பார்வை கோளாறுகளை சீராக்கும் குங்குமப்பூ!
குங்குமப்பூவை அறியாதார் யாரும் இருக்கமுடியாது எனினும் அதனுடைய மருத்துவக் குணத்தை பலரும் அறிந்திருப்பதில்லை. பொதுவாக கர்ப்பமடைந்த பெண்கள், குங்குமப்பூவை எடுத்துக் கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று நம்புகின்றனர்.  ஆனால் உண்மை என்னவென்றால், குங்குமப் பூ கர்ப்பச் சிதைவை தடுக்கும் தன்மை கொண்டது. எனவேதான், நமது முன்னோர்கள் குங்குமப்பூவின் உயர்ந்த மருத்துவக் குணத்தையறிந்தே குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்கச் சொல்லி வைத்தார்கள். சிலர் இனிப்பு பண்டங்களில் கலந்து சாப்பிடச் சொன்னார்கள்.
இன்றைய காலகட்டத்திலும் குங்குமப்பூவின் மருத்துவ குணம் குறித்து பல ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் குங்குமப்பூவை ஆய்வு செய்துள்ளனர். அதில் இருநாட்டு ஆய்வும் ஒரே மாதிரியான முடிவையே கொண்டுள்ளது.
அவர்களுடைய ஆய்வின் கூற்றுப்படி குங்குமப்பூவை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இழந்த பார்வை மீட்டுத் தருகிறது. வயது முதிர்ச்சியினால் ஏற்படும் மங்கலான பார்வையும் குணமாகும்.
மேலும், க்ளோகோமா எனப்படும் மிகவும் ஆபத்தான கண் நோயைக் குணப்படுத்துகிறது. அதுபோன்று ரெட்டினா என்னும் விழித்திரை பாதிப்பைக் குணப்படுத்துகிறது. குங்குமப்பூ கண்ணிலுள்ள செல்களுக்குப் புத்துயிரூட்டுகிறது. அதனால் பார்வை மீண்டும் கிடைக்கின்றது என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களின் ஆய்வுப்படி, குங்குமப்பூவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
*வயிற்று வலியைப் போக்கும். இருமலைப் போக்கும். *தசைப்பிடிப்பைத் தடுக்கக் கூடியது. *மாதவிடாய் நோயை சீராக்கும். கர்ப்பச் சிதைவை தடுக்கிறது. *சிறுநீரைப் பெருக்கும். *மலமிளக்கியாக செயல்படுகிறது. *தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. *செரிமான கோளாறுகளை சரி செய்யும். *மன அழுத்தத்தை போக்கும். *கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைக் குணப்படுத்துகின்றது.
குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்
ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூவை கலந்து குடித்து வர உடல் பலம் பெறும்.பால் பிடிக்காதவர்கள், குங்குமப்பூவை தண்ணீரில் 2-3 மணி நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரை அருந்தி வரலாம். அதேசமயம், குங்குமப்பூவை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, அதிக வெப்பம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, குங்குமப்பூவை அளவாக உட்கொள்வதே நல்லது.
- ரிஷி
|