காசநோய்க்கு பாசம் அதிகம்!



-டாக்டர் கு.கணேசன்

நோய்கள் என்றைக்குமே ஏழை, பணக்காரன் என்று தகுதி பார்த்து வருவதில்லை. ஆனாலும், வறுமையும், ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள முடியாத நிலைமையும், ஏழைகளுக்கு சில நோய்களை வரவழைத்துவிடுகின்றன. இந்த வகையில் முக்கியமான ஒரு நோய்,  ‘டி.பி’ (Tuberculosis) எனப்படும் காசநோய். உலகம் முழுக்க ஒவ்வொரு வருடமும் ஒரு கோடிப் பேர் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 30 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் 22 லட்சம் பேர் டி.பி. லிஸ்ட்டில் இருக்கிறார்கள். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஒரு டி.பி. நோயாளி வருஷத்துக்கு சுமார் 15 பேருக்கு நோயைப் பரப்புகிறார். தமிழகத்தில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேல் டி.பி. நோயாளிகள். இத்தனை கொடுமையான நோயைப் பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் இல்லை என்பதுதான் வருத்தம்.

‘மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் செட்டிலாகும்போது டி.பி. வருகிறது. வழக்கத்தில், காற்றோட்டம் இல்லாத வீடுகள், மக்கள்நெரிசல்மிக்க இடங்கள், பஞ்சாலை, நூற்பாலை, சிமென்ட் ஆலை, பீடித்தொழில் செய்யும் இடங்கள், சுரங்கங்கள், ரப்பர் தோட்டம் போன்ற இடங்களில் இந்தக் கிருமிகள் அங்கிங்கெனாதபடி அலைந்து கொண்டிருக்கும். குழந்தை முதல் கிழவனார் வரை யாருக்கு வேண்டுமானாலும் இது வரலாம். நீரிழிவு/எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்... இவர்கள் மீது காசத்துக்குப் பாசம் அதிகம்.

‘நாட்பட்ட இருமலா? அருகில் உள்ள மருத்துவமனையை அணுகவும். அது காசநோயாக இருக்கலாம்!’ எனும் அறிவிப்புப் பலகைகளைப் பார்த்திருப்பீர்கள். டி.பி. என்றாலே அது நுரையீரலோடு தொடர்புடையது என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இது உடலில் பல உறுப்புகளைப் பாதிக்கக் கூடியது. (பார்க்க: பெட்டிச் செய்தி) முதன்மையாகவும் முக்கியமாகவும் பாதிக்கப்படுவது நுரையீரல்கள்!

டி.பி. கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். அவர் தும்மினால், இருமினால், மூக்கைச் சிந்தினால், சளியைக் காறித் துப்பினால் கிருமிகள் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இவை ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே விரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் பரவும். நோயாளியின் ஆடை, கைக்குட்டை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் கிருமிகள் எளிதாகக் கடத்தப்படும்.

அப்படியானால் அசுத்தக் காற்றைச் சுவாசிக்கும் எல்லோருக்குமே டி.பி. வந்துவிடுமா? இல்லை! காற்றோடு கலந்து வரும் டி.பி. கிருமி நுரையீரலை அடைந்ததும், அங்கே வடிகட்டப்பட்டு, உள்ளேயே உட்கார்ந்துகொள்கிறது. கிருமியைச் சுமப்பவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் வரை அது அவரை ஒன்றுமே செய்வதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து ஆரோக்கியம் பாதிக்கிறபோதுதான் அது வேலையைத் தொடங்குகிறது. உள்ளேயே வளர்ந்து திசுக்களைத் தின்கிறது. டி.பி. மொட்டு விடுகிறது.

