நியூஸ் வே



*‘‘என் படம் ‘காவியத்தலைவன்’ வரும் தேதியில் ‘ஐ’, ‘உத்தமவில்லன்’, ‘அனேகன்’ வந்தாலும் பிரச்னையில்லை. அவை எந்தவிதத்திலும் என் படத்திற்கு பங்கம் செய்யாது’’ என தனது முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார் டைரக்டர் வசந்தபாலன். அருமையான பாடல்களுடன் புது களத்தோடு ‘காவியத்தலைவன்’ ரெடியாக இருக்கிறது.

* எஸ்.ஜே.சூர்யாவின் கண்டுபிடிப்பான நிகிஷா படேல், தெலுங்கில் த்ரிஷாவுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததிலிருந்து, ‘‘த்ரிஷா ரொம்ப க்யூட். ஃப்ரெண்ட்லி. அட்வைஸ் அள்ளிக் குடுப்பாங்க’’ என த்ரிஷா புராணம் பாட ஆரம்பித்திருக்கிறார்.

*மறைந்த கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை சினிமாவாக்க ராஜீவ் மேனன் பெரும் முயற்சி எடுத்து வருகிறார். ஐஸ்வர்யா ராயை எம்.எஸ். ஆக்க உத்தேசம். நல்ல விஷயமய்யா, செய்ங்கய்யா!

*‘கத்தி’யில் சமந்தாவுக்கு டப்பிங் பேசியிருப்பவர் ரவீனா ரவி. ஏராளமான ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசின ஸ்ரீஜா ரவியின் மகள், இந்தப் பொண்ணு!

*தெலுங்கில் அடிக்கடி தாறுமாறான கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வது சமந்தாவிற்கு புதிதில்லை. லேட்டஸ்ட் கான்ட்ரவர்ஸி இது... பெயரிடப்படாத படம் ஒன்றில் சமந்தாவின் காட்சி திருப்தி இல்லாததால், டைரக்டர் டேக் மேல் டேக் ஆக போய்க் கொண்டிருக்க, கடுப்பான சமந்தா அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டினாராம். உண்மையா சமந்தா?

*55 படங்களில் இணைந்து நடித்த மம்மூட்டியும், மோகன்லாலும் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இணையக்கூடும். ஷாஜி கைலாஷ் இயக்கும் அடுத்த படம், இவர்களை கரம் கோர்க்கச் செய்யலாம் என மலையாள உலகம் பரபரக்கிறது.

*ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்று வந்திருக்கிறார் ஓவியா. டாட்டூ பிரியையான ஓவியா, லேட்டஸ்ட்டாக தன் வலது கையில் கடற்குதிரை டாட்டூ வரைந்திருக்கிறார்.

*எந்த பூஜையும் இல்லாமல், ஒரு செய்தியும் கசியாமல் ஷூட்டிங்கை ஆரம்பித்து விட்டார் மணிரத்னம். மணிரத்னமும், பி.சி.ஸ்ரீராமும் சேர்ந்து கிடைக்கிற மேஜிக்கை இந்தத் தடவை ரசிகர்கள் எதிர்பார்ப்பதை இருவருமே உணர்ந்திருக்கிறார்கள். சிம்பிளாக படம் காதல் கதைதான். ‘ராவணன்’ மாதிரி பெரிய களங்களைத் தேடவில்லை.

*டைரக்டர் சிம்புதேவன் இரவு பகலாக உட்கார்ந்து விஜய்யின் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி விட்டார். இப்போதைக்கு தலைப்பை ‘மாரீசன்’ என வைத்திருக்கிறார்கள். தலைப்பு மாறுவதற்கும் சான்ஸ் இருக்கிறது. ‘கத்தி’யிலிருந்து விஜய் வெளியே வந்த இருபது நாட்களில் ஷூட்டிங் ஆரம்பித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

*‘இறுதிச்சுற்று’ படத்தில் பாக்ஸிங் வீரராக மாதவன் நடிப்பது தெரிந்ததே! இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று நிஜ குத்துச்சண்டை வீரர்களிடம் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார் மாதவன்.

*இடையில் காணாமல் போய் மீண்டும் வந்திருக்கும் பூனம் பஜ்வா, குட்டி குட்டி காஸ்ட்யூம்களில் அசத்த ரெடியாகி விட்டார். பஞ்சாபி பெண்ணான பூனத்தின் முழுப்பெயர், பூனம் அமர்ஜித் சிங் பஜ்வா.

*கவுண்டமணி தமிழ், தெலுங்கு சினிமாக்கள் பார்ப்பதைத் தவிர்த்து வருகிறார். ஆனால், இரவில் தினமும் ஒரு ஹாலிவுட் ஆக்ஷன், காமெடி படங்களைப் பார்ப்பது அவர் ஹாபி.

*விஜய், அஜித் வரிசையில் இனி விஜய்சேதுபதியையும் சேர்த்துக்கொள்ளலாம். விஷயம் வேறொன்றுமில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் பங்களா கட்டப் போகிறார் விஜய்சேதுபதி. அதற்காக அங்கே இடம் தேடி வருகிறாராம்.

*வெங்கட்பிரபுவின் டைரக்ஷனை வெகுவாக ரசிக்க ஆரம்பித்து விட்டாராம் சூர்யா. ‘தம்பி’ என அழைத்துக் கொண்டு உற்சாகமாக இருக்கிறாராம். ‘‘அவர்களுக்குள் இருக்கிற புரிந்து கொள்ளுதலைப் பார்த்தால் ஹரி மாதிரி வெங்கட்பிரபுவிற்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கும்’’ என்கிறார்கள்.

*தெலுங்கில் ராம்சரணுடன் ஜோடியாக நடித்த படம் ஹிட் அடித்ததில் ஹேப்பியாக இருக்கிறார் காஜல் அகர்வால். ராம்சரணுடன் காஜல் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால், ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடி’ என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்களாம். காஜல் தமிழில் அடுத்து தனுஷுடன் நடிக்க பேச்சு நடக்கிறது.

*ஏ.ஆர்.முருகதாஸ் போல மினி கூப்பர் கார் வைத்திருந்த ஜி.வி.பிரகாஷ், அதை மாற்றிவிட்டு இப்போது ஜாகுவார் கார் வாங்கியிருக்கிறார்.

*‘கத்தி’யில் அனிருத் மிகவும் ஈடுபாட்டோடு உழைத்தது ஏ.ஆர்.முருகதாஸ் மனசை மிகவும் ஈர்த்துவிட்டது. அதனால், அடுத்து சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இந்தியில் எடுக்கப்போகும் படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராகப் போட்டுவிட்டார். இந்தியில் திடீரென எல்லோர் பார்வையும் அனிருத் மீது விழுந்திருக்கிறது.