தேர்தல் பத்திரங்களின் கதை! அது என்ன தேர்தல் பத்திரம்?



2017 - 18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூபாய் ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூபாய் ஒரு லட்சம், ரூ.10 லட்சம், ரூபாய் ஒரு கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை.
ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு இந்த பத்திரங்களை வாங்கலாம். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம்.

தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள்தான். அதற்குள் கட்சிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே இந்தப் பத்திரங்களைப் பயன்படுத்த முடியும்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் யார் நன்கொடை அளித்தது என்பதை வெளியில் சொல்லத் தேவையில்லை. 
இது கட்சிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாகக் கைமாறினால், கருப்புப் பணத்தை தடுக்கலாம் என்பதால் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்தே இதற்கு எதிர்ப்புதான். ‘வெளிப்படைத் தன்மை இல்லை; யார், எதற்காக, எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கடுமையாக இந்தத் திட்டம் எதிர்க்கப்பட்டது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது’ என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது. வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

முதல் மனுவை ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான ‘Common Cause’ இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018ல் தாக்கல் செய்தது.இந்த வழக்கு ஆறு ஆண்டுகளாக நடந்து பல கட்டங்களைத் தாண்டி சென்ற வாரம் முடிவுக்கு வந்தது.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. 

‘தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும் நிலையில், தேர்தல் நிதி தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக இருப்பது அவசியம். இதனை வெளிப்படையாகத் தர மறுப்பது அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கடந்த 2019ம் ஆண்டு முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும. இந்தத் தகவலை வரும் மார்ச் 13ம் தேதிக்குள் தங்களின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது இந்திய நீதிமன்ற வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். ‘நரேந்திர மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றாக இது உங்கள் முன் உள்ளது. தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான தளமாக பாஜக மாற்றியுள்ளது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது...’ என மகிழ்கிறார் ராகுல் காந்தி.

‘தேர்தல் பத்திரம் திட்டத்தை துவங்கியபோதே அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மோடி அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்வோம் என்று 2019ல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. கருப்புப் பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட்டத்தை சட்டவிரோதம் என்று கூறி, வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம்...’ என்கிறார் மல்லிகார்ஜுன கார்கே.

தமிழ்நாட்டு முதல்வரான  மு.க.ஸ்டாலின், ‘தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும். இந்தத் தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது. இந்த சிஸ்டம் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளது...’ என குறிப்பிட்டுள்ளார்.

‘இந்தத் திட்டங்களுக்கு இதுபோன்று தடை விதித்தால்தான் எங்களைப் போன்றவர்கள் கட்சி நடத்த முடியும். அதிமுக இந்தத் தீர்ப்பை வரவேற்கிறது...’ எனச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எல்லாம் சரி... தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்ற கட்சிகள் எவை எவை?

பாஜக    ரூ.6,566 கோடி.
காங்கிரஸ்    ரூ.1,123 கோடி.
திரிணமூல் காங்கிரஸ்    ரூ.1093 கோடி
பிஜு ஜனதா தளம்    ரூ.774 கோடி.
திமுக    ரூ.616 கோடி.
பிஆர்எஸ்    ரூ.384 கோடி.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்    ரூ.382 கோடி.
தெலுங்கு தேசம்    ரூ.147 கோடி.
சிவசேனை    ரூ.101 கோடி.
ஆம் ஆத்மி    ரூ.94 கோடி.
தேசியவாத காங்கிரஸ்    ரூ.64 கோடி.
அதிமுக    ரூ.6 கோடி.

ஓகே. கட்சிகள் இதுவரை பெற்ற ரூ.16,518 கோடி தேர்தல் பத்திரங்கள் என்ன ஆகும்?

பிப்ரவரி 5ம் தேதியன்று நிதி அமைச்சகம் 30 கட்டங்களாக இதுவரை ரூ.16,518 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இவற்றில் பெரும்பாலான பத்திரங்கள் ஏற்கெனவே பணமாக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது.

