ஜப்பானில் அரிசிப் பஞ்சம்?
‘தட்டுப்பாடு’ என தலைப்பு வைக்க வேண்டுமோ? பரவாயில்லை... ‘பஞ்சம்’ என்றே டைட்டில் வைக்கலாம். தப்பில்லை. என்ன விஷயம்?ஜப்பான் நாட்டின் பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும், ஏன், அரசியலிலும்கூட அரிசிக்கு முக்கியமான இடமிருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளாக அந்நாட்டு மக்களிடையே அரிசியின் மொத்தப் பயன்பாடு குறைந்திருக்கிறது. என்றாலும் கொழகொழவென ஒட்டிக்கொள்ளக்கூடிய ‘ஜப்போனிகா’ அரிசியின் மீது மக்கள் கொண்டுள்ள மோகம் மட்டும் குறையவேயில்லை.எனவே, இன்னமும் உணவில் அரிசி முக்கியமான இடத்தைப் பெற்றுக்கொண்டுதானிருக்கிறது.
 ஆனால், தற்போது மக்களுக்குத் தேவைக்கேற்ப அரிசி கிடைப்பதில்லை. கடந்த கோடையிலிருந்து, ஜப்பானில் அரிசி விலை கடுமையாக அதிகரித்திருப்பதாக செய்திகள். அரிசி விலை நிலையாக இருக்க வேண்டும்; குறைந்துபோய் விவசாயிகளைப் பாதித்து விடக் கூடாது என்பதற்காக, நெல் சாகுபடி பரப்பைக் கட்டுக்குள் வைத்து, பிற பயிர்களைச் சாகுபடி செய்யவும் நீண்ட காலமாக விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசு மானியம் வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் திடீரென நேரிட்ட அரிசி பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக இருப்பிலுள்ள அரிசியை வெளிச் சந்தையில் அரசு விடுவித்தபோதிலும் இன்னமும் கடைகளுக்கு ஒழுங்காக வந்து சேராததால் பெருங்குழப்பம்.சில நாட்களுக்கு முன் ஜப்பானிய வேளாண் துறை அமைச்சர் பதவி விலகியதற்கு இவ்விஷயத்தில் மக்கள் கொண்டிருக்கும் கோபமும்கூட ஒரு காரணம் என்கிறார்கள். உண்மையில் அரிசி கிடைக்காததால் மக்கள் ரொம்பவுமே வெறுத்துப் போயிருக்கின்றனர்.
 “நான் எப்போதும் அரிசி வாங்க வேண்டியதில்லை; ஏனெனில் என்னுடைய ஆதரவாளர்கள் எனக்குப் பரிசாக வழங்கி விடுகிறார்கள்” என்று வேளாண் அமைச்சர் தகு இட்டோ, கருத்துச் சொல்லப் போக மக்கள் கடுப்பின் உச்சத்துக்குச் சென்றனர். உடனே இட்டோ மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் வேறு வழியில்லை. அவர் பதவி விலக வேண்டிய நிலை. காரணம், வரும் ஜூலை மாதத்தில் ஜப்பான் நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், ஏதாவது செய்து முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய முயற்சியாக வேளாண் அமைச்சரை பலி கொடுத்திருக்கிறார் நாட்டின் சிறுபான்மை அரசின் பிரதமரான ஷிகெரு இஷிபா.

இட்டோவைத் தொடர்ந்து வேளாண் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷிஞ்சிரோ கொய்சுமி, ஜப்பானின் செல்வாக்குமிக்க வேளாண் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியவர். இப்போது அரிசி பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.  அரிசிக்கு என்னாச்சு?கடந்த கோடைக் காலத்தின்போது, பெரும் நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, மக்கள் பெரும் பதற்றத்துக்குள்ளாகி, தேவைக்கு அதிகமான அரிசியை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினர். இதனால் அரிசி விலை இரு மடங்காக உயர்ந்ததுடன், கடைகளில் கிடைப்பதும் அரிதாகத் தொடங்கியது என்கிறார்கள். நாட்டின் உயர்வகை அரிசியான கோஷிஹிகாரியின் தற்போதைய விலை, 5 கிலோவுக்கு 35 டாலர்கள் (ஜப்பான் மதிப்பில் 5 ஆயிரம் யென், நம்ஊர்க் கணக்கில் கிலோ ரூ.650). ஜப்பான் வேளாண் கூட்டுறவுகள் மற்றும் பிற மொத்த விற்பனையாளர்களிடம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைவிடவும் தற்போது 4 லட்சம் டன்கள் குறைவாகவே அரிசி கையிருப்பில் உள்ளது. அத்துடன் முன்னெப்போதுமில்லாத வகையில் மொத்த இருப்பு மிகக் குறைவான அளவில் 1.53 மில்லியன் டன்களாக இருக்கிறது.
