சி.டி. ஸ்கேன்



உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் எக்ஸ்ரேவின் அடுத்த அவதாரம்தான் சி.டி. ஸ்கேன். எக்ஸ்ரே ஓர் ஒற்றைப் பரிமாண பரிசோதனை முறை. இதனால், ஒரு நோயாளியைப் பற்றிய தெளிவான தகவல்களுக்கு இரண்டு கோணங்களில், இரண்டு முறை பரிசோதிக்க வேண்டியிருக்கும்.

இதில் கதிர்வீச்சின் அளவும் அதிகம் என்பதால் பரிசோதனை செய்துகொள்பவருக்கு ரிஸ்க்கும் அதிகம். இந்தப் பிரச்னையைக் கவனத்தில் கொண்டு, ஒருமுறை பரிசோதிக்கும்போதே இரண்டு பரிமாணத்தில்(2டி முறை) கண்டு பிடிக்கும் வகையில் சி.டி. ஸ்கேன் வடிவமைக்கப்பட்டது.

Computerized Tomography Scan   என்ற பெயரில் இருக்கும் டோமோ என்ற கிரேக்க வார்த்தைக்கு Slice   என்றே அர்த்தம். அதாவது, ஒரு பிரெட் துண்டின் ஸ்லைஸை இரண்டு பக்கமும் பார்க்க முடிவதைப்போல சி.டி. ஸ்கேன் கருவியின் உதவியால் இரண்டு பக்கத்தின் நிலவரத்தையும் தெரிந்துகொள்ள முடியும். எக்ஸ்ரேவைவிட இன்னும் தெளிவாக, விரைவாக முடிவுகளைப் பெற முடியும் என்பதும் சி.டி. ஸ்கேனின் இன்னொரு சிறப்பு.

இந்த சி.டி. ஸ்கேன், இங்கிலாந்து இன்ஜினி யரான காட்ஃப்ரே ஹான்ஸ்ஃபீல்ட் மற்றும் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் அலன் கார்மாக் ஆகிய இருவரின் கூட்டு முயற்சி. சி.டி. ஸ்கேன் கருவிக்குள் இருக்கும் டிடெக்டர், உடலின் உள்பகுதிகளை படம்பிடித்து கம்ப்யூட்டருக்கு அனுப்புவதன் மூலம் முடிவுகளைத் திரையில் கண்கூடாகப் பார்க்கும் வகையில் இருவரும் உருவாக்கினார்கள்.

1972ம் ஆண்டே சி.டி. ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும் 1974ம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அப்போது தலைப்பகுதியை மட்டுமே பரிசோதிக்கும் வகையில் இருந்த சி.டி. ஸ்கேன், 1976ம் ஆண்டு மொத்த உடலையும் பரிசோதிக்கும் முறையில் வளர்ச்சியடைந்தது.

இன்று மூளையில் ஏற்படும் காயம், புற்றுநோய், எலும்புகளின் நிலைமை, நுரையீரல் மற்றும் நுரையீரலுக்கு இடைப்பட்ட பகுதிகளைக் கண்டறிய சி.டி. ஸ்கேன் முறை பெரிதும் உதவுகிறது. கருவில் இருக்கும் குழந்தையின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காகவும் இந்த முறையைக் கையாள்கிறார்கள். மனித சமூகத்துக்கு உதவும் அரும் கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படும் நோபல் பரிசை இந்த சி.டி. ஸ்கேனும் இரட்டைப் பரிசாகத் தட்டிச் சென்றது.

இத்தனை பெருமை கொண்ட சி.டி. ஸ்கேன் ஒரு பெரும் பிரச்னையையும் தனக்குள் கொண்டிருக்கிறது. எக்ஸ் கதிர்களை அடிப்படையாகக் கொண்டே சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செயல்படுவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயங்கள் இதில் இருக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். அதனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், அவசியம் ஏற்பட்டால் தவிர, சி.டி. ஸ்கேன் பரிசோதனையை செய்துகொள்ளக் கூடாது!

- ஜி.ஸ்ரீவித்யா