மண் வளமும் பயிர் ஊட்டமும்!



ஹோம் அக்ரி 15

மன்னர் மன்னன்

வெ ற்றிகரமான வேளாண்மைக்கு மண் வளத்தைப் பற்றியும், பயிர் ஊட்டத்தைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். வளமான மண் என்பது பயிருக்குத் தேவையான தாது சத்துக்களை சரியான அளவிலும், சரியான சமயத்திலும் தரக்கூடியது. பழங்காலத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே காடுகளை அழித்தே விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.  

முன்னமே பார்த்தபடி காடுகளில் இருக்கும் மண் மிகவும் வளமானதாகவும், உடனடி பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருக்கும். இப்போதும் இந்த வழக்கம் வட  கிழக்கு மாநிலங்களிலும், தென்னிந்தியாவின் பல மலைப்பிரதேசங்களிலும் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப் படுகிறது. பயிர்களுக்குத் தேவையான ஊட்டங்களை அவசியமானவை, நற்பயன் தருபவை என்று இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அவசியமானவை என்னும்போது, ஒரு செடி இந்த ஊட்டங்கள் இல்லாமல் வாழமுடியாது. இந்த அவசிய ஊட்டங்களை வேறு பொருட்களால் சரி செய்ய முடியாது. நற்பயன் தரக்கூடிய ஊட்டங்கள் இல்லாமல்  ஒரு செடி வளர முடியும், ஆனால், முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்க முடியாது; அது தரும் காய் / கனி / தானியங்களும் முழுப்பலன் தரக்கூடியவையாக  இருக்காது. 20 வகையான தாதுப்பொருட்கள் ஒரு தாவர வளர்ச்சிக்கு அவசியம். இதில் மிக அதிகமாகத் தேவைப்படும் கார்பன் (C), ஹைட்ரஜன் (H), ஆக்ஸிஜன் (O) இவை மூன்றும் காற்றிலிருந்தும், நீரிலிருந்தும் கிடைக்கின்றன.

அடுத்தது பேரூட்டங்கள் என்று அழைக்கப்படும் தழைச்சத்து என்று அழைக்கப்படும் நைட்ரஜன் (N), மணிச்சத்து என்று அழைக்கப்படும் பாஸ்
பரஸ் (P), சாம்பல் சத்து என்று அழைக்கப்படும் பொட்டாசியம் (K), சுண்ணாம்புச் சத்து எனப்படும் கால்சியம் (Ca), மக்னீசியம் (Mg), கந்தகம் எனப்படும் சல்பர் (S). இவை தவிர சில நுண்ணூட்டங்களும் செடிகளுக்கு அவசியம். போரான் (B), குளோரின் (Cl), தாமிரம் (Cu), இரும்பு (Fe), மாங்கனீஸ் (Mn), சோடியம் (Na), துத்த நாகம் என்று அழைக்கப்படும் ஜிங்க் (Zn), மாலிப்டினம் (Mo), மற்றும் நிக்கல் (Ni). சிலிகான் (Si), மற்றும் கோபால்ட் (Co) போன்ற சில நுண்ணூட்டங்கள் அவசியமானவை அல்ல என்றாலும் நற்பலன் தரக்கூடியவை.

இந்த ஊட்டங்கள் எதற்குத் தேவையானவை, எங்கிருந்து இந்த ஊட்டங்களைப் பெறலாம், இவை குறைவதாலோ, மிகுவதாலோ என்ன பாதிப்புகள் ஏற்படும்,  இவற்றை இயற்கையாக எப்படிப் பெறலாம் போன்ற விபரங்களையும் நாம் தெரிந்து கொள்வதன் மூலம் சரியான ஊட்டத்தைத் தரமுடியும். தழைச்சத்து என்கிற நைட்ரஜன் எல்லாவற்றையும் விட அதிகமான முக்கியத்துவத்தை விவசாயிகளிடம் பெறுகிறது. தழைச்சத்து செடியின் புரதச்சத்து,  ஹார்மோன்கள், பச்சையம், வைட்டமின்கள், என்சைம்கள்... என அனைத்துக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. செடிகளின் கிளைகளும் இலைகளும் வளர இது அவசியம். குறைபாடு இருக்கும் போது இலைகள் மஞ்சளாகும், வளர்ச்சி பாதிக்கும், மகசூல் குறையும். தேவைக்கு அதிகமான தழைச்சத்து பூப்பதையும், காய்ப்பதையும் தள்ளிப்போடும்.

ஆக, பார்க்க பசுமையாக இருப்பதால் மட்டுமே தாவரம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைக்கக் கூடாது. அளவுக்கு அதிகமான தழை வளர்ச்சி, தண்டு / கிளை  வளர்ச்சி உற்பத்தியைப் பாதிக்கும். பல பூச்சி களைக் கவரும். வியாதிகளை வரவழைக்கும். அளவுக்கு அதிகமான உடல் எடையும், சதையும் எப்படி நமக்கு பாதிப்பு ஏற்படுத்துமோ அப்படித்தான் அளவுக்கு அதிக மான தழைச்சத்தும் செடிகளுக்கு Obesity பிரச்னையை ஏற்படுத்தும். இந்தத் தழைச்சத்தை இரசாயன முறையில் நாம் பெரும்பாலும் யூரியா மூலமாகப் பெறுகிறோம். இதுதவிர DAP, அம்மோனியா உரங்கள் போன்றவற்றாலும் நாம் தழைச்சத்தை அளிக்கலாம். இயற்கை முறையில் தொழு உரம், பசுந்தழை உரம், மண்புழு உரம், மழைநீர் போன்றவற்றால் நாம் நைட்ரஜனைப் பெறலாம். ஆனால், யூரியா போன்ற எந்த வெளி இடுபொருளுமே இல்லாமல் தழைச்சத்தை செடிகள் தாமாகவே காற்றிலிருந்து பெற்றுக் கொள்ளச் செய்வதுதான் சிறந்த முறை. இது செலவு இல்லாத முறை. இதை எப்படிச் செய்வது?  
        
