கடக லக்னத்துக்கு சந்திரனும் செவ்வாயும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம் : மணியம் செல்வன்

மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரன், ஆஸ்தி, சொத்து, சுகங்களையெல்லாம் அனுபவிக்கும் வாழ்வை அருள்பவனும் ஆவான். அதாவது மனதை அந்தந்த விஷயங்களிலெல்லாம் ஆழச் செய்யும் சக்தி உடையவன். நடைமுறை வாழ்க்கையில் கிடைத்திருக்கும் வசதிகளை நன்கு அனுபவிக்கச் செய்பவனே சந்திரன்தான். நான்கு கோடி ரூபாயில் வீட்டைக் கட்டிவிட்டு அதில் இருக்க முடியாமல் நகரத்தின் நெரிசலில் வாடகை வீட்டில் இருக்கச் செய்யும் சூழலை உருவாக்குபவனும் சந்திரனே. சந்திரனோடு செவ்வாய் சேர்ந்தால் கிடைப்பது சந்திர மங்கள யோகம் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன.



பாக்கியம் என்று சொல்வார்களே, அதாவது நம் முயற்சியில்லாமல் நம்மை வந்து சேரும் விஷயங்களை அனுபவித்தல். அதைக் கொடுப்பதுதான் இந்த கிரக அமைப்பு என்றால் அது மிகையில்லை. சந்திரன் மனதால் கனவுகளைக் காண வைப்பார். செவ்வாய் அதை நடைமுறைக்கு கொண்டு வந்து கொடுப்பார். பெரிய ஜவுளிக்கடை முதலாளியாக இருப்பார். ஆனால், அவரின் உடைகள் ஏனோ அவ்வளவு சாதாரணமாக இருக்கும். பார்ப்பதற்கு தொழிலாளி போல காட்சி தருவார்.

இது எல்லாமுமே சந்திரனின் வேலைதான். சந்திரனும் செவ்வாயும் சேர்ந்தால் அழகு கலந்த மிடுக்கோடு இருப்பார்கள். ‘‘ஆணையிடு தலைவா! செய்து காட்டுகிறோம்’’ என்று எங்கேனும் எவரிடமேனும் சொல்லப்பட்டால், அவருக்கு சந்திரனும் செவ்வாயும் பலமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

கடக லக்னத்திற்கு இந்த செவ்வாயும் சந்திரனும் இணைந்து மிகுந்த யோகத்தைத் தருவார்கள். கடக லக்னத்திற்கு ஐந்தாமிடமான திரிகோணத்திற்கும், பத்தாமிடமான கேந்திரத்திற்கும் பிரபல யோகாதிபதியாக செவ்வாயே வருகிறார். இந்த இரண்டு கிரகங்களின் இணைவால் சத்புத்திரர்கள் எனும் அறிவாற்றலோடு விளங்கும் குழந்தைகள் பாக்கியமும், பூர்வீகச் சொத்து, கௌரவமான பதவி, தர்ம காரியங்களில் ஈடுபாடு என்று எல்லா சுப யோகங்களும் கிடைத்தபடி இருக்கும். இப்படிப்பட்ட இந்த இருவரும் ஒவ்வொரு ராசிகளிலும் நின்றால் என்னென்ன பலன்களைத் தருவார்கள் என்று பார்ப்போமா!

முதலில் கடக லக்னமான ஒன்றாம் இடத்தில் இவர்கள் அமர்கிறார்கள். ஆனால் கடகத்தில் செவ்வாய் நீசமாகிறார். இருந்தாலும் இவர் ராஜ யோகம் தருவார். ‘நீச நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சமாகின் நீசபங்க ராஜயோகம்’ என்றொரு பாடலே உண்டு. செவ்வாய் நீசமானாலும் சந்திரன் இங்கு ஆட்சி பெறுவதால், செவ்வாயை இவர் நன்றாக இயக்குவார். அதாவது சந்திரன் தன் பலத்தினால் நன்கு ஆட்சி செய்வார்.

