சருமம் சிவந்தால்....



Rasacea Awareness

அதிக உணர்திறன் மற்றும் எளிதில் புண் ஏற்படக்கூடிய சருமத்தைக் கொண்டுள்ள நபர்களுக்கு ரோசாசியா(Rosacea) என்கிற சரும நோய் உண்டாகிறது. உலகளவில் பெரியவர்களில் (Adults) 5 % பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. சருமம் சிவப்பு நிறமாதல், அத்துடன் பரு போன்ற புடைப்புகள் அல்லது சருமத்தில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகளோடு இந்த நோய் வெளிப்படுகிறது.

பொதுவாக முகத்தில் வெளிப்படுகிற இந்த நோய் உடலின் எந்தப் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நோய் கடுமையாகும் சில நேரங்களில் கண் பிரச்னைகளுக்கும் வழி வகுக்கும். இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. பெரும்பாலானவர்களுக்கு நீண்டகால சிகிச்சை கொடுத்து இதை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

சில நேரங்களில் ஒவ்வாமை அல்லது முகப்பரு போன்ற பிற நிலைமைகளுடன் கலந்து இந்த நோய் வெளிப்படுகிறது. ஆனால், இதில் பல வகைகள் உள்ளது. இதை சரியாக கண்டறிவது சற்று கடினமாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் இதன் ஒரு வகையை மட்டுமோ அல்லது நான்கு வகைகளில் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்துவதாகவோ இருக்கலாம் என்கிறார் தோல் மருத்துவர் Susan Bard.

ரோசாசியா ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை வல்லுநர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ஆனால் சில குடும்பங்களில் இந்த நோய் இருப்பதாக அறியப்படுகிறது. இதற்கான சிகிச்சை, அதைத் தூண்டும் காரணிகளை தவிர்ப்பதை மையமாகக் கொண்டுள்ளது. எனவே சருமத்தில் சிவப்பு நிறத்தில் தோன்றி சருமத்தை மோசமாக்கும் இந்த நோயைத் தூண்டும் காரணிகளை அறிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நோய் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய பின்வரும் காரணிகளையும் அதை எப்படி தவிர்ப்பது என்பதையும் அறிந்து கொள்வோம்.

சூரிய ஒளிரோசாசியா நோய் உடையவர்களின் சிவப்புநிற தோலின் கீழ் உள்ள ரத்த நாளங்கள் வெளியே தெரியும்படி இருக்கும். இதற்கு புறஊதாக் கதிர்களின் தாக்கமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இதன் வெப்பம் நோயின் தன்மையை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, வெயிலில் வெளியே செல்பவர்கள் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் விதமான ஆடைகள், தொப்பி அணிவதோடு புற ஊதாக்கதிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சூரிய ஒளி பாதுகாப்புப் பொருட்களை குறைந்தது 30 நாட்களாவது தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். ரசாயன சன் ஸ்கிரீன் மருந்துகள் இந்த நோயாளிகளின் தோலில் எரிச்சலை உண்டாக்கும் என்பதால் அவற்றை தவிர்த்துவிட்டு, இயற்கை தாதுக்கள் அடங்கிய பொருட்களைப் பயன்படுத்துவதையே நான் பரிந்துரைக்கிறேன் என்கிறார் சூசன்.

உணவுமுறை

ரோசாசியா நோய் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய நீண்ட உணவுப் பட்டியலில் மசாலா உணவுகள், சூடான பானங்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவை உள்ளன. காஃபி நீங்கள் காலையில் அருந்தும் சூடான பான வகைகளில் ஒன்றாக உள்ளது. காஃபி குடிப்பவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவது குறைவு என்று 2018 ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அது ரத்தக் குழாய் விரிவடைதலைக் குறைப்பதாகவும், நோய் எதிர்ப்பு தடுப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது இந்த நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் காஃபியிலிருந்து வரும் வெப்பம் இதன் அறிகுறிகளைத் தூண்டக்கூடும். எனவே இதைப் போன்று நோயின் அறிகுறிகளைத் தூண்டும் உணவுகளையும் தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார் சூசன்.