இதை எப்படித் தெரிந்து கொள்வது?
முதலாவதும் முக்கியமானதுமான அறிகுறி இருமல். இது மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால், அது டி.பி.யின் வெளிப்பாடாக இருக்கலாம். மாலையிலும் இரவிலும் மட்டும் காய்ச்சல் வருவது அடுத்த கட்ட அறிகுறி. இதைத் தொடர்ந்து நெஞ்சில் சளி கட்டும். சளியில் ரத்தம் வரும். பசிக்காது. உடல் உருகும். எந்நேரமும் சோர்வாக இருக்கும். மூச்சுத் திணறும். இவற்றில் ஏதாவது ஒரு பாதிப்பு இருந்தாலும், டி.பி.யாக இருக்கக்கூடும். உடனே அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

என்ன பரிசோதனைகள்?
ரத்தம், சளி் பரிசோதனைகள், மேண்டோ டெஸ்ட், மார்பு எக்ஸ்ரே/சிடி ஸ்கேன் ஆகியவை டி.பி.யை அறிய உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. சளியில் டி.பி. கிருமிகள் இருந்தால், 100 சதவீதம் டி.பி. உறுதி. எவ்வளவு சீக்கிரம் டி.பி.யைக் கண்டுபிடித்து சிகிச்சையை ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் நோய் குணமாகும். அடுத்தவர்களுக்கும் பரவாது. ஆனால், நம் நாட்டில் அதுதான் சிரமம். இன்றைக்கும் டி.பி. குறித்து பலவித மூடநம்பிக்கைகள் உலவுகின்றன.

என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணுக்கு 20 வயது இருக்கும். ‘இருமல், சளித் தொல்லை, உடல் மெலிகிறது’ என்று அழைத்து வந்தார்கள். பரிசோதித்துவிட்டு டி.பி. என்று சொன்னேன். உடனே அவள் பெற்றோர், “சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள், டாக்டர். எங்கள் பரம்பரையில் யாருக்கும் டி.பி. வந்ததில்லை” என்றனர். அவர்களைப் பொறுத்தவரை டி.பி. என்பது பரம்பரை நோய். குடும்பத்தில் யாருக்காவது டி.பி. இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு வரும் என்கிற தப்புக் கணக்கு. எவ்வளவோ சொல்லியும் அவர்கள் அதை மாற்றிக் கொள்ளவில்லை. என்னிடம் சிகிச்சை பெறவுமில்லை.

அடுத்த சில மாதங்களில் அதே பெண்ணை அழைத்துக்கொண்டு மீண்டும் என்னிடம் வந்தனர். அவள் கழுத்தில் தொங்கிய மெருகு குலையாத தாலி, திருமணமாகி சில மாதங்களே ஆகியிருப்பதைச் சொன்னது. சந்தோஷம் படர வேண்டிய அவள் முகத்தில் கவலை. பெற்றோர் உடைந்துபோன குரலில் சொன்னார்கள்... “டாக்டர், டி.பி. இருக்கிறதா நீங்க சொன்னதை நாங்க நம்பல. நாட்டு வைத்தியம் பார்த்தோம். கல்யாணமும் பண்ணி வச்சிட்டோம். போன வாரம் இவளுக்கு சளியிலே ரத்தம் வந்திருக்கு. ‘டி.பி.யை மறைச்சி கல்யாணம் பண்ணி வெச்சிருக்கீங்களே?’ன்னு பெண்ணை வீட்டுக்குத் துரத்திட்டார் மாப்பிள்ளை.

எப்படியாவது இவளைக் காப்பாத்துங்க, டாக்டர்!” இப்படி டி.பி.யை ஆரம்பத்தில் அலட்சியமாக விட்டுவிட்டு நோய் முற்றிய பிறகு அல்லல்படுவோர் நம் நாட்டில் அதிகம். நவீன மருத்துவத்தில் இன்றைக்கு டி.பி.யைக் குணப்படுத்த ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் எனப் பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. இவை முதல்நிலை டி.பி.யைக் குணப்படுத்துகின்றன. இவற்றை ஆறு மாதங்களுக்கு  ஒருநாள்கூட நிறுத்தாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டியது முக்கியம். தவறினால், நோயானது உடம்பை உருக்கி எலும்பும் தோலுமாக ஆக்கிவிடும்.

