அப்போ நான் அட்டையில்!



குங்குமம் வாசகி ஃப்ளாஷ்பேக்!

‘‘இப்போ நீங்க அட்டைப்படமா ஒரு மாடலை போட்டோ எடுத்து போடுறீங்க... 22 வருஷம் கழிச்சு அந்தப் பொண்ணு எங்க இருப்பா, என்ன பண்ணிட்டிருப்பானு தெரிஞ்சிக்க ஆர்வப்பட்டிருக்கீங்களா? அப்படீன்னா என்னைப் பத்தி தெரிஞ்சுக்குங்க. 1993ம் வருஷம் ஜூலை 23ம் தேதி `குங்குமம்’ இதழ்ல நான் கவர் கேர்ள்!’’ - சந்தோஷமும் உற்சாகமுமாக தன் `ஆட்டோகிராப்’பை திரும்பிப் பார்க்கிறார் சுமதி. மாடல் மற்றும் டி.வி நிகழ்ச்சி இயக்குநராக இருந்தவர். இப்போது ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கோவூரில் தன் காதல் கணவரோடு வசிக்கிறார்.

‘‘நான், பிறந்து வளர்ந்ததெல்லாம் கோயமுத்தூர்லங்க. அப்பா, பிஸினஸ்மேன். எனக்கு சின்ன வயசுலயே மீடியா ஆர்வம். பிளஸ் 2 முடிச்சதும், சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்தேன். வீட்டுல இதுக்கு பயங்கர எதிர்ப்பு. எல்லாத்தையும் சமாளிச்சு, படிப்புல கோல்டு மெடல் வாங்கினேன். அந்நேரத்துல மாடலிங் பண்ற வாய்ப்பு வந்துச்சு. சேலை விளம்பரங்கள் நிறைய பண்ணிட்டு இருந்த நேரம் எதேச்சையா எடுத்த போட்டோதான் இது. `குங்குமம்’ இதழ்ல அட்டைப் படமா வரும்னு நினைக்கவே இல்லை!’’ - பத்திரமாய் எடுத்து வைத்த அந்த அட்டைப் படத்தை நமக்கு வாட்ஸ் அப் செய்து பரவசத்தை பரவவிட்டுத் தொடர்கிறார் சுமதி.



‘‘பெரிய பெரிய லட்சியம் இருக்கும். ஆனா, அதெல்லாம் இல்லாட்டி என்ன... இவர் இருந்தா போதும்னு ஒருத்தரைப் பார்த்ததும் தோணும். அதுதான் உண்மையான காதல். அப்படி ஒரு காதல் எனக்கு வந்துச்சு. வினித்குமார் ரெட்டியைப் பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. 1995ம் வருஷம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம். வழக்கம் போல இதனால வீட்டுல பிரச்னையாகிடுச்சு. நான் அந்நேரம் பல சேனல்களுக்கும் நிகழ்ச்சிகள் பண்ணிக்கிட்டு இருந்தேன். எல்லாத்தையும் விட்டுட்டு இவரோட கோவூர் வர வேண்டிய சூழல்.

வினித் இங்க பல பிஸினஸ் பண்ணி னாலும் விவசாயம்தான் அவருக்கு உயிர்நாடி. என் விருப்பத்தையும் மதிச்சு ஃபேஷன் டிசைனிங் படிக்க வச்சார். நான் தான் அதை தொடரல. இப்ப இங்குள்ள தோழிகளோட சேர்ந்து சமூக சேவை செஞ்சிட்டு சந்தோஷமா இருக்கேன். எங்களுக்கு, சுவின் யஷ்வந்த், பரத்னு இரண்டு பசங்க சென்னையில படிக்கிறாங்க. நினைச்சதை எல்லாம் அடைஞ்சிருந்தா கூட இத்தனை நிறைவா இருந்திருப்பேனான்னு தெரியலை. ஐ யாம் ஹேப்பி!’’ - மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது சுமதியின் வார்த்தைகளில்! ‘‘இந்த ஆகஸ்ட் 24ம் தேதி எங்களுக்குத் திருமணமாகி இருபது வருஷம் முடிஞ்சுது. ஸோ, இதை `குங்கும’த்தோட ஷேர் பண்ணலாமேன்னு தோணுச்சு. எவ்வளவோ மாடலிங் நிகழ்ச்சிகள் பண்ணியிருந்தாலும், இந்த ஒரு போட்டோதான் எனக்கான அடையாளம்!’’ - நெகிழ்ச்சியாய் முடிக்கிறார் சுமதி!

- பேராச்சி கண்ணன்