உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்!



Life style

- கரீனா கபூர் தரும் அனுபவ ஆலோசனை

பாலிவுட்டின் முன்னணி நாயகியான கரீனா கபூர், திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பின்னும் தன்னுடைய மார்க்கெட் அந்தஸ்தினைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர். ‘பிஸியான நடிகையாக இருந்த போதிலும் இல்லத்தரசியாக தன்னுடைய பணிகளை நிறைவாகச் செய்ய தவறுவதில்லை’ என்று பெருமையோடு கரீனா அடிக்கடி பேட்டிகளில் கூறுவதுண்டு. சமீபத்தில், ஆரோக்கியம் தொடர்பாக கரீனா கபூர் கூறியிருக்கும் ஆலோசனைகள் அதை இன்னும் அழுத்தமாகப் புரிய வைக்கிறது.

‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நம் மீது கவனம் செலுத்துவதைப் போலவே, நாம் வசிக்கும் வீட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். இதனை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறேன்.இன்று சுற்றுப்புறச் சூழல் நிறைய மாசடைந்திருக்கிறது. அதை மாற்றுவதற்கு தனி மனிதர்களும், அரசாங்கமும் நிறைய முயற்சிகளை இணைந்து செய்ய வேண்டும். ஆனால், வீட்டை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது முழுக்க நம் கைகளில்தான் இருக்கிறது.

வீடு என்றால் அழுக்குத் துணிகளோ, குப்பைகளோ சேரத்தான் செய்யும். அது இயல்புதான். அதற்காக சோம்பலாக அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அப்படியே விட்டுவிடக் கூடாது. உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். வீடு ‘பளிச்’ என்று எப்போதும் சுத்தமாக இருப்பது மனதுக்கும் இதமாக இருக்கும். மனிதர்களுக்குத் தடுப்பூசி போல, வீட்டுக்கும் நுண்கிருமிகள் நீக்கம் அவசியம். அதற்கு சுத்தமான தண்ணீரில் துடைத்தால் கூட போதும்.

முக்கியமாக இன்றைய சுற்றுப்புறச்சூழலைப் பற்றி நிறைய யோசிக்கிறேன். சுற்றுச்சூழலால் ஏற்படும் நோய்கள் பற்றியும் இணையதளங்களில் நிறைய படிக்கிறேன். என் மகனுடைய தினசரி வாழ்க்கையை சுற்றியுள்ள தூசு மற்றும் காற்று மாசுகள் பாதித்துவிடக் கூடாது என்று கவனமாக இருக்கிறேன். அதனால் வீட்டுக்குள் காற்றை சுத்திகரித்து தூய்மைப்படுத்தும் கருவி பொருத்தி இருக்கிறேன்.

இதன் மூலம் வெளியே அசுத்தமான காற்று இருந்தாலும் வீட்டில் சுத்தமான காற்று இருக்கிறது. முடிந்தால், காற்றை சுத்திகரிக்கும் செடிகளை வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியிலும் வளர்க்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.

- அஜி