ரத்த வாந்தி வந்து மரணத்துக்குப் பாதை போடும். டி.பி. சிகிச்சைக்கு நிறைய செலவாகுமோ எனப் பயப்பட வேண்டாம். ‘டாட்ஸ்’ (DOTS- Directly observed treatment short course) எனப்படும் ‘கூட்டு மருந்துச் சிகிச்சை’ அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கிறது.
ஆனால், நடப்பது என்ன? மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குள் டி.பி.யின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என நினைத்துப் பலரும் மருந்து சாப்பிடுவதை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். இன்னொன்று, தனக்கு டி.பி. இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால் சமூகத்தில் மரியாதை குறைந்துவிடும் என்று பயந்தே பலர் சிகிச்சை மேற்கொள்ள முன்வருவதில்லை.

டி.பி. மருந்துகளை விட்டுவிட்டு சாப்பிடும்போதும், பாதியில் நிறுத்திவிடும்போதும், கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலைப் பெற்றுவிடும். ஏற்கனவே கொடுத்துவந்த மாத்திரைகளால் அதன்பிறகு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. இதன் விளைவாக, நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத டி.பி.யாக (Multi Drug Resistance TB) மாறிவிடும். இதற்குக் குறைந்தது இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மருந்துச் செலவும் பல மடங்கு அதிகம்.

மேலும், இவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகின்ற டி.பி.யும் மருந்துக்குக் கட்டுப்படாத நோயாகவே பரவுகிறது. தமிழகத்தில் மட்டும் வருடத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த நிலைமையில் கண்டறியப்படுகிறார்கள். இவர்கள் இந்த நிலைமையிலும் சிகிச்சையை சரியாகப் பெறாவிட்டால், இன்னும் தீவிர நிலை டி.பி.யாக (Extreme Drug Resistance TB) உருமாறும். இது, எமனே வந்து நெஞ்சில் உட்கார்ந்துகொள்கிற மாதிரி உயிருக்கு ஆபத்தைத் தருகிற நிலைமை.

சுகாதாரத்தில் மேம்பட்டுவிட்ட இங்கிலாந்து போன்ற உலக நாடுகள் பலவற்றில் டி.பி. கட்டுப்பட்டுவிட்டது. ஆனால், சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள நம் நாட்டில் இதை ஒழிப்பது பெரும் சவாலாகவே உள்ளது. காரணம், நம்மவர்கள் சுற்றுப்புறத்தை நோய்த் தொற்றுப்புறமாக மாற்றுவதில் வல்லவர்கள். அதிலும் டி.பி. நோயாளிகள் எச்சில், சளி போன்றவற்றைத் துப்பும் உணர்வுக்கு அதிகமாக உள்ளாவார்கள். பொது இடம் என்றுகூட பார்க்காமல் இவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் கிருமிகள் காற்றின் வேகத்தில் பரவுகின்றன.

கைக்குட்டையால் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சாதாரண பழக்கம்கூட அநேகரிடம் இல்லை. ஒருவர் துப்பும் எச்சிலில் டி.பி. கிருமி இருந்தால் அது 30 பேரைப் பாதிக்கும். கடைசியாக ஒன்று... புகைப்பழக்கம் டி.பி. பரவுவதற்குத் துணைபோகிறது. இந்தியாவில் மட்டும் 70 லட்சம் இளைஞர்கள் புகைபிடிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இவர்களெல்லாம் டி.பி.யிடம் தங்கள் விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள்! நாம் எப்போது விழித்துக்கொள்ளப் போகிறோம்?

டி.பி.யால் பாதிக்கப்படும் உறுப்புகள்

1. நுரையீரல் மற்றும் நுரையீரல் உறை 2. எலும்பு மூட்டு 3. சிறுநீரகம் 4. நிணநீர்ச் சுரப்பி 5. குடல் 6. குரல்வளை 7. முதுகுத் தண்டுவடம் 8. கண் 9. தோல் 10. மூளை மற்றும் மூளை உறை 11. விந்துக்குழல் 12. கருப்பை இணைப்புக் குழல்.

இது புதுசு!

டி.பி.யை உறுதி செய்ய சளிப் பரிசோதனைதான் பெரிதும் உதவுகிறது. காலையில் எழுந்ததும் முதல் சளியைப் பரிசோதிப்பதுதான் சரி. ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. குழந்தைகள் விஷயத்தில் இன்னும் சிரமம். இதற்கெல்லாம் தீர்வாக வந்துள்ளது ‘எக்ஸ்பெர்ட் எம்.டி.பி. /ஆர்.ஐ.எஃப் பரிசோதனை’ (Xpert MTB/RIF Test).

