உதவித்தொகையுடன் கோடைகால பயிற்சி வகுப்பு!



அட்மிஷன்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அகாடமி ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்னோவேட்டிவ் ரிசர்ச் (AcSIR) நிறுவனம் 2011ம் ஆண்டு நிறுவப்பட்டது. சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களும் மற்றும் 37 தேசிய ஆய்வகங்களும் கொண்ட இந்நிறுவனத்தில் 2019ம் ஆண்டுக்கான
கோடைகாலப் பயிற்சி வகுப்பு அறிவிப்பு (Dr. APJ Abdulkalam Summer Training Program) வெளியாகியுள்ளது.

எஞ்சினியரிங் / டெக்னாலஜி பட்டம் பயிலும் மாணவர்கள், இந்தியாவின் முன்னணி அறிவியலாளர்களுடன் இணைந்து CSIR-ன் இந்தியா முழுவதும் உள்ள ஆய்வகங்களில் பல்வேறு வகையான புத்தாக்க ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது இப்பயிற்சி வகுப்பு. இது உண்டு உறைவிடப் பயிற்சித் திட்டமாகும்.

பயிற்சி வகுப்பு

ஒவ்வொரு ஆண்டின் கோடைகாலத்திலும் சுமார் 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.25,000 வரையிலான உதவித்தொகை வழங்கப்பட்டு ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட ஏதேனும் இரண்டு மாதங்கள் பயிற்சிக் காலமாக அனுசரிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி

GPA 8.0 on a scale of 10 OR GPA 7.0 on a scale of 10 for CFTIs என்ற விகிதாச்சாரத்துடன் மூன்றாம் ஆண்டு B.E / B.Tech தேர்ச்சி அல்லது அதே விகிதாச்சாரத்தில் முதலாம் ஆண்டு M.Sc / M.E / M.Tech பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க  தகுதியுடையவர்கள் ஆவர். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு அனுசரிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://acsir.res.in என்ற இணையதளம் சென்று முழுமையான விவரங்களைப் படித்துவிட்டு, ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2019.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதியில் எடுத்த மதிப்பெண்கள், தேர்ந்தெடுக்கும் ஆய்வுத் துறை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அந்தந்த துறைக்கு ஏற்ப ஆய்வுக்கூடங்களில் தங்கிப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

- துருவா