ஆபரணத்தால் வரும் அலர்ஜி



Centre Spread Special

சாமானியர்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டபடியாலும், நகைப்பறிப்பு கொள்ளையர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும், தங்க நகைகளுக்கு மாற்றாக பெண்கள் இப்போது செயற்கை நகைகள் பக்கம் திரும்பிவிட்டனர். ஒரு விதத்தில் இது நல்லதுதான் என்றாலும், தங்கத்திற்கு பதில் அணியும் செயற்கை நகைகள் பலருக்கும் சருமத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகிறது.

பார்க்க அழகாக, கண்ணைக் கவரும் செயற்கை நகைகள் எல்லோருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. இந்த போலி நகைகள் நிக்கல், குரோமியம் போன்ற உலோகங்களால் செய்யப்படுவதால் சருமத்தில் அரிப்பு, ஒவ்வாமை எதிர்வினைகள், அந்த இடத்தில் வெள்ளைத் திட்டுக்கள், சிவந்து போதல், சிறிய நீர் கோர்த்த கொப்பளங்கள் மற்றும் உடலினுள் உறிஞ்சப்படுவது போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஒன் கிராம் கோல்டு என்று விற்கப்படும் நகைகளில், மற்ற உலோகத்தின் மேல் தங்க நிறத்தில் முலாம் பூசி விற்கிறார்கள். சருமத்தின் மேல் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்குகள் மீது இந்த உலோகம் உரசும்போது ஏற்படும் எதிர்வினையாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும்.உலோக ஒவ்வாமை (Metal allergy) இருப்பவர்கள் கூடியவரை செயற்கை நகைகள் அணிவதை தவிர்க்கலாம். முடியாத நிலையில் சிலவழிமுறைகளைப் பின்பற்றலாம்…

* செயற்கை நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் நன்றாக சுத்தம் செய்து உலர வைத்து, காட்டன் உள்ள பெட்டிகளில் காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைத்துவிட வேண்டும்.
* போலி நகைகள் அணிந்துள்ள சருமப் பகுதியில் பர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டாம்.
* செயற்கை நகைகளை அணிவதற்கு முன், அவை சருமத்தில் படும் இடங்களில் ஈரம் இல்லாமல், துடைத்து உலர வைத்த பின் அணிவது நல்லது.
* எந்நேரமும் வியர்வையோடு இருக்க வேண்டியிருக்கும் கோடை நாட்களில் கண்டிப்பாக போலி நகைகள் அணிய வேண்டாம்.

- இந்துமதி