நியூஸ் சாண்ட்விச்
சோனு சூட்டுக்கு ஐநா விருது!
கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் 22ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்கு வரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் நடிகர் சோனு சூட். அதேபோல, வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மாணவர்களை சொந்த செலவில் இந்தியாவுக்கு விமானத்தில் அழைத்து வந்ததோடு, டுவிட்டரில் பல்வேறு கோரிக்கை வைக்கும் ஏழைகளுக்கு உதவியும் வருகிறார்.
மனிதாபிமானமிக்க சோனி சூட்டின் மகுடத்தில் வைரத்தை இப்பொழுது ஐநா பொறித்துள்ளது. ஆம். ஐநா மேம்பாட்டுத் திட்டத்தின் ‘சிறப்பு மனிதநேய விருது’ அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா, ஏஞ்சலினா ஜோலி, டேவிட் பெக்காம், லியோனார்டோ டிகாப்ரியோ ஆகிய உலகப் புகழ் பெற்றவர்கள் பெற்றிருக்கும் இவ்விருதினை சோனு சூட்டும் இப்போது பெற்றுள்ளார்.
நடமாடும் ட்ராம் நூலகம்!
மேற்கு வங்க போக்குவரத்துக் கழகத்தால் ட்ராம் நூலகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணித்துக் கொண்டே புத்தகங்களைப் படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இ- புத்தகங்களை படிப்பதற்காகவும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணையத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்வதற்காகவும் இலவச இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் அதிகம் இருக்கும் பகுதிகள் வழியாக இந்த ட்ராம் பயணிக்கும். நடமாடும் இந்த நூலகத்தில் புத்தகங்கள், பத்திரிகைகள், அரசுத் தேர்வுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள் என அனைத்தும் இருக்கும்.
ஷ்யாம்பஜாரில் இருந்து எஸ்பிளனேடு வரை 4.5 கி.மீ தூரம் இந்த நூலகம் இயங்கும். இந்த வழித்தடத்தில் சுமார் 30 கல்வி நிலையங்கள் இருக்கின்றன. வருங்காலத்தில் புத்தக வெளியீட்டு விழாக்களையும் ட்ராமில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
75 ஆண்டுகளாக கட்டணமில்லா கல்வி!
ஒடிசாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நந்தா பிரஸ்தி என்ற முதியவருக்கு ஆசிரியர் பணி என்றால் மிகவும் விருப்பம். தனது கிராமத்தில் ஏராளமானோருக்கு படிப்பறிவு இல்லாததால் கவலையடைந்தவர், அதிலிருந்து மீள அவர்களுக்கு, தானே கற்பிக்க முன்வந்தார். யெஸ். கடந்த 75 ஆண்டுகளாக குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் இரவு நேரத்தில் இலவசமாக பாடம் நடத்துகிறார். மர நிழலிலும், தெருத் திண்ணைகளிலுமே நடத்துகிறார்!தேவையான வசதிகள் அமைத்துத் தருவதாக கிராமப் பஞ்சாயத்து கூறினாலும், இயற்கையோடு இணைந்து கற்றுக் கொடுக்கும் பாணியையே அவர் விரும்புகிறார்!
லேப்டாப்புக்கு அப்டேட்டான 90 வயது பாட்டி!
கேரளாவில் 1930ல் பிறந்த மேரி தாமசுக்கு, தினமும் காலையில் நாளிதழ் படித்து நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வதில் விருப்பம். ஆனால், அவர் ஆர்வத்திற்கு கொரோனா வடிவில் தடை ஏற்பட்டது. நாளிதழ் மூலமாகவும் கொரோனா பரவும் என்ற தவறான கருத்து காரணமாக, அதை வாங்குவதை மேரி தாமஸ் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர்.
இதனால், செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்த மேரி தாமசுக்கு, அவரது பேரன் அருண் தாமஸ் உதவ முன்வந்தார். லேப்டாப்பை பயன்படுத்தும் முறையினை ஒரே மாதத்தில் கற்றுக்கொண்ட பாட்டி இப்போது இணைய வசதி மூலம் ‘இ-பேப்பர்’ எனப்படும் மின்னணு செய்தித்தாள்களை படிக்கத் துவங்கி உள்ளார்!
தொகுப்பு: அரசு
|