இந்தியாவின் முதல் ஆர்கானிக் மாநிலம்!
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மாநிலம், சிக்கிம். சிறிய மாநிலமாக இருந்தாலுமே கூட, பெரிய சாதனையை நிகழ்த்தி எல்லோருக்குமே முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
ஆம்; இந்தியாவில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் செய்யும் மாநிலம் என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறது, சிக்கிம். இந்தச் சிறப்பை சில வருடங்களுக்கு முன்பே பெற்றிருந்தாலும் கூட, சிக்கிம் எப்படி 100 சதவீத இயற்கை விவசாய மாநிலமாக மாறியது என்பதைப் பற்றிய விவரங்கள் சமீபத்தில்தான் வெளியாகியிருக்கின்றன.
 ஒரு நல்ல செயல் உடனடியாக நடந்துவிடாது. அதற்குப் பல எதிர்ப்புகள் வரும். தொடர்ந்து அதில் நம்பிக்கையுடன் இயங்கி வந்தால் மட்டுமே அதை அடைய முடியும். இதற்கு குறைந்தபட்சம் பத்து வருடங்களாவது தேவைப்படும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், சிக்கிமின் இயற்கை விவசாயம்தான். கடந்த 2003ம் வருடம் சிக்கிமின் முதலமைச்சராக இருந்த பவன் குமார், ‘‘100 சதவீதம் இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக மாறப்போகிறது...’’ என்று அறிவித்தார்.
 பல வருடங்களாக கெமிக்கல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வந்ததால் மண்ணின் ஆரோக்கியத்தன்மை குறைந்துவிட்டது. சுற்றுச்சூழலும் பல பிரச்னைகளைச் சந்தித்தது. இதற்கு எதிர்வினையாகத்தான் 100 சதவீத இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தினார் பவன் குமார். முதலில் கெமிக்கல் உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவது என்பது ஒருசில நாட்களில் நடக்கக்கூடிய விஷயம் இல்லை. வருடக்கணக்கில் செயல்படுத்த வேண்டிய நீண்டகாலத் திட்டம் இது.
இயற்கை விவசாயம் என்றால் என்ன? எதற்காக இயற்கை விவசாயம் வேண்டும்... என்று இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது.
கெமிக்கல் உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்தி, அதிக விளைச்சலை எடுத்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்குத் தயக்கம் காட்டினார்கள். அவர்களிடம் இயற்கை விவசாயத்தின் அவசியத்தைப் புரிய வைத்து, அவர்களையும் இயற்கை விவசாயம் செய்ய வைக்கவே பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறது சிக்கிம் அரசு.
ஆனால், 2010ம் வருடத்திலிருந்துதான் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. ஆம்; 2010ல் சிக்கிம் ஆர்கானிக் மிஷன் எனும் திட்டத்தை தொடங்கியது சிக்கிம் அரசு. இதுஒன்றும் விவசாயக் கொள்கை இல்லை. எப்படி இயற்கை விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்வது, இயற்கை முறையில் விளைந்த உணவுகளுக்குச் சான்றிதழ் பெறுவது மற்றும் அவற்றை சந்தைப்படுத்துவதுதான் இந்த மிஷன்.
இந்த மிஷனை செயல்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் நன்கு பயிற்சி பெற்ற 750 விவசாய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, அந்த விவசாய அதிகாரிகள் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள்.
இயற்கை விவசாயம் செய்வதற்காக வழிகாட்டியதோடு, வேண்டிய உதவிகளையும் செய்து தந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் இயற்கை உரங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர். இயற்கை விவசாயப் பொருட்களுக்குச் சான்றிதழ் தரும் அமைப்பு, விவசாயம் நடக்கும் இடங்களை ஆவணப்படுத்தி, அதை கண்காணிக்கவும் செய்தது.
இந்தச் சான்றிதழ் இயற்கை விவசாயம் மூலம் விளைந்த பொருட்களை விற்பனை செய்ய உதவியது. ஆம்; போலியா அல்லது உண்மையாலுமே இயற்கை விவசாயத்தின் மூலம் விளைந்ததா என்று மக்கள் கண்டறிய அந்தச் சான்றிதழ் பயன்பட்டது. 2015ம் வருடத்தில் சிக்கிமில் உள்ள 75000 ஹெக்டேர் விவசாய நிலம் சான்றிதழ் பெற்ற இயற்கை விவசாயம் நடக்கும் இடமாக மாறியது. இன்று 66 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் சிக்கிமின் இயற்கை விவசாய மிஷனின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.சிக்கிம் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறியது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. ஆரம்ப நாட்களில் விளைச்சல் குறைந்தது விவசாயிகளின் மத்தியில் கவலையை உண்டாக்கியது. இயற்கையாக விளைந்த பொருட்களை விற்பனை செய்ய முடியுமா என்று சந்தேகமும் எழுந்தது.
