பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பொதுமுறை மாலுமிப் பயிற்சி!



அட்மிஷன்

தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் (Tamilnadu Maritime Academy) தமிழக அரசின் தன்னாட்சி நிறுவனமாகத் தூத்துக்குடியில்  செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆறு மாத கால அளவிலான பொதுமுறை மாலுமி பயிற்சி (Pre-Sea Course  for General Purpose Rating) அளிக்கப்பட்டுவருகிறது. இப்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமணமாகாத இளைஞர்கள்


மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய அரசின் கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகம் (Directorate General of  Shipping) அங்கீகரித் துள்ள ஆறு மாத கால (25 வாரங்கள்) அளவிலான இருப்பிடப் பயிற்சிக்குத் (Residential Course) திருமணமாகாத ஆண்கள்  மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

கல்வித் தகுதி

ஆங்கில வழியில் அளிக்கப்படும் இப்பயிற்சிக்குப் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப்  பாடங்களை எடுத்துப் படித்திருப்பதுடன் மொத்தம் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலப்  பாடத்தில் 40% மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் பெற்றிருக்க வேண்டும்.
(அல்லது)
+2-ல் ஏதாவதொரு பிரிவில் மொத்தம் 40% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில்  ஆங்கிலத்தில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களை எடுத்துப்  படித்திருக்க வேண்டும்.
(அல்லது)
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) இரண்டு வருட கால அளவிலான(ஃபிட்டர்/மெஷினிஸ்ட்/மெக்கானிக்/வெல்டர்/டர்னர்) ஏதாவதொரு பயிற்சியினை  முடித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பயிற்சிக்கான இறுதியாண்டுத் தேர்வில் மொத்தம் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பத்து  அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 40% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
 
வயது வரம்பு

பயிற்சியில் சேர்பவர்களுக்கு 17½ வயதுக்குக் குறையாமலும், 25 வயதுக்கு அதிகமாகாமலும் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து  ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. டிப்ளோமா அல்லது டிகிரி படித்திருப்பவர்கள்  27 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வயதினை  உறுதிப்படுத்திடப் பிறப்புப் பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
   
மருத்துவத் தகுதி


இப்பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் வணிகக் கப்பல் சட்டம்-2000 குறிப்பிடும் கடல் பணியாளர்களுக்கான மருத்துவத் தகுதியைப் பெற்றிருக்க  வேண்டும். குறிப்பாக, இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கண்ணாடி அணிந்திருக்கக்கூடாது. நிறப் பார்வைக் குறைபாடுடையவர்களாக  இருக்கக்கூடாது. கண்களில் எந்தவிதமான குறைபாடு களுமில்லாமல் இருக்கவேண்டும். இந்திய அரசின் கப்பல் வணிகத்திற்கான பொது  இயக்குநரகத்தால் நடத்தப்படும் Medical Examination மற்றும் Sight Test ஆகியவற்றின் அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.  
    
பயிற்சிக் கட்டணம்

மாணவர் சேர்க்கையின்போது பயிற்சிக் கட்டணமாக ரூ.1,50,000/- (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்) ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
    
பயிற்சியின் சிறப்புகள்


இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு தூத்துக்குடியிலுள்ள கடல்சார் பயிற்சி நிறுவனத்தில் கருத்தியல் வகுப்புகளும், தூத்துக்குடி,  பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனப் பணிமனையில் (Poompuhar Shipping Corporation Marine Workshop) தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மும்பையிலுள்ள கப்பல் வணிகத்திற்கான பொது இயக்குநரகத்தின் (Directorate General  of Shipping) கீழ் இயங்கும் கடற்பணிகளுக்கான தேர்வு வாரியம் (Board of Examinations for Seafarers) நடத்தும் அகில இந்தியப் பொது நோக்க  மதிப்பீட்டுப் பயிற்சிக்கான வெளியேற்றப் பயிற்சித் (All India Exit Examination for General Purpose Rating Course) தேர்வுகளில் கலந்து  கொள்வதற்கான ஏற்பாடுகளைப் பயிற்சி நிறுவனமே செய்து தருகிறது.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Continuous Discharge Certificate - CDC) எனும் தகுதிச்  சான்றிதழையும் பெற முடியும். இந்தச் சான்றிதழைக் கொண்டு கடல் வழியைப் பயன்படுத்திச் செயல்படும் வணிகக் கடற்படைப் பணிகளை எளிதில்  பெற முடியும். இந்தப் பயிற்சி நிறுவனம், இந்தியத் தேசிய கடற்பணியாளர் தரவுதள எண் மற்றும் தொடர்ச்சியான வெளியேற்றச் சான்றிதழ் (Indian  National Database of Seafarers (INDOs) Number and CDC) பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரும். இதற்காகத் தனியாகக்  கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.இந்தப் பயிற்சி நிறைவுக்குப் பின் 36 மாதங்கள் கடல்சார் பணியில் அனுபவம் பெற்ற பின்பு வெளிநாடு  செல்லும் கப்பலில் இரண்டாம் துணைப் பணியாளர் எனும் அலுவலர் நிலைக்கான தேர்வுகளை எழுத முடியும். வெளிநாட்டுக் கப்பல்களில் பணிபுரியும்  வாய்ப்பையும் பெறமுடியும்.
    
விண்ணப்பிக்கும் முறை


இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in\\tnma எனும் இணையதளத்திலிருக்கும் விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம்  செய்து பயன்படுத்தலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ‘Tamil Nadu Maritime Academy’ எனும் பெயரில் தூத்துக்குடியில்  மாற்றிக்கொள்ளக்கூடியதாக ரூ.750-க்கான Demand Draft எடுக்க வேண்டும். விண்ணப்பத்துடன் DD-ஐ இணைத்து உறையின் மேல் ‘Application for  admission to GPR Course to be commenced from 02.01.2020’ என்று குறிப்பிட்டு, ‘Director, Tamil Nadu Maritime Academy, 333, South Beach  Road, Thoothukudi - 628001, Tamil Nadu’ எனும் முகவரிக்கு 8.11.2019 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சென்றடையும்படி அனுப்பிவைக்க  வேண்டும்.

மாணவர் தேர்வு செய்யும் முறை


இப்பயிற்சிக்கு தமிழக அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில், பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற  மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கொண்டு பயிற்சிக்கான 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தூத்துக்குடியில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்குத்  தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனியாக அழைப்புகள் அனுப்பிவைக்கப்படும். அதன் பின்னர், பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  2.1.2020 முதல் பயிற்சிகள் தொடங்கும்.  மேலும் இப்பயிற்சி குறித்த கூடுதல் தகவல்களைப் பெற www.tn.gov.in\\tnma என்ற  இணையதளத்திலிருந்து இப்பயிற்சிக்கான தகவல் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து பார்க்கலாம் அல்லது ‘Director, Tamil Nadu Maritime  Academy, 333, South Beach Road, Thoothukudi-628001, Tamil Nadu’ எனும் முகவரிக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

- வெங்கட் குருசாமி.