இந்தத் திட்டமே தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும்போது, அதன் மூலம் கிடைத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது.‘பணமாக மாற்றப்படாத பத்திரங்களை திருப்பித் தருமாறு உச்சநீதிமன்றம் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது நியாயமாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே செலவழித்த பணத்தை திருப்பித் தருவது கட்சிகளுக்குக் கடினமாக இருக்கும்...’ என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

ஆனால், சீதாராம் யெச்சூரி ‘இந்தத் திட்டமே அரசமைப்பிற்கு விரோதமானது என்பதால் பணத்தை திருப்பித் தருவதுதான் சரியாக இருக்கும். ஆனால், அரசியல் கட்சிகளுக்கு இந்தப் பணத்தை நன்கொடையாக வழங்கிய நிறுவனங்களுக்கு மீண்டும் இந்தப் பணம் தரப்படக்கூடாது. இந்தப் பணத்தை அரசு கணக்கில் டெபாசிட் செய்து, தேர்தலுக்கு அரசு நிதி வழங்கும் திட்டத்தைத் தொடங்க வேண்டும்.இப்போது வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்சிகளின் செலவுகளுக்கு வரம்பு இல்லை. எனவே, தேர்தலின்போது வேட்பாளர் செலவு செய்யவில்லை, கட்சி செய்தது எனக் கூறி, கட்சிகள் தப்பித்து விடுகின்றன. இதன் காரணமாக, தில்லுமுல்லு ஏற்படுகிறது. கட்சிகளின் செலவுகளுக்கு ஒரு வரம்பு இருக்கும்போது, கட்சிகள் அதற்கு ஒரு கணக்கைக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது வெளிப்படைத்தன்மை இருக்கும்’ என்கிறார் சீதாராம் யெச்சூரி.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தேர்தல் பத்திரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், இந்தத் திட்டங்களால் நடந்ததாகக் கூறப்படும் ஊழலின் அடிப்பகுதிக்குச் சென்று உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனப் பல நிபுணர்கள் கருதுகின்றனர்.‘லாபம் ஈட்டாமல் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுக்க விரும்பிய ஷெல் நிறுவனங்கள் எவை, எதற்காகக் கொடுத்தனர்? யார் பணம் கொடுத்தார்கள்? அதனால் அவர்களுக்கு என்ன சலுகைகள் கிடைத்தன? இவற்றைக் கண்டறிய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

போலி நிறுவனங்கள் கொடுக்கும் பணம் தங்களுக்கான சில வேலைகளை முடித்துக் கொடுப்பதற்காக வழங்கப்பட்டது. ஒரு ரூபாய் கொடுத்தால் ஐந்து ரூபாய் திரும்பக் கிடைக்கும் என்ற முதலீடாக அரசியல்வாதிக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். எனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக என்ன கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்க்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது அரசியல் நிதியைப் பற்றியது மட்டுமல்ல, ஊழலைப் பற்றியதும் கூட. ஊழலின் நாடித் துடிப்பை நிறுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு. கட்சிகளுக்கு நிதி பெறும் பல்வேறு வழிகளில் தேர்தல் பத்திரங்களும் ஒன்று. தேர்தல் பத்திரம் தவிர வேறு வழிகளில் கிடைத்த பணத்துக்கு, உச்சநீதிமன்ற உத்தரவால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்களும் பொருளாதார நிபுணர்களும்.

கட்சிகளுக்கு நிதி கிடைக்கும் சட்டவிரோதமான அனைத்து வழிகளையும் மூடிவிட்டு முழு வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் ஒரு சீர்திருத்த முடிவை வழங்க உச்சநீதிமன்றத்திற்கு இதுவொரு வாய்ப்பாக இருக்கும் என்பது அவர்களது கருத்து. 

அதேநேரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையான வெளிப்படைத்தன்மை குறித்துப் பேசவில்லை... நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை ரத்து செய்வதோடு நிறுத்திக் கொண்டது. தேர்தல் பத்திரம் ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. ஆனால், நமது தேர்தல் முறையை மாற்ற இது போதுமானதாக இல்லை...’ என அழுத்தமாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஜான்சி