்தமான பிரச்னை என்றே நினைப்பார்கள். ஆனால், மருத்துவ ஆய்வுகள் காட்டுவதாவது, இது மனதளர்ச்சி நோய்க்கான (Dementia) ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம் என்பதே.
 இந்தியாவில் மனதளர்ச்சி நோய் நாளுக்கு நாள் உயர்கிறது
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) மற்றும் தேசிய முதியோர் ஆராய்ச்சி நிறுவனம் (NIA) தெரிவித்தபடி, நாட்டில் 60 வயதுக்கு மேல் உள்ள சுமார் 8.8 மில்லியன் பேர் மனதளர்ச்சி நோயுடன் வாழ்கிறார்கள்.
இது மூத்தோர்களில் சுமார் 7.4% ஆகும். ஆயுள் நீளம் அதிகரிப்பதும், வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் (பிரஷர், சர்க்கரை நோய் போன்றவை) கூடுவதும் இதற்குக் காரணமாக உள்ளன. 2050க்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதன் பின் உள்ள உண்மை இன்னும் ஆழமானது. மனதளர்ச்சி நோய் குடும்பங்களுக்கு உணர்ச்சி, உடல், பொருளாதார ரீதியாக பெரிய சுமையாக மாறுகிறது. இதிலே முக்கியமானது, மனச்சோர்வு மற்றும் மனதளர்ச்சி நோய் இடையேயான நெருங்கிய தொடர்பு.
ஆய்வுகள் கூறுவது, முதியோரில் நீண்டகால மனச்சோர்வு இருப்பவர்கள், பிறரைவிட இரு மடங்கு அதிகமாக மனதளர்ச்சி நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு கொண்டவர்கள். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு பெரிய ஆய்வில், மனச்சோர்வுள்ள முதியவர்கள் 2.4 மடங்கு அதிக அபாயத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மனச்சோர்வும் நினைவாற்றலும் இணையும் வழிகள்
இந்த இணைப்பு பல உயிரியல் மற்றும் நடத்தை காரணங்களால் ஏற்படுகிறது:
*நீண்டகால மன அழுத்தம் மூளையின் நினைவுத்திறனை பாதிக்கும்
*ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாடு மூளைச் செயல்பாட்டைத் தளரச் செய்யும்
*தனிமை, உடல்செயற்பாடுகள் குறைதல் போன்றவை மூளையின் செயல்திறனை வேகமாகக் குறைக்கும்.
இதனால், மனச்சோர்வு வெறும் மனநிலையையே பாதிப்பதல்ல, மூளையின் சக்தியையும் மெதுவாகக் குறைக்கிறது.
முன்கூட்டியே கண்டறிதல் மிகவும் அவசியம்
பலரும் “மனச்சோர்வு வயதான பின்பே வரும் இயல்பு விஷயம்” என நினைப்பார்கள். ஆனால் அது தவறு. இது ஒரு மருத்துவ பிரச்னை, கவனிக்கப்பட வேண்டியது. இதைத் தாமதிக்காமல் சிகிச்சை பெற்றால், மூளையையும் பாதுகாக்க முடியும். இது உங்கள் நினைவாற்றலுக்கான காப்பீட்டைப் போலதான்.
முதியோருக்கான மனச்சோர்வு மற்றும் நினைவுத்திறன் பரிசோதனைகள் (Geriatric Depression Scale) இப்போது சிறந்த நடைமுறையாகப் பார்க்கப்படுகின்றன. இது குடும்பத்தினர் தவறவிடும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.
மனமும் நினைவுமாக பாதுகாப்பது எப்படி?
மூத்தோர்களில் மனச்சோர்வை நிர்வகிக்க பல தளங்களில் கவனம் தேவை:
*உளவியல் ஆதரவு: கவுன்சிலிங், CBT (Cognitive Behaviour Therapy), குடும்ப ஆலோசனைகள் ஆகியவை மன வலிமையை மேம்படுத்தும்.
*மருந்து: மருத்துவர் கண்காணிப்பில் மனச்சோர்வு மருந்துகள் உதவியாக இருக்கும்.
*உடற்பயிற்சி: தினமும் நடைபயிற்சி, யோகா போன்றவை மனநிலையையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும்.
*சத்து உணவு & நல்ல உறக்கம்: ஒமேகா-3, ஆன்டி-ஆக்ஸிடென்ட், பி வைட்டமின்கள் நிறைந்த உணவு மூளைக்குத் துணை.
*சமூக உறவு: குழு செயல்பாடுகள், பொழுதுபோக்கு, நண்பர்கள் உறவு போன்றவை மனச்சோர்வையும் மனதளர்ச்சியையும் தடுக்கும்.
இந்தியாவில் இன்னும் மனநலம் தொடர்பான நம்பிக்கை, புரிதல், சிகிச்சை வளர்ந்துவரும் நிலையில் உள்ளது. பல குடும்பங்கள் இதனை “பழக்கமான வயதான நிலை” என்று தவறாக நினைத்து அலட்சியம் செய்கின்றனர்.
“மனச்சோர்வை சீக்கிரம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது வெறும் மன அமைதிக்காக மட்டுமல்ல,” என்கிறார் டாக்டர் நிவேதா.“இது மனதளர்ச்சி நோயைத் தாமதிக்கவும், சில நேரங்களில் தவிர்க்கவும் உதவுகிறது. இதன் மூலம் நம் மூத்தோர்கள் தன்னம்பிக்கையுடன், தெளிவுடன் வாழும் வாழ்க்கையைப் பெறுகிறார்கள்’ என்கிறார் டாக்டர்.
மனநல மருத்துவர் நிவேதா
|