மன அழுத்தம்

உணர்ச்சிகளால் ஏற்படும் மன அழுத்தமானது ரோசாசியா நோய் திடீரென அதிகரிப்பதைத் தூண்டும் முக்கியமான ஒரு காரணி என்று National Rosacea Society (NRS) என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது. மன அழுத்தத்தை முழுவதுமாக அகற்றுவது சாத்தியமில்லை என்றாலும், நாம் அதோடு தொடர்ந்து வாழ வேண்டியதில்லை.

தியானம், யோகா மற்றும் அமைதி உண்டாக்கும் பிற நிதானமான செயல்களில் ஈடுபடுவது போன்றவை நமது மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். போதுமான தூக்கம் கிடைத்தல், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வலுவான ஆதரவு கிடைத்தல் போன்றவை நாம் குறைவான மன அழுத்தத்தை உணர உதவியாக இருக்கும்.

உடற்பயிற்சி

நிச்சயமாக நாம் ஆரோக்கியமாக இருப்பதை ஒருங்கிணைக்கும் ஒரு காரணியாக உடற்பயிற்சி இருக்கிறது. ஆனால், ரோசாசியா நோய் இருப்பவர்களுக்கு அதை அதிகரிக்கச் செய்யும் ஒரு காரணியாக இருக்கிறது உடற்பயிற்சி. Jogging என்கிற மெதுவான ஓட்டம், வேகமான ஓட்டப் பயிற்சிகள் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக யோகா, நீச்சல் போன்ற குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம் என்கிறார் சூசன். இந்த நோயுடையவர்கள் குளிர்ந்த அறையில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் அதிக வெப்பம் அடையாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் குளிர்ந்த நீரை தெளிக்கும் பாட்டிலை உடன் எடுத்துச் செல்லலாம்.

சருமம் மற்றும் முடி பராமரிப்புப் பொருட்கள்

சருமம் மற்றும் முடி தயாரிப்புகளில் உள்ள சில வேதிப் பொருட்கள் அதிக உணர்திறனுடைய நபர்களின் சருமத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. அவை ரோசாசியா நோய் அறிகுறிகளை மோசமாக்கும் தன்மை உடையது. எனவே ஆல்கஹால், சோடியம் லாரில் சல்பேட், மென்தால், லாக்டிக் அமிலம் மற்றும் வாசனையுடன் கூடிய இதுபோன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று American Academy of Dermatology அமைப்பு தெரிவித்துள்ளது.

Witch hazal, மிளகுக்கீரை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற பொருட்கள் ரோசாசியா நோய் அறிகுறிகளைத் தூண்டக்கூடும் என்று NRS அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோய் பாதிப்புக்கு உள்ளான சருமம் மிகுந்த உணர்திறனுடையது என்பதால் மென்மையான சரும தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும். நீங்கள் விரும்பும் புதிய சருமம் மற்றும் முடி சார்ந்த தயாரிப்புகளில் வாசனை இல்லாத மற்றும் hypoallergenic தயாரிப்புகளை இணைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் சூசன்.

சில மருந்துகள்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்துகிற Vasodilator மருந்துகள் ரத்த நாளங்களைத் திறக்கின்றன. இது ரோசாசியாவை தூண்டி அதிகரிக்கச் செய்கிறது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் இந்த நோயை அதிகரிக்குமா என்பதை அறிந்து கொள்வதோடு, அதற்கு பொருத்தமான மாற்று வழிகள் உள்ளதா என்பதை உங்கள் தோல் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். சருமத்தில் மேற்பூச்சாக பயன்படுத்தும் ஊக்க மருந்துகள் நோய் அறிகுறிகளை அதிகரிக்கக்கூடும் என்கிறது NRS அமைப்பு.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த நோயின் தன்மைகள் லேசானவையாக இருக்கலாம். இருந்தபோதும் உங்கள் நோயின் அறிகுறிகள் மற்றும் அதைத் தூண்டும் காரணிகள் பற்றி உங்கள் மருத்துவரை அணுகி அறிந்து கொள்வது ரோசாசியாவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்கிறார் மருத்துவர் சூசன்.

- க.கதிரவன்