இந்த அமைப்புள்ளவர்கள் பொதுவாக யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். செவ்வாய் கொஞ்சம் பலம் குன்றியிருப்பதால் எல்லாமுமே தாமதமாகத்தான் கிடைக்கும். வீடு, சொத்து சுகமெல்லாம்கூட தாமதப்பட்டுத்தான் கிடைக்கும். தாயாருக்கு கழுத்து வலி, காது வலி போன்ற பிரச்னைகள் அவ்வப்போது வந்து நீங்கும். குழந்தை பாக்கியம் கூட தடைபட்டுத்தான் கிடைக்கும். ஆனால், திடீரென்று வரும் அதிர்ஷ்டம்போல் ராஜயோக வாழ்க்கை அமைந்துவிடும்.



இவர்கள் நிலம் வாங்கும்போது தாய்ப் பத்திரங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் வாங்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அவ்வப்போது மாறுபட்டுக் கொண்டே இருக்கும். சிம்மத்தில் சந்திரனின் வலிமை குறைந்து செவ்வாயின் ஆதிக்கம் அதிகரிக்கும். இந்த அமைப்பு உள்ளவர்களின் பேச்சே மிடுக்காக இருக்கும். சாதாரணமாகப் பேசினாலே அதட்டுவது போல இருக்கும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நிறைய விஷயங்களைச் செய்வார்கள். 

எதையுமே இவர்கள் பிரமாண்டமாகச் செய்தே பழக்கப்பட்டிருப்பார்கள். அதனால், அவ்வப்போது நிறைய ஆடம்பரச் செலவுகளைச் செய்து கையை சுட்டுக் கொள்வார்கள். வீடு, மனை, வசதி வாய்ப்புகள் எல்லாம் இருக்கும். கண்களில் சிறு தொந்தரவு வந்தால் கூட கவனம் வேண்டும்.


கன்னி ராசி என்பது சந்திரனுக்கும் செவ்வாய்க்குமே கொஞ்சம் மத்திமமான வீடுதான். இந்த இரு கிரகங்களும் இங்கு அமரும்போது, பொதுவுடமை சித்தாந்தம் மனதில் மேலோங்கி இருக்கும். சமூகத்தைக் குறித்து அதிகமாகக் கவலைப்படுவார்கள். இளைய சகோதரர்மீது உயிரையே வைத்திருப்பார்கள். ஆனால், அவர் இவரை ஏமாற்றிக்கொண்டு திரிவார். காதில் கடுக்கண் போட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு விஷயமும் நீடித்த முயற்சிக்குப் பிறகுதான் இவர்களுக்கு கிட்டும். இவர்களில் பெரும்பாலானோர் புரட்சியாளராக வெடிப்பதுண்டு.
 
நான்காம் இடமான துலாம் ராசியில், அதாவது மாத்ரு, சுக, வாகன ஸ்தானத்தில் இவ்விரு கிரகங்களும் அமைந்திருந்தால், அடிப்படையிலேயே சொத்து சுகங்களுக்கு எவ்விதக் குறைவும் இருக்காது. பதிப்புத் துறையில் கால் பதித்து வெற்றி காண்பார்கள். தாய்வழிச் சொந்தங்கள் மிகவும் அனுகூலமாக இருபார்கள். விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதும் விற்பதுமாக இருப்பார்கள். தானே ஈடுபட்டு ஏதேனும் வித்தையைக் கற்றுக் கொள்வார்கள். மிக எளிதாக இவர்களோடு பெண்கள் பழகுவார்கள். மாடித் தோட்டம் அமைப்பதில் மிகவும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். பின் வயதில் பண்னை வீட்டில் வசிப்பார்கள்.

விருச்சிகத்தில் சந்திரன் நீசமானாலும், செவ்வாய் மிகவும் வலுவாக ஆட்சி பெற்று அமர்கிறார். இவர்களின் குழந்தைகள் தைரியத்தோடும் வீரத்தோடும் விவேகத்தோடும் இருப்பார்கள். மரபான விஷயங்களில் ஈடுபாடு காட்டி கற்றுத் தெளிவார்கள். இவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் மிகவும் கறாரான விமர்சனப் போக்கைக் கொண்டிருப்பார்கள். மூதாதையர்களை மிகவும் மதித்து அவர்களின் நினைவாக ஏதேனும் ஸ்தாபனத்தைத் தொடங்குவார்கள்.

மறந்துபோயும் தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள். தானாக நல்லது நடக்கும் என்றுதான் எப்போதும் பேசுவார்கள். இவர்கள் சிறிய கம்பெனியோ, அல்லது பெரிய கம்பெனியிலோ, வேலைக்குச் சேர்ந்தால் அங்குள்ள முதலாளிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். அல்லது அவர்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். தனுசு ராசியில் இந்த இரு கிரகங்களும் நின்றால் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ‘‘ஏதாவது சாதிக்காமல் மறைய மாட்டேன்’’ என்றே பேசுவார்கள்.

செவ்வாய் ஆறில் இருப்பதை விசேஷமாகத்தான் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், எப்போதும் ஏதாவது புலம்பியபடி இருப்பார்கள். எத்தனை வசதி வந்தாலும் நிம்மதியே இல்லையே என்று சொல்வார்கள்.  ஏனெனில், இன்னும் இன்னும் என்கிற பேராசை உணர்வு வளர்ந்துகொண்டே இருக்கும். இவர்கள் உறவினர்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களால் இவர்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இருக்காது.

மகரத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் வாழ்க்கைத் துணைவர் சரியானபடி அமைவார். அழகும் கம்பீரமும் அந்தஸ்தும் மிக்கவராக இருப்பார். போக உணர்வு மிகுதியாக இருக்கும். பெரும்பாலும் மத்திம வயது வரை வெளிநாட்டில் வசித்துவிட்டு பிறகுதான் தாய்நாடு திரும்புவார்கள். எப்போதும் ஒரே தொழில் செய்யாமல் பல்வேறு இணை தொழில்களைச் செய்து முன்னேறிக் கொண்டிருப்பார்கள். மிகச் சரியான தூதுவராக இவர்கள் செயல்படுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் சமாதானப்படுத்திப் பேசுவதில் இவர்கள் வல்லவர்களாக விளங்குவார்கள்.

கும்பத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்தால் சொந்த ஊரை விட்டு வெளியேறி விடுவார்கள். பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகளை சந்தித்தபடி இருப்பார்கள். ரத்த பந்தங்களிடமும், சொந்தங்களிடமும் நிறைய ஏமாறுவார்கள். அன்புக்கு ஏங்குவார்கள். இவர்களில் சிலருக்கு சிறிய வயதிலேயே தாயாரின் இழப்பு ஏற்படும். ஆனால், இவர்கள் தங்களின் தாய்மொழி இல்லாத வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டில் சென்று வசித்தால் பிரகாசிக்கலாம். கும்பத்தில் அவ்வளவான நற்பலன்கள் கிடைக்காது.

மீனத்தில் சந்திரனும் செவ்வாயும் இருந்தால், தந்தையாருக்கும் மகனுக்கும் இடையே ஈகோ பிரச்னை இருந்துகொண்டே இருக்கும். இங்கு சந்திரன் மாத்ரு எனப்படும் தாய்க்கு உரிய கிரகமாக இருப்பதால், தாயாரானவர் மகனுக்கும் தந்தைக்கும் இடையே அடிக்கடி சமாதானம் செய்து வைத்தபடி இருப்பார். ‘‘அப்பாவை எப்போ பார்த்தாலும் குறை சொல்லாதப்பா. அவரு உன் நல்லதுக்குத்தான் சொல்றாரு’’ என்பார். ஏனெனில், செவ்வாய் தன்மான கிரகமாக இருப்பதால், எல்லாவற்றிற்கும் கௌரவம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் செய்யும் தொழிலை ஏற்று நடத்தாமல், வழக்கமான பாதையிலிருந்து விலகி வித்தியாசமாக யோசிப்பார்கள்.

மேஷம் தர்ம கர்ம ஸ்தானமாக அமைந்து அங்கு இவ்விரு கிரகங்களும் அமரும்போது சொந்தத் தொழிலையே விரும்பிச் செய்வார்கள். எலெக்ட்ரிக்கல் துறை, கட்டுமானத் துறை, ரியல் எஸ்டேட், உளவியல் நிபுணர் என்று விளங்குவார்கள். அரசியல் துறையில் ஈடுபடுவார்கள். மாபெரும் நிறுவனத்தில் தலைவருடைய அந்தரங்க காரியதரிசியாக இருப்பார்கள். இயக்குனரையே இயக்குபவராக வளருவார்கள். ரிஷப ராசி கடக லக்னத்திற்கு பாதக ஸ்தானமாக வருகிறது.

ஆனால், செவ்வாய் சந்திரனோடு இணைந்து பதினொன்றில் இருப்பதால் பாதகாதிபத்தியம் நீங்குகிறது. தீயபலன்கள் குறைந்து நற்பலன்களே கிடைக்கின்றன. மூத்த சகோதரர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். சம்பாதித்த பணத்தை சரியானபடி சேமிக்கவும் செய்வார்கள். கணுக்காலில் சிறு வலி வந்தாலும் எச்சரிக்கையாக இருந்து உடனே பார்த்துவிட வேண்டும். மிதுனத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் அவ்வளவாக  நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த ராசியிலுள்ள புனர்பூச நட்சத்திரத்தில் அமர்ந்தால் பரவாயில்லை. இவர்கள் கொஞ்சம் சாடிஸ்ட்டாக இருப்பார்கள். பாதி மனிதன், பாதி மிருக குணங்களோடு இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் நெருங்கிப் பழகவே பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு மத்திம வயதுக்குப் பிறகு சிறிது நாட்கள் மனப் பிறழ்ச்சி நிகழும் அபாயமும் உண்டு.

பொதுவாக இந்த கிரக அமைப்பானது சந்திர மங்கள யோகத்தையே குறிக்கிறது. பெரும்பாலான இடங்களில் இந்த இணைப்பால் நேர்மறைப் பலன்களே கிடைக்கின்றன. சில இடங்களில் மட்டுமே எதிர்மறையான பலன்கள் ஏற்படும். அதையும் தவிர்த்து நேர்மறை கதிர்வீச்சுகள் கிடைக்க சில தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்தால் போதும். அப்படிப்பட்ட தலமானது எப்படி இருக்க வேண்டுமெனில், தகப்பனை மகன் வணங்கும் க்ஷேத்ரமாகவும், கூடவே அங்கு தாயும் இருந்தால் அது மிகச் சரியாக இவர்களுக்குப் பொருந்தும்.

அப்படிப்பட்ட தலமே குருவிமலை ஆகும். இத்தலத்தில் முருகன் சிவபெருமானை பூஜிக்க, அதை அருகிலிருந்து தாயார் பார்த்தபடி இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. கோயிலின் கோபுரத்திலேயே இதை சுதைச் சிற்பமாக வடித்திருக்கின்றனர். உங்கள் சொந்த ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் சேர்ந்திருந்தால் நிச்சயம் இத்தலத்திற்குச் சென்று தரிசித்து வாருங்கள். இத்தலம் திருவண்ணாமலை - போளூர் பாதையிலுள்ள கலசப்பாக்கத்திற்கு மிக அருகிலேயே உள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)