ஒவ்வொரு வகை பாக்டீரியாவிலும் அந்தந்த ஜீன் வகை (Geno type) இருக்கும்.  டி.பி.யின் ஆரம்பத்தில் சளியில்தான் பாக்டீரியாக்கள் வெளிப்படும். சளியைப் பக்குவப்படுத்தி, அதிலுள்ள பாக்டீரியாவின் ஜீனிலிருந்து டி.என்.ஏ.வைப் பிரித்தெடுத்து, பி.சி.ஆர். தெர்மல் சைக்ளர் (PCR Thermal Cycler) எனும் கருவிக்குள் செலுத்திப் பார்த்தால், அதில் எவ்வகையான ஜீன்  இருக்கிறது என்பது தெரியும். டி.பி. கிருமியின் ஜீன் வகை இருக்கிறது என்றால், அவருக்கு டி.பி. இருக்கிறது என்பது  உறுதியாகும். சளியில் ஒன்றிரண்டு பாக்டீரியாக்கள் இருந்தால்கூட நோயைக் கண்டுபிடித்துவிடலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

மேலும், டி.பி.யைக் குணப்படுத்தும் ரிஃபாம்பிசினுக்கு இந்த பாக்டீரியா கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்பதையும் தெரிவித்துவிடும். சமீபகாலமாக இந்த மருந்துக்கு டி.பி. கிருமிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நோயைக் குணப்படுத்துவது சிரமமாக உள்ளது. ஆகவே, சிகிச்சையின் ஆரம்பத்திலேயே இவை ரிஃபாம்பிசினுக்குக் கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்பதைத் தெரிந்துகொண்டால், அதற்கேற்ப சிகிச்சை பெறலாம் என்பது கூடுதல் நன்மை. இந்த வசதி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ளது.

வாசகர் கேள்விகள்

மூச்சுப் பயிற்சி எப்படி ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துகிறது?
-வ.கஸ்தூரி, திண்டுக்கல்.

தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்யும்போது, ஏற்கனவே சுருங்கிய நிலையில் இருக்கும் மூச்சுக் குழாய்கள் நன்கு விரிந்து கொடுக்கின்றன. அங்கு ஏற்பட்டிருந்த சுவாசத் தடை நீங்கிவிடுகிறது. சுவாசம் எளிதாகிறது. வீசிங் பிரச்னைக்கு இடமில்லாமல் போகிறது. ஆஸ்துமாவுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தரப்படும் மருந்துகளுக்கு அதிகம் பக்க விளைவுகள் இருக்கும் என்றும், மாற்று மருத்துவத்தில் அது இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இது உண்மையா?
-எல்.சஞ்சீவிக்குமார், சென்னை-25.

இது வேண்டுமென்றே பரப்பப்படும் பொய். ஆங்கில மருந்துகளின் மூலக்கூறுகள் என்ன, விளைவுகள் என்ன, பக்கவிளைவுகள் என்ன என்பது போன்ற விவரங்கள் வெளிப்படையாகத் தெரியும். மருத்துவரின் மேற்பார்வையில் சரியான அளவில் இவற்றை எடுத்துக் கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. ஆஸ்துமாவைப் பொறுத்தவரை இன்ஹேலரை ஆயுள் முழுவதும் எடுத்துக்கொண்டாலும் பக்கவிளைவுகளுக்கு இடமில்லை. ஆனால், மாற்று மருத்துவத்தில் தரப்படுகிற மருந்துகளின் விவரங்களை பரம ரகசியமாக வைத்துக்கொள்கிறார்கள். அவற்றிலும் பக்கவிளைவுகள் உண்டு. என் அனுபவத்தில் மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற்று, அதன் பக்கவிளைவால் சிறுநீரகம் கெட்டு, அதற்கு நான் சிகிச்சை அளித்திருக்கிறேன்.

(இன்னும் பேசுவோம்...)