பிளாட்பார திருமணம்!
செய்தி: (அதிக பரபரப்பு இல்லாத) ரயில் நிலையங்களில் திருமணச் சடங்குகளை நடத்தி வருவாய் பெற ரயில்வே துறை யோசனை! இந்தத் திருமணங்கள் ரயில்வே விதிமுறைகளைப் பின்பற்றித்தான் நடத்தப்பட வேண்டும் என்ற ரூல் வந்தால் பின்விளைவுகள் எப்படியிருக்கும்? ஜாலி கற்பனை!
சிக்னல்
ரயில் நிலைய திருமணம் என்பதால் கெட்டி மேளத்துக்கு பதிலாக புரோகிதர் பச்சைக் கொடியை அசைத்து, விசில் ஊதிய பிறகே தாலி கட்டப்படும்!
முன்பதிவு
முன்பதிவு இல்லாத அனைத்து ஜோடிகளுக்கும் ஒரே பிளாட்பாரத்தில் கூட்டுக் கல்யாணமும், முன்பதிவு செய்த ஜோடிகளுக்கு தனித்தனி பிளாட்பாரமும் திருமணத்துக்கு ஒதுக்கப்படும்! ‘நீட்’ முறைப்படி சென்னை ஜோடிகளுக்கு ராஜஸ்தானில் உள்ள ரயில் நிலையத்தில்தான் இடம் ஒதுக்கப்படும். ரயில்வே துறை வழக்கப்படி முதியோருக்கு கட்டணச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்பதால் முதிர்கன்னி / கண்ணன்கள் நீதி கேட்டு போராடலாம். ஆறு மாதங்களுக்கு முன்பே இடம் பதிவு செய்யாதவர்களுக்கு அதிக கட்டணத்தில் ‘தட்கல்’ முறையில் இடம் ஒதுக்கப்படும்!
அரசியல்
அரசியல் தலைவர்கள் தங்கள் ரயில் மறியல் போராட்டங்களை ‘டூ இன் ஒன்’ குறிக்கோளோடு முகூர்த்த நாட்களில்தான் அரங்கேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ரயில் நிலையத்தில் நடக்கும் திருமணத்தில் ஆஜராகி அரசியல் சொற்பொழிவு நிகழ்த்திவிட்டு ரயில் மறியலும் செய்து விட்டால்... ஒரே மொய்யில் இரண்டு கொய்யா!
வரி
திருமணத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு செலுத்தப்படும் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி உண்டு. தவிர ‘திருமணம் என்பதும் ஒரு வகை சேவைதான். அந்த பந்தத்தில் கணவன், மனைவிக்கு சேவை செய்கிறான்’ என்பதால் கூடவே சேவை வரியும் விதிக்கப்படும். இது அளவில்லா சேவை என்பதால் அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்படும்!
செக்கிங் இன்ஸ்பெக்டர்
திருமண நிகழ்வில் குழுமியிருப்பவர்களில் சிலர் பெண் வீடு அல்லது மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை ஒரிஜினல் ஐடியோடு ஒப்பிட்டு வெளியேற்ற செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படலாம். வந்திருப்பவர்களின் பர்ஸில் மொய்ப் பணம் உள்ளதா என்றும் அவர் செக் செய்வார். இல்லாதவர்களிடம் அபராதத் தொகை வசூலிக்கப்படும்! பக்கத்தில் இருப்பவர்களிடம் கடன் வாங்கியாவது அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் ரயில்வே விதிப்படி சிறைத் தண்டனைதான்!
அறிவிப்புகள்
மொய்யாளர்களின் கனிவான கவனத்துக்கு... எட்டாம் நம்பர் பிளாட்பார ஜோடி சற்று கால தாமதமாக நான்காம் நம்பர் பிளாட்பாரத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! பெட்ரோல் விற்கும் விலையில் ஸ்கூட்டரை உதைத்து மேய்க்க முடியாது என்பதால் நீராவி எஞ்சினில் ஓடும் சரக்கு ரயில் வண்டி சீதனமாக வழங்கப்பட வேண்டும் என்ற பிள்ளை வீட்டாரின் திடீர் பிடிவாதம் பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறது.
இதை முடித்துக்கொண்டு வர பெண் வீட்டாருக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை. எனவேதான் இந்தக் காலதாமதம்! எனவே, மொய்யாளர்கள் அவசரப்பட்டு அடுத்த பிளாட்பார்மில் நிற்கும் ரயிலில் ஏறவேண்டாம். ஏனெனில், உங்கள் மொய்ப் பணத்தை வைத்துத்தான் இந்தக் கல்யாண மஹாலுக்கு வாடகை கட்டவேண்டும்!
எஸ்.ராமன்
|