ஜப்பானில் இப்போதுதான் நெற்பயிர்கள் நடப்பட்டுள்ளன. இவை அறுவடைக்கு வர இன்னும் சில மாதங்களாகும். இந்நிலையில், அரிசி பற்றாக்குறையைக் கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானிய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.பற்றாக்குறைக்கும் விலையேற்றத்திற்கும் காரணம் என்ன?அரிசி விலையை 5 கிலோவுக்கு 20 டாலர்களாக, சுமார் 3,000 யென்களாகக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக பிரதமர் இஷிபா உறுதியளித்துள்ளார்.
விலைகளை ஏன் குறைக்க முடியவில்லை என்றே தெரியவில்லை என்று நாடாளுமன்றத்தில் ‘வெள்ளந்தியாகத்’ தெரிவித்த பிரதமர் இஷிபா, முதலில் எவ்வளவு அரிசி கைவசம் இருக்கிறது, அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரிசி விலையைக் குறைக்கத் தற்போது மேற்கொண்ட முயற்சிகளால் பயனேற்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்ட அவர், அரிசி தொடர்பான அரசின் கொள்கையில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்றிருக்கிறார்.கடந்த கோடைக் காலத்தில் ஏற்பட்ட பதற்றம்தான் நிலைமையை மோசமாக்கியது. சுற்றுலா அதிகரித்ததும் மக்கள் வெளியே சாப்பிடுவது அதிகரித்ததும்கூட அரிசிக்கான தேவையை உயர்த்தியுள்ளது என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ரஷியா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை விலை உயர்ந்து, ரொட்டி மற்றும் நூடுல்ஸ் விலைகளும் உயர்ந்ததால், அரிசி உணவைச் சாப்பிடுவோரின் தொகை அதிகரித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளின் நெல் சாகுபடிகூட அதிக வெப்பம் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு காரணமாக மோசமாக இருந்தது.ஜப்பானின் நெல் கொள்முதல் - விற்பனை வழிமுறைகளும் மிகவும் சிக்கலானவை. பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் தங்கள் நெல்லை ஜப்பான் வேளாண் கூட்டுறவுகள் மூலம் பாரம்பரிய முறைப்படிதான் விற்கிறார்கள். இந்த அமைப்புகள் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை.
ஆனால், பெருமளவில் பிற வழிகளிலும் ஆன்லைன் மூலமும் விற்கப்படுவதால், நெல் - அரிசி விற்பனையைக் கண்காணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்கிறார் தேசிய வேளாண் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகி மசயுகி கனமோரி. இதுவரை என்ன செய்திருக்கின்றனர்?
அவசரகால அரிசி இருப்பை விடுவிப்பதில் தாமதம் செய்ததற்காகவும், தேவை - விநியோக நிலவரத்தைச் சரியாக மதிப்பிடாததற்காகவும் வேளாண் அமைச்சகம் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. விடுவிக்கப்பட்ட அரிசி இருப்பில் 10 சதவிகிதம் மட்டுமே இதுவரையில் சந்தைக்கு வந்திருக்கிறது. அப்படியானால், என்ன நடக்கிறது, அரிசி எங்கே செல்கிறது என்று பலப்பல சந்தேகங்கள் எழுகின்றன.அரிசியின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விற்பனையில் உச்சவரம்பை நீக்குவது உள்பட சில திட்டங்களை வேளாண் அமைச்சர் கொய்சுமி அறிவித்துள்ளார்.
இன்னொரு பிரச்னை, இருப்பு வைக்கப்பட்டுள்ள பழுப்பு அரிசியை ஜப்பானியர்கள் விரும்புகிற மாதிரியான வெள்ளை வெளேர் அரிசியாகத் தீட்டி மாற்றுவதற்குப் போதுமான ஆலைகளும் ஜப்பானில் இல்லை. எல்லாவற்றுக்கும் சிகரமாக சில மொத்த விற்பனையாளர்கள், இன்னமும் விலை உயரட்டும் என்பதற்காக அரிசியைப் பதுக்கிவைத்திருக்கின்றனர் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
அரிசி விலை மிகவும் குறைந்துவிடக் கூடும் என்று அஞ்சி இருப்புகளை வெளியிட மறுத்து வரும் அரசு, நெல் சாகுபடியை அதிகரித்து, உபரி ஏற்படும் சமயத்தில் ஏற்றுமதி செய்திருந்தால் இந்தப் பிரச்னையைத் தவிர்த்திருக்கலாம் என்று கேனான் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஸ்டடீஸ் ஆய்வு இயக்குநர் கசுஹிட்டோ யமாஷிடா தெரிவித்துள்ளார்.
