கவிதை வனம்



எச்சரிக்கை

தர்கா வாசலில் யானை
முடியை விலைக்குக் கேட்டு
பாகனைச் சூழ்ந்திருந்தது
வட மாநில சுற்றுலாக் கூட்டம்
வாலிலிருந்து ஒவ்வொரு
முடியாகப் பிடுங்கி
பணம் பண்ணிக்
கொண்டிருக்கிறான் பாகன்
அது அவனுக்குக்
கொஞ்சம் அபினாகும்
மிச்சமிருந்தால்
படிப்படியாக
ஃபுல், ஆஃப், குவார்ட்டர்
எனவும் மாறும்
மறுநாள் வசூலில்
தன் தும்பிக்கையை
உயர்த்தவேயில்லை யானை
பாகன்தான் யாசகனாகி
கை நீட்டிக்கொண்டிருக்கிறான்
நீங்கள் யானைமுடி
மோதிரத்துடனோ
தங்கக் காப்புடனோ
தர்காவிற்கு வந்திருந்தால்
பாகன் அருகில்
சென்றுவிடாதீர்கள்
வலியை உங்களிடம்
காட்டிவிடக்கூடும் யானை.

- வலங்கைமான் நூர்தீன்


குளியல்

சாக்கடைகள் கடந்து
வந்த ஆறு
கடலைச் சேர்ந்தவுடன்
முதல் வேலையாக
உப்பு நீரில்
உடல் தேய்த்து
ஒரு குளியல் போடுகிறது.

- பா.ரமேஷ்