சிங்கிளா இருப்போம்...சிங்கமா வாழ்வோம்!



புதிய கலாசாரம்

‘திருமணம் என்பது வாழ்க்கையை முழுமையாக்குகிறது’ என்ற வாக்கியத்திலெல்லாம் இப்போதுள்ள இளைஞர்களில் பலருக்கு நம்பிக்கையில்லை என்றே தெரிகிறது. A 2014 Pew report என்ற அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று, தனித்து வாழும் வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் விரும்புவது அதிகரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. இதன் எதிரொலியாக The 21st century is the age of living single என்றும் 21ம் நூற்றாண்டை குறிப்பிடுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 25 சதவிகித இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருவதாக ஆதாரத்துடன் குறிப்பிட்டிருக்கிறது. இதில் இன்னோர் நன்மையும் உண்டு என்கிறது US News & World Report. அதாவது, திருமணம் என்ற உறவில் இல்லாமல் சிங்கிளாக இருப்பவர்கள் சமூகத்துக்கு அதிகமான நன்மைகள் செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியாவிலும் திருமண வயது தாமதமாகி வரும் நிலையில் உளவியல் மருத்துவர் கார்த்திக்கிடம் இதுபற்றிப் பேசினோம்...

‘‘வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என்பதைப் பொதுவாக வர்த்தக ரீதியாகவே பார்ப்போம், ஆனால், அது உண்மை கிடையாது.
ஒருநாட்டின் தனிமனித மூளையின் திறன் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அந்த நாட்டின் வளர்ச்சியை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் மூளைத்திறன் அதிகமாகும்போது மற்றவர்களை சார்ந்திருக்கும் மனோபாவம் குறைந்திருக்கும். தனிமையாக இருப்பதிலேயே அவர்கள் நிறைவடைந்துவிடுவார்கள்.  இதுதான் சிங்கிள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை காரணம்.

ஓர் ஆணை நம்பி பெண்ணோ, பெண்ணை நம்பி ஆணோ சார்ந்திருக்கும் தெய்வீகத்தன்மை நம்முடைய கலாச்சாரத்தில் இருக்கிறது. ஆனால், வெளிநாடுகள் நன்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளதால் யாரும் யாரையும் சார்ந்திருப்பதில்லை. சார்ந்திருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. மனைவி/கணவன் என்ற கமிட்மெண்ட் இல்லாதபோது ஒருவரையொருவர் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றே நினைக்கிறார்கள்.

யாரும் கேள்வி கேட்கக் கூடாது, யாருக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை. சுதந்திரம்... சுதந்திரம் என்ற மனோபாவத்தாலேயே மொத்தத்தில் இந்த சிங்கிள் கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது அதிகமாகிவருகிறது. அதாவது அன்பின் பெயராலும், யாரும் தலையிடக்கூடாது. தன்னுடைய சந்தோஷம் மற்றும் துக்கம் எல்லாமே தனது கைக்குள்ளேயே இருக்க வேண்டும் என என்னும்போது தனித்து இருப்பதைத்தான் விரும்பும் சூழ்நிலை வரும்.

தனித்து வாழ விரும்பினாலும் வேலை செய்யும் இடங்களில் அரட்டை,  நண்பர்கள், உறவினர்கள் என எல்லாமே இவர்கள் வாழ்விலும் இருக்கும். காதலியுடன்/காதலருடன் சேர்ந்திருத்தல், விருப்பமான துணையுடன் உறவாடுதல் என எல்லாமே இவர்கள் வாழ்விலும் இருக்கும். ஆனாலும் திருமணம் என்ற ஒன்றை விரும்பாமல் தனிமையை விரும்புவார்கள்.

வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போவதற்கும், தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் சிங்கிள் வாழ்க்கைதான் சரி என்ற மனோபாவமே இதற்குக் காரணம். ஆனால், ஒருவருக்கொருவர் ஆதரவாக திருமணம் என்ற பந்தத்தில் வாழும் ஆத்மார்த்தமான, அர்த்தமுள்ள வாழ்க்கையை இவர்கள் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது’’ என்கிறார் கார்த்திக்.

பெண்களும் விதிவிலக்கல்ல...

பெண்களும் விதிவிலக்கில்லை!சிங்கிள் கலாசாரம் இப்போது பெண்களிடமும் அதிகரித்து வருகிறது. 25 வயதை அடைந்துவிட்ட ஒரே காரணத்துக்காக திருமணம் செய்து கொள்ள பெண்கள் தயாராக இல்லை. ‘திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆண்களைப்போலவே குறிக்கோள்களும், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் எங்களுக்கும் உண்டு’ என்கிற மனோபாவம் பெண்களிடம் அதிகமாகி வருகிறது என்கின்றன பல்வேறு ஆய்வுகள்.

பெண்கள் மற்றவர்களின் உதவியையும், ஆதரவையும் எதிர்பார்ப்பதும் குறைந்துவருகிறது. திருமணம் என்ற பெயரில் மற்றவர்கள் தங்கள் மேல் திணிக்கும் வாழ்க்கையைவிட, தாங்களாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதற்கு மதிப்பளிப்பதையே பெண்கள் விரும்புகிறார்கள். அதுதான் பெண்களின் சிங்கிள் வாழ்க்கைக்குக் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

- தோ.திருத்துவராஜ்