“நெல் சாகுபடிப் பரப்பைக் குறைப்பது உணவுப் பாதுகாப்புக்கு எதிரானது. இது அழிவுகரமான கொள்கை...” என்றும் யமாஷிடா கூறுகிறார்.
இதனிடையே, அதிகரித்து வரும் சாகுபடிச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு, அரிசி விலையொன்றும் மிகவும் அதிகமாக இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எப்படியென்றாலும், நெல் சாகுபடி விஷயத்தில் ஒரு நீண்டகால உத்தியை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் இருக்கிறது. ஏனெனில், ஜப்பானில் இப்போது நெல் பயிரிடும் விவசாயிகளின் சராசரி வயது 69 ஆக இருக்கிறது.
அதாவது, எல்லாருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. இளைய தலைமுறைகள், இந்தியாவைப் போலவே, வேளாண்மைக்கு வருவதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் விவசாயம் செய்வோரின் தொகை பாதியாகக் குறைந்துவிட்டது.
நுகர்வோரும் சில்லறை வணிகர்களும் என்ன செய்கிறார்கள்?வேறு வழியில்லை. என்ன விலையென்றாலும் அரிசி வாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது என்று குறிப்பிடும் டோக்கியோ, கவாசாகியைச் சேர்ந்த ஹிரோமி அகாபா, இதே நிலைமை தொடர்ந்தால், அரிசி சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டியதுதான் என்கிறார்.
பல கடைகள் அரிசி விற்பதில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒரு முறை வரும்போது, வாடிக்கையாளருக்கு ஒரு பை அரிசி மட்டுமே விற்கின்றனர். பிரச்னை என்னவாக இருந்தாலும் அரிசி விற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கடைக்காரர்களில் சிலர் இறக்குமதி செய்யவும் தயங்குவதில்லை.
உலகின் நாலாவது பொருளாதாரமென்ற பெருமை கொண்ட ஜப்பான் நாட்டின் மக்கள், அன்றாட உணவான அரிசிக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகளும் எகிறிவிட, அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தியது இந்தியா!
உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளார். அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா என்ற வரிசையில் ஜப்பானின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிட்டதால் நான்காம் இடத்திற்கு வந்துவிட்டதாக உலகப் பொருளாதார நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, இதே 6 சதவீத வளர்ச்சி தொடரும் நிலையில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் ஜெர்மனியையும் முந்திச் சென்று மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்தியாவை விட மிகக் குறைவு என்பதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 3ம் இடத்தைப் பிடிப்பதும் எளிய இலக்காகவே இருக்கும் என்கிறார்கள்.
ஆனால், உலகில் பொருளாதார வல்லரசாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் கனவு நனவாக இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
முதலிடத்தில் உள்ள அமெரிக்கா நம்மை விட 8 மடங்கும், சீனா 5 மடங்கும் பெரிய பொருளாதாரமாக இருப்பதால் அந்த நாடுகளை முந்திச் செல்ல இந்தியா இன்னும் வேகமான வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டும்.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் சாதனைக்குரியதாக கருதப்பட்டாலும், இந்த வளர்ச்சி இந்திய குடும்பங்களிலும், தனிநபர் வருமானத்திலும் எதிரொலித்துள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
இந்திய மக்கள்தொகையில் 120 கோடிப் பேர் குறைந்த வருவாய் பிரிவிலும், 6.6 கோடிப் பேர் நடுத்தர வருவாய் பிரிவிலும், 1.6 கோடிப் பேர் உயர் நடுத்தர வருவாய் பிரிவிலும், 20 லட்சம் பேர் மட்டுமே உயர் வருவாய் பிரிவிலும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயிலும் எதிரொலித்தால் மட்டுமே அது உண்மையான வளர்ச்சியாக கருதப்படும். தனிநபர் வருவாயைப் பொறுத்தவரை, 181 நாடுகள் பட்டியலில் இந்தியா 122வது இடத்திலேயே உள்ளது.
அதுமட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்புக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். இதற்கு மாறாக அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு தேடி இந்தியாவுக்கு வருமளவுக்கு நமது கல்வித்தரத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயர்த்தினால் மட்டுமே மற்ற நாடுகளை முந்திச் சென்று இந்தியா வெற்றிபெற முடியும்.
ஜான்சி
|