முக்கியமாக விலை நிர்ணயம் செய்யத் திணறினார்கள். காரணம், விலை அதிகமாக வைத்துவிட்டால் மக்கள் வாங்க மாட்டார்கள் என்பது விவசாயிகளுக்கு ஒரு பிரச்னையாக மாறிவிட்டது.
அதனால் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த பல விவசாயிகள், திரும்பவும் வழக்கமான விவசாயத்துக்குத் திரும்பிப்போக முடிவு செய்தனர். சிக்கிம் ஆர்கானிக் மிஷன் தலையிட்டு, அவர்களை இயற்கை விவசாயத்திலேயே இருக்க வைத்தது.
இன்று அந்த விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் நிபுணர்களாக மாறிவிட்டதோடு, நல்ல லாபத்தையும் பெற்று வருகின்றனர். முக்கியமாக அவர்களின் சூழலும், மண்ணும், வாழ்க்கை முறையும் முன்பைவிட, பல மடங்கு ஆரோக்கியமாக மாறிவிட்டது. மட்டுமல்ல, சிக்கிம் அரசும் விவசாயிகளுக்குக் கைகொடுத்தது. ஆம்; இயற்கை விவசாயத்துக்கு மாறுபவர்களுக்கு பல மானியங்களை வழங்கியது. இதுபோக இயற்கை விவசாயம் செய்வதற்காக உபகரணங்களையும் இலவசமாக கொடுத்தது; விளைச்சலை சந்தைப்படுத்தவும் உதவியது. ‘அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் ஏஜென்சி’ எனும் இன்ஸ்டிடியூட்டும் இயற்கை விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தந்ததோடு, அவர்களுக்கு வழிகாட்டவும் செய்தது.
தவிர, விவசாய நிலத்திலிருந்து சந்தை வரைக்கும் புதிய சாலைகள் போடப்பட்டன. விளைச்சலைப் பாதுகாக்க குடோன்கள் உருவாக்கப்பட்டன. விவசாய நிலத்துக்கே வந்து விளைச்சலைச் சேகரித்து, சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டன. அப்புறமென்ன... சிக்கிம் விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் இயற்கை விவசாயத்தை செய்தனர்.
நூறு சதவீதம் இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக சிக்கிம் மாறுவதற்கு பதினைந்து வருடங்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஆனால், இயற்கை விவசாயத்தால் மாநிலத்துக்குக் கிடைத்த பலன்கள் ஏராளம். ஆம்; மண்ணின் ஆரோக்கியம் மேம்பட்டது. தண்ணீர் வளம் பெருகியதோடு, தூய்மையாகவும் மாறியது. காற்றின் தன்மையும், தூய்மையும் உயர்ந்தது.
காணாமல் போன பல பறவைகளும், பூச்சிகளும் விவசாய நிலங்களுக்குத் திரும்பி வந்தன. ஆரோக்கியமான, அழகான சூழல் உருவாகியது. இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்கள் அதிக லாபத்தைக் கொடுத்ததால், விவசாயிகளின் வருமானமும் உயர்ந்தது.
சிக்கிமில் இயற்கை விவசாயம் நடக்கும் இடங்கள் எல்லாம் சுற்றுலாத் தலங்களாக மாறின. ஆம்; சிக்கிமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்தது. தவிர, சிக்கிமின் பாடத் திட்டத்திலும் இயற்கை விவசாயம் சேர்க்கப்பட்டுவிட்டது. இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக பயிற்சி மையங்களும் சிக்கிமில் உருவாகியுள்ளன. சிக்கிமின் இயற்கை விவசாயம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்; வெளிநாட்டைச் சேர்ந்த பல விவசாய நிபுணர்கள் அடிக்கடி சிக்கிமிற்கு வருகை தந்து, இயற்கை விவசாயத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு செல்கின்றனர்.
த.சக்திவேல்
|