 (வளரும்)

Q&A

பப்பாளி மரத்துக்கு கிளைகள் உண்டா? பப்பாளியில் ஆண்மரம் என்பது என்ன?
- பாஷா, மதுரை.

பப்பாளி மரத்துக்கு இயற்கையில் கிளைகள் கிடையாது. மரம் வெட்டுப்படும் போதோ அல்லது ஏதாவது பாதிப்பின்போதோ கிளைகள் உருவாகும். எல்லா  கிளைகளிலும் காய்க்கும். ஆண் மரம் என்பது பூக்கும் மரம். இதில் காய்கள் வராது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கைக்கு அவசியமானவை. 20 மரங்களுக்கு ஓர் ஆண் மரம் போதும். மீதி மரங்களை அழித்து விடலாம்.

2

நாங்கள் அருகிலுள்ள இயற்கை அங்காடியிலிருந்து ஆர்கானிக் அரிசி வாங்கி உண்கிறோம். அது இயற்கையாகத்தான் வளர்க்கப்பட்டது என்று எப்படித்  தெரிந்துகொள்வது?
- அசோகன், தேரழுந்தூர்.

அரிசியின் சுவை மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ளலாம். அரிசியை வேகவைத்து இறக்குமுன் வரக்கூடிய வாசத்தில் நன்றாக அறியலாம். மற்ற ஓர்  எளிமையான வழி இந்த சாதத்தில் ‘பழையது’ சாப்பிடுவது. முதல்நாள் நீரிட்டு, மறுநாள் காலையில் உண்ணும்போது நன்கு புளித்து சுவையாக இருந்தால் அது நல்ல இயற்கை அரிசி. ஆய்வக பரிசோதனையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் மற்ற பயன்பாடுகளைக் கண்டறியலாம். ஆனால், யூரியா, DAP போன்ற பேரூட்டங்களைப் பயன்படுத்தியிருந்தால் தெரியாது.

3

வீட்டில் வெற்றிலை வளர்க்க முடியுமா? தாம்பூலம் தவிர்த்து இதை எப்படி பயன்படுத்தலாம்?
- சிவபாலன், சீர்காழி.

வீட்டில் வெற்றிலையை வளர்க்க முடியும். நல்ல வண்டல் மண் இதற்கு உகந்தது. பெரும்பாலான சமயங்களில் வெற்றிலை நாற்றை நர்சரியிலிருந்து வாங்கி  வந்து வீட்டில் நட்ட சில நாட்களில் வாடிவிடும். எனவே 4 - 5 நாற்றுகளை வாங்கி வரவேண்டும். தோட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடவேண்டும். நடும் குழிகள் ஒரு வாரத்துக்கு முன்னதாக தோண்டப்பட்டவையாக இருக்கவேண்டும். குழியின் சூடு வெற்றிலைக்கு ஆகாது. எனவே, கொஞ்சம் நிழல் இருக்கும் பகுதியில், மரம் போன்று ஏதேனும் ஆதாரம் இருக்கும் பகுதியாகப் பார்த்து நட வேண்டும். ஒரு கொடி வளர்ந்துவிட்டால் அது பல குடும்பங்களுக்குப் போதுமானதாக இருக்கும். வெற்றிலைச்சாறு சளியைக் கட்டுப்படுத்தக் கூடியது. சாறை தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுப்பதால் சளி குறையும். பிறந்த குழந்தைகளுக்கு சளித் தொந்தரவைக் குறைக்க அனலில் வாட்டி சூடாக நெஞ்சிலும், முதுகிலும் வைப்பதால் சளி குறையும். இட்லி தோசை மாவை புளிக்காமல் அப்படியே வைக்க ஒரு வெற்றிலையைப் போட்டு வைக்கலாம். இதில் இருக்கக்கூடிய ‘phenol’ ஒரு சிறந்த கிருமிநாசினி. இதன் சாறு பல் ஈறுகளின் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தும்.

4

நாங்கள் வீட்டில் முட்டைக்காக நாட்டுக் கோழி வளர்க்க விரும்புகிறோம். வாங்கும்போது நாட்டுக் கோழியை ப்ராய்லர் கோழியிலிருந்து எப்படி இனம் கண்டறிவது?
- அல்லிமலர் வீரமணி, சேலம்.

‘எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே...’ என்ற புலமைப் பித்தன்  வரிகளின்படி, எல்லா கோழி வகைகளும் நல்லவையே. அவற்றை வளர்க்கும் விதத்தில்தான் பலன் வேறுபடுகிறது. தொழில் முறையில் அடைத்து வளர்க்கப்படும் கோழிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் ஆன்டிபயாட்டிக், ரசாயன உணவுகள் போன்றவை இருப்பதாலும்; வருத்தத்தோடும், எரிச்சலோடும், கோபத்தோடும் கோழி முட்டையிடுவதாலும் அதன் தரம் சரியில்லாமலிருக்கிறது. வீட்டில் வளர்க்கும்போது கோழிகள் சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாலும்; நாம் நல்ல தீவனம் தருவதாலும் முட்டை ஆரோக்கிமானதாக இருக்கின்றன.நீங்கள் சிறுவிடை, பெருவிடை, அசீல், நாமக்கல் 1 போன்ற வகைகளை வளர்க்கலாம்.