சிக்குன் குன்யாவுக்கு மருந்தாகிறது புளியங்கொட்டை!



மகிழ்ச்சி

எல்லா பிரச்னைகளுக்கும் நம்மைச் சுற்றியே தீர்வு இருக்கிறது. நாம்தான் அதனை கவனிப்பதில்லை. ஆமாம்... சிக்குன் குன்யா காய்ச்சலுக்கு புளியங்கொட்டையே சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான ஆயுர்வேத மருந்தாக புளி பயன்படுத்தப்படுகிறது. சமூலம் என்று சொல்லக் கூடிய வகையில் புளியம்பழம், இலைகள், பட்டைகள் ஆகியவை என புளிய மரத்தின் சகல பகுதிகளுமே மருத்துவ சிகிச்சையில் பயன்படுகிறது. வயிறு தொடர்பான கோளாறுகளுக்கு சிறப்பான மருந்தாகவும் புளி இருக்கிறது.

இந்த வகையில் புளியங்கொட்டையில் இருக்கும் Lectin என்கிற புரதத்தால் சிக்குன் குன்யாவை குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநில இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சாய்லி டோமர் மற்றும் பிரவீந்திர குமார் ஆகியோர் இதனைக்
கண்டுபிடித்துள்ளனர்.

லெக்டின் புரதத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருள் அடங்கியிருப்பதால், சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து பரிசோதித்தார்கள்.
அப்போது நோய்த்தொற்று 64 சதவிகிதம் அளவுக்கு குறைந்தது. இதேபோல சிக்குன் குன்யாவுக்குக் காரணமான RNA வைரஸும் 45 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது.

எனவே, புளியங்கொட்டையைக் கொண்டு சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் மூலப்பொருளை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கான பேட்டன்ட் உரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளனர்.சிக்குன்குன்யாவுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்து இதுவரை இல்லாத நிலையில், லெக்டின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது!  

- கௌதம்