உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்



“AB” ரத்த வகையானது இயற்கையில் கடவுள் அளித்த கொடையாகும். “A” ரத்த வகையானது “A” மற்றும் “B” ரத்த வகையைவிட 10 அல்லது 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. “A” மற்றும் “B” யைப்போன்று தனித்து தோன்றியதல்லாமல், கலப்பு ரத்தமாகத் தோன்றியதாகும். வேறு எந்த ரத்தவகையாக இருந்தாலும் எளிதாக உடலில் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அரிய குணத்தைப் பெற்றுள்ளது. ரத்தம் மட்டுமல்லாமல், அதன் பிளாஸ்மாவும் ரத்தம் உறைதல் நோய், தீப்புண் மற்றும் மின்சார விபத்துக்களால் ஏற்படும் தீக்காயங்களுக்கு உடலில் செலுத்தவும் உதவுகிறது.

“AB” ரத்த வகையுடைய ஒருவர் சராசரியாக 50 கிலோ உடல் எடையும், குறைந்த பட்சம் 17 வயதும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால், 28 நாட்களுக்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். ஸ்டேன்ஸ்போர்டு மருத்துவப் பள்ளி (Stansford School of Medicine) அளித்துள்ள புள்ளிவிவரப்படி, “AB” ரத்த வகையில், “AB+” வகை பிரிவினர் 3.4 சதவிகிதமும், “­AB-” வகை பிரிவினர் 0.6 சதவிகிதமும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதிலிருந்து “AB-” வகை ரத்தம் அரிதாக இருப்பதும் தெரியவருகிறது. இத்தகைய தனிச்சிறப்பு மிக்க அரிய வகை ரத்தத்தைப் பெற்றிருப்பவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது மட்டுமல்லாமல் தேவைப்படுவோருக்கும் தானமாக கொடுப்பதால் பலரின் உயிரைக்கூட காக்கலாம்.

“AB” ரத்த வகையினரின் செரிமானத் தன்மை

மாமிச உணவை செரிப்பதற்கு இரைப்பையில் போதுமான அளவுஹைட்ரோகுளோரிக் அமிலம் தேவைப்படுகிறது. ஆனால், “AB” ரத்த வகையை உடையவர்களின் இரைப்பை குறைந்த அளவு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையே சுரக்கிறது. இதற்குக் காரணம், ரத்த வகை “A” மனிதர்களுக்கு குறைந்த அளவு அமிலம் சுரப்பதும், “B” வகை மனிதர்களுக்கு ஓரளவிற்கு அசைவ உணவுகளை செரிப்பதற்கேற்ற அமிலம் சுரப்பதும், “AB”ரத்தவகையானது பெரும்பாலும் “A” வகை குணாதிசயத்தையே சார்ந்து இருப்பதுமேயாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாதியளவு “A” ரத்த வகை தன்மையையும், பாதியளவு “B”வகை தன்மையையும் பெற்றிருப்பதால், மாமிச உணவுகள் மெதுவாக செரிக்கப்பட்டு கொழுப்பாக சேமித்து வைக்கப்படுகிறது. செரிமானத்தில் கோளாறு இல்லாமல் இருப்பதற்கு, இவ்வகை ரத்தம் உடையவர்கள், இரைப்வையின் அமிலத் தன்மையை (pH­1.5 to 3.5) அதிகரிப்பதற்கு L­histidine என்னும் அமினோ அமிலம் நிறைந்த கடல் உணவுகள், அரிசி, முட்டை, உருளைக்கிழங்கு, பாதாம் கொட்டை, ஆளி விதை, சூரியகாந்தி விதை, பால் பொருட்கள் போன்றவற்றையும் கசப்பான உணவுப்பொருட்களான பாகற்காய், சுண்டைக்காய், அத்திக்காய் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

“AB”ரத்தமானது, “A” மற்றும் “B” வகை ஆன்ட்டிஜனைக் கொண்டிருப்பதால், லெக்டின் புரதம் அதிகமுள்ள உணவுகள் இந்த ரத்த வகை மனிதர்களின் செல்கள் மற்றும் ஒவ்வாத வினைகளை ஏற்படுத்துகின்றன. இதனால், அதிக அளவு கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகமான வெற்று கலோரிகள் நிறைந்த குளிர்பானங்கள், வேதிப்பொருட்கள் மற்றும் செயற்றை நிறமிகள் சேர்த்த உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். காபியில் உள்ள கபின் (Caffeine) என்ற பொருளும், ஆல்கஹாலும் அட்ரீனலின் சுரப்பை தூண்டவல்லவை என்பதால், இவற்றை அன்றாடம் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

 சேர்க்க வேண்டிய உணவுகள்

பசும்பாலில் தோய்க்கப்பட்ட தயிர்பால் சார்ந்த பொருட்கள் “AB” ரத்த வகையை உடையவர்களுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதால் இவற்றை அவரவர் வயதிற்கும், உடல் எடைக்கும் வரையறுக்கப்பட்ட அளவில் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், பால் சற்று அமிலத்தன்மை (pH­6.5 to 6.7) கொண்டதால், அதைச் சமன்படுத்துவதற்கு, காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூட்டில் உள்ள வெந்நீர் அருந்தலாம். மேலும், முழுமையான மூன்று வேளை உணவு என்பதை மாற்றி, சிறு சிறு உணவுகளாக 5 அல்லது 6 வேளைகள் உண்ணலாம். இதனால், சிறிய அளவு உணவானது இரைப்பையில் இருப்பதால், அமிலத்தன்மை சமன்செய்யப்படுகிறது.

நார்ச்சத்து அதிகம் உள்ள கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒற்றை குளுக்கோஸ் அல்லது எளிய சர்க்கரை எனப்படும் ப்ரக்டோஸ் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த உணவுப் பொருட்களான தானியங்கள் மற்றும் பழங்கள் இவர்களுக்கு நல்லதாகும். பழங்களில் திராட்சை, அன்னாசி, எலுமிச்சை, அத்தி, ஆகியவை சரியான அளவில் இரைப்பை அமிலத்தை சுரக்கச்செய்பவை. அதே சமயம், ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் சில சமயங்களில் செரிமானத்திற்கு இடையூறு செய்யும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நலம் தரும்.

கடல் உணவுகளில் நண்டு, இறால், அயிரை மீன், கிழங்கா மீன், சங்கரா மீன் போன்றவை எளிமையான செரிமானத்திற்கு உதவுவதுடன் இவர்களுக்குத் தேவையான நுண்சத்துக்களையும் அளிக்கிறது என்று டாக்டர் யு.து. ஆடமோ கூறுகிறார்.

“AB” ரத்தவகை உடையவர்களுக்கு கேட்கோலமைன் என்ற அட்ரீனலில் அதிகமாகச் சுரந்து, இவர்கள் சற்று அதிகமான மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை தினமும் செய்வது நன்மையளிக்கும்.