கவிதைகாரர்கள் வீதி
சுமை
அம்மா இறக்கிவைத்த சுமை இடுப்பில் தூக்கி சுமக்கிறாள் பத்து வயது பாப்பா - மா.கண்ணன், ராஜபாளையம்.
எழுதாதது...
ரசித்தலில் லயித்துவிடுவதால் எப்பொழுதும் எழுத முடிவதில்லை... மழையைப் பற்றிய ஒரு நல்ல கவிதை! - கு.வைரச்சந்திரன், திருச்சி.
ஞாபகம்
வருடங்கள் பல கடந்தும் அம்மாவின் இறந்த நாளை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது, அம்மா நட்டு அடைமழையில் முறிந்துவிழுந்த வேப்ப மரம்! - ஜி.வி.மனோ, தூத்துக்குடி.
தொலைந்தது...
குறுந்தகவல்கள் கொண்டு வருவதேயில்லை அவரவர் கையெழுத்தின் அழகினை! - பெ.பாண்டியன், காரைக்குடி.
கற்பனை
வானவில்லைப் பற்றி குறிப்பெழுதுகிறது ஒரு குழந்தை... ‘வானவில் கடவுள் விளையாடும் ஸ்கிப்பிங் கயிறு!’ - தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்.
தண்டனை
தவறு செய்யாமலேயே தினமும் சக்கரங்களால் நசுக்கப்படுகிறது எலுமிச்சம்பழம்! - இரா.வசந்தராசன், கல்லாவி.
|