வியப்பூட்டிய வித்யா ஸ்வரூபிணி
‘பேச்சியம்மன் எனும் சரஸ்வதி தேவி’ என்ற தொகுப்பு கிராமங்கள் தோறும் சென்றடையத்தக்கது. பேச்சி+பேச்சாயி+பெரியாயி+பெரியாண்டியம்மன்+பேராச்சி என்று ஆழமாக விளக்கம் தந்த சு.இளம் கலைமாறனின் கட்டுரைகள் அருமை. அந்த கட்டுரைகள் அனைத்துமே கலைவாணிக்கென்று கோயில்கள் குறைவு என்றாலும் பேச்சி அம்மன் உட்பட பல நாமங்களின் சக்தியில் அவள் நீக்கமற நிறைந்திருக்கிறாள். என்பதை காட்டுகிறது.
- ஆர்.ஜே.கலியாணி, திசையன்விளை-627657. - இரா.வளையாபதி, 51, தோட்டக்குறிச்சி அஞ்சல், - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன் புதூர். - ஆர் ஜி.பாலன்
கலைமகளாம் சரஸ்வதி எனும் அம்மன் குறித்த மாறுபட்ட மற்றும் முற்றிலும் புதுமையான வண்ணப்படத்துடன் சுவையான அதேநேரத்தில் மிகச் சிறப்பான முறையில் கட்டுரைகளை வாசகர்கள் மனதில் பதியும் வண்ணம் வெளியிட்டிருப்பதை வரவேற்கிறேன். - ப.மூர்த்தி, பெங்களூரு-97
அக்டோபர் 1-15 இதழ் படித்தேன். தலையங்கம் முதல் கடைசி பக்கம் வரை பேச்சியம்மன் எனும் சரஸ்வதி தேவி ஆன்மிகத்தின் பெட்டகம். சு.இளம் கலைமாறன் ரொம்பவே அசத்தி விட்டார். பாராட்டுக்கள். - தஞ்சை ஹேமலதா,வெண்டையம்பட்டி.
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் வரிசையில், கொடுமனக்கூனி குறித்து, சீர்மிகு பி.என்.பரசுராமன் அவர்களின் எண்ணச் சிதறல்களை ஆன்மிகம் பலன் அள்ளித்தந்தது. ‘‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’’ என்ற முதுமொழிக்கு ஏற்ப கேகயன் மடந்தையான கைகேசியை, மந்தார என்னும் கூனி மனம் மாற்றவில்லையெனில், ராமாயணம் ஏது? ராவண வதம் ஏது? அருமையான ஆன்மிகச் சிந்தனை! - முனைவர் ராம.கண்ணன், திருநெல்வேலி-2.
உரத்துச் சொல்கிறோம். வெண்தாமரைச் செல்வியின் சொல்லாட்சி சொல்லி முடியாது. இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேன் துளி அல்ல! பெருவெள்ளம்! குறை ஒன்றும் இல்லை கோவிந்தாவின் மதிவண்ணன் மதி ஒளி சந்திரோதயம்தான். மொத்தத்தில் குறை சொல்ல குறையொன்றும் இல்லை என்ற குறை உணர்ந்ததான் எங்கள் குறை! பொறுப்பாசிரியர் கிருஷ்ணாவின் கர்ம யோக ரகசியம் தேர்தட்டில் இருந்து பார்த்தனுக்கு உபதேசித்த கிருஷ்ண பரமார்த்தாவை நினைவூட்டியது. - காவிரி புனிதர் அரிமளம். R.தளவாய் நாராயணசாமி, பெங்களூரு-76.
சரஸ்வதி பூஜை வரும் இத்தருணத்தில் சகலகலா சரஸ்வதி, நீலசரஸ்வதி, பாலா சரஸ்வதி, அஹிம்சா சரஸ்வதி, நித்யா சரஸ்வதி, வாக்வாதினி சரஸ்வதி, அட்சர சுந்தரி, அட்சய மாலை என எட்டு தலைப்புகளில் சரஸ்வதி பற்றிய ஆன்மிக குறிப்பு வெளியிட்டு வாசகர்கள் சரஸ்வதி பற்றிய புதிய தகவலை தெரிந்துகொள்ளச் செய்த ஆன்மிகம் பலன் இதழின் ஆன்மிக பணிக்கு பாராட்டுக்கள். - K. சிவக்குமார், சீர்காழி.
எந்தச்செயலைச் செய்தாலும் அதனுடன் ஒன்றி முழுமையாக நம்மை அர்ப்பணித்துச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதே கர்ம யோகத்தின் ரகசியம் என்ற உண்மையை ‘நலந்தானே’வில் கூறியிருந்தது மனதில் ஆழமாகப் பதிந்தது. - மு.மதிவாணன், அரூர்-636903.
‘ஆன்மிகம் பலன்’ தலையங்கத்தில் பொறுப்பாசிரியரின் ‘கர்ம யோக ரகசியம்’ பற்றி படித்திராத ஒன்றாக இருந்தது. இதற்கான உவமைகள் படிக்கப் படிக்கத் தெளிவாகவே புரிந்தது. இப்படி பயனுள்ளவைகளை ‘ஆன்மிகப் பலனி’ல் படிப்பதை பெருமையாக கொள்கிறோம். - எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம், வந்தவாசி-604408.
|