ஆதவனே போற்றி!
டாக்டர்.உ.வே.வெங்கடேஷ் அவர்கள் எழுதும் அனந்தனுக்கு 100 நாமங்கள் தொடர் சிறப்பாகவும், சுவையாகவும் உள்ளது. சில சொற்களுக்கு அவர் விளக்கம் தருவது வாசகர்களுக்கு விருந்தாக அமைகிறது. - M. இராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.
ஆதி மனிதனின் முதல் வழிபாடான சூரிய நமஸ்காரத்தை சங்கராந்தியன்று கொண்டாடுவதே மிகப்பெரிய யக்ஞம் என்று உணர்த்திய தத்துவ ரூபம் நிதர்சனமான உண்மை. அதனால்தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்களோ! சூரியக் கிரணங்கள் நமக்கும், தெய்வத்துக்குமான இணைப்புப் பாலம் என்றும் விளக்கியதால் நம்மை வாழ வைக்கும் சூரிய பகவானுக்கு நன்றி திருவிழாவாக தைப்பொங்கலை கொண்டாடினோம். - அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
அழகாக மட்டுமல்ல முற்றிலும் மாறுபட்ட மணியன் செல்வனின் வண்ணப்படத்துடன் தைத்திங்களின் சிறப்புகள் வைகுண்ட ஏகாதசி குறித்த படைப்புகளுடன் ஆன்மிகம் புத்தாண்டு பரிசாக கிடைத்து உள்ளது. - ப. மூர்த்தி, பெங்களூரு - 97
சூரியன் பூஜித்த தலங்கள், பலவற்றைத் தெரிந்து கொண்டதோடு, திருவேதிக்குடி தலபுராணத்தில் சூரியன் பூஜித்த தலங்கள் குறித்த பாடலும் அறிய வாய்ப்பு கிடைத்தது. - முனைவர்.இராம.கண்ணன், சாந்தி நகர், திருநெல்வேலி - 627002.
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் பகுதியில் ‘சத்ருக்கனன்’ பற்றி இதுவரை பலர் கேள்விப்படாத பலவற்றை தெரிந்து கொண்டோம். தசரத புத்திரர்களுக்கு பெயர் சூட்டியவர் ‘வால்மீகி முனிவர்’ என்பது புதிய செய்தி. பேச்சு வழக்கில் ராம-லட்சுமணர் பரத சத்ருக்கனன் என்று சொல்லக் கேட்டுள்ள நமக்கு கோசலை மைந்தனுக்கு ராமனுடன் அருகிலிருந்தவன் சத்ருக்கனன் என்பதால் கோசலை புத்திரனல்ல என்பதும் சத்ருக்கனன் சுமத்திரை புத்திரன் என்பதும் ஆழங்காற்பட்டது. - காவிரி புனிதர் அரிமளம். R.தளவாய் நாராயணசாமி, பெங்களூரு-76.
தை திங்கள் வைகுண்ட ஏகாதசி பக்தி ஸ்பெஷலாக வலம் வந்து பல்வேறு பக்தி தகவல்களை பரிமாறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தன. 2020 ஆங்கிலப் புத்தாண்டுக்கான நட்சத்திர ராசி பலன்களை அள்ளி வீசி அகம் நெகிழச் செய்து நன்கு அசத்தி விட்டீர். ஆன்மிகம் பலன் இதழ் மகிமையே தனி என்பதனை நன்கு மெய்ப்பித்து வருகிறது. மிக்க நன்றி! பாராட்டுக்கள்! ஆன்மிகம் பலன் இதழ் கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்றால் அது மிகையன்று. - துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.
மகர சங்கராந்தியை பற்றி விளக்கம் அதித்யனின் அருட்குணங்களை அறிந்தேன். மனதாறுவணங்கினேன். தாங்கள் வழங்கிய 2020 புத்தாண்டு நட்சத்திர ராசிபலன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக சந்தோஷத்தைத் தந்தது. ஈசனை வணங்கிய சூரியத்தலங்கள் கட்டுரைத்தொகுப்பு அரியதொரு ஆன்மிகப் புதையல் அள்ளி சுவைத்தோம் அருமை. - எஸ்.சுந்தர், N.G.O. ‘A’ காலனி, திருநெல்வேலி.
பொறுப்பாசிரியரின் தலையங்க கட்டுரையைப் படித்தேன். இது எனக்காகவே எழுதியதுபோலிருந்தது. உண்மையான குரு வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறியது எனக்கு பெரிதும் வழிகாட்டியாக உள்ளது. ஹரிபிரசாத் சர்மா அவர்களின் தெளிவு பெறுஓம் பகுதி மூலம் மிகவும் அருமையாக அறிவியல் மற்றும் தற்போதைய நமது வாழ்வியலில் நமது இந்து மத தர்மத்தை கடைபிடிக்க எளிய முறையில் விளக்கம் தருவது மிகவும் போற்றுதலுக்குரியது. ‘மயிலார் என்றால் என்ன?’ கட்டுரை இதுவரை அதிகமாக அறியப்படாத செய்திகளை தந்தது அருமை. அதேபோல ராமாயணத்தில் ராமர், லட்சுமணன், மற்றும் பரதன் பற்றிய அநேகர் அறிந்துள்ளோம். சத்ருக்கனன் பற்றிய கட்டுரையும் அரியதான ஒன்றே! - ப.த.தங்கவேலு, டைவர்ஷன் ரோடு, பண்ருட